சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு
அவன் தன் வழக்கத்தின்படி வயல் வெளிகளில் உலாவிக் கொண்டிருந்த ஒரு நாள்: தன்னுடைய புத்தகத்தை வாசித்து வாசித்து, மிகுந்த துக்கசாகரமுள்ளவனாய் இருக்கிறதை நான் கண்டேன். அவன் வாசிக்க, வாசிக்க முன் போல வாய்விட்டு அலறி (அப்போஸ்தலர் 16 : 30, 31) “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்று அழுதான். இப்படிச் சொல்லிக் கொண்டது மல்லாமல், எந்த திசையாய் ஓடலாம் என்று பார்க்கிறவனைப்போல், அந்த மைதானத்தில் அவன் அங்கும் இங்கும் சாடப் போகிறதைப் போலவும் நான் கண்டேன். என்றாலும் அவன் ஓடும் இடம் அறியாதிருந்ததால் நின்ற நிலையிலேதான் நின்றான். அவன் என்னதான் செய்கிறான் பார்ப்போம் என்று நான் அவனைப் பார்த்த வண்ணமாய் இருந்தேன். அப்பொழுது அந்த மைதான வழியாய் சுவிசேஷகன்1 என்னும் பெயருடைய ஒருவர் வந்தார். அவர் இந்த மனுஷனண்டை போய் ஏன் அப்பா அழுகிறாய்? என்று கேட்டதையும் கண்டேன். அவன் சொல்லுகிறான்: ஐயா, என் கையில் இருக்கிற இந்தப் புஸ்தகத்தினால் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும், மரணத்துக்குப் பின் நான் நியாயந் தீர்க்கப்பட வரவேண்டியவன் என்றும் (எபிரேயர் 9 : 27) உணருகிறேன். மரண தண்டனையை அனுபவிக்கவோ எனக்கு மனதில்லை (யோபு 16 : 21, 22) நியாயத்தீர்ப்புக்கு வரவோ என்னால் இயலாது (எசேக்கியேல் 22 : 14) என்று அறிகிறேன் என்பதாய்ச் சொன்னான்.
அதற்கு சுவிசேஷகன்: சாக ஏன் உனக்கு மனதில்லை அப்பா? இந்த வையகத்தின் பாடுகளுக்கு ஒரு கணக்கு இல்லையே என்றார். அதற்கு அவன்: ஐயா ! அது நிஜம்தான், ஆனால் இதோ பாரும், என் முதுகில் இருக்கும் பாரச் சுமை என் சாவோடு இறங்கி, கல்லறையோடு தொலைந்து போகாமல் நரக பாதாள மட்டும் என்னை இழுத்துக் கொண்டு போய் நித்தியாக்கினிப் பள்ளத்தில் உருட்டித் தள்ளிவிடுமே (ஏசாயா 30 : 33) பூலோக சிறைகளில் இருக்கும் அவஸ்தைகளைத் தாங்க என்னால் ஆகாதானால், நியாயந்தீர்க்கப் படவும், பாதாள லோகத்து அக்கினிப் பள்ளத்தின் நித்திய வேதனைகளை சகிக்கவும் என்னால் இயலுமா? இந்த எண்ணங்கள் தான் என் மனதைப் புண்ணாக்கி, பெருமூச்சுவிடவும், அழவும் பண்ணுகிறது என்று சொன்னான்.
உன் நிலைமை இப்படியானால் வேலையும், ஜோலியும் இல்லாத வனைப் போல் ஏன் இந்த வனத்தில் நின்று கொண்டிருக்கின்றாய்? என்று சுவிசேஷகன் கேட்டார். அதற்கு அவன்: ஐயா! நான் எங்கே போக வேண்டும் என்று எனக்குத் தெரியாமல்தான் இந்த வனத்தில் பெருமூச்சு விட்டுத் திரிந்தலைகின்றேன் என்றான். அப்போது சுவிசேஷகன் ஒரு சுருளை அவன் கையில் கொடுத்து இதைப் படித்துப் பார் என்றார். அவன் அதை மெதுவாக விரித்து வாசிக்கவே, “வருங் கோபத்துக்கு பறந்தோடிப் போ” (மத்தேயு 3 : 7) என்ற வாசகம் பெரிய எழுத்துக் களால் எழுதியிருக்கிக்கிறதைக் கண்டான்.
அவன் சுவிசேஷகனுடைய முகத்தைக் கனிவோடு பார்த்து, நான் எங்கே ஓடவேண்டும் ஐயா? என்று கேட்டான். சுவிசேஷகன் தன் கையை நீட்டி (விஸ்தாரமான ஒரு வனத்துக்கப்பால் காட்டி) அதோ இருக்கிறதே அந்த திட்டிவாசல்2 உனக்குத் தெரியுதா? (மத்தேயு 7 : 13, 14) என்று கேட்டார். ஒன்றும் தெரியவில்லையே என்று புலம்பினான். அப்புறம் சுவிசேஷகன்: அதோ தூரத்தில் பிரகாசிக்கிற வெளிச்சமாவது3 தெரிகிறதா? (சங்கீதம் 119 : 105 2 பேதுரு 2 : 19) என்று கேட்டார். ஆம் ஐயா, ஆம், அதோ தெரிகிறாப் போல் இருக்கிறது என்றான். அப்புறம் சுவிசேஷகன்: அந்த வெளிச்சத்தையே நீ நோக்கிக் கொண்டு நேரே நடந்து போ, அங்கே போனால் அந்த திட்டிவாசல் தெரியும். வாசலண்டை போய் தட்டினால் நீ செய்ய வேண்டியது இன்னதென்று அங்கே உனக்குச் சொல்லப்படும் என்று சொன்னார்.
1. சுவிசேஷகன்: இது உண்மையுள்ள ஒரு தேவ ஊழியக்காரனைக் குறிக்கிறது.
2. திட்டிவாசல் நெருக்கமாய் இருக்குமாதலால் அதின் வழியாக ஒருவன் மூட்டையோடு பிரவேசிக்கக்கூடாது. இது நித்திய ஜீவனின் ஒரே வழியாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. அவர் மூலமாய் இரட்சிப்படைய விரும்புகிறவர்கள் தங்கள் பாவங்களையும், அவ பக்தராhன தோழரையும் வெறுத்து பின்னாலே தள்ளிப் போட வேண்டும்.
3. ஆத்தும இரட்சிப்பை நாடும் ஒருவன் கிறிஸ்துவின் மூலமாயுள்ள இரட்சண்ய வழியைத் துவக்கத்திலேயே தெளிவாய்க் கண்டு கொள்ளக் கூடாமல் இருந்தாலும் இருக்கலாம். அப்படிப்பட்ட சமயத்தில், பாதைக்கு வெளிச்சம் போல் இருக்கும் தேவ வசனத்தை அவன் கருத்தோடு வாசித்து வரவேண்டியது.