2012 ஆம் ஆண்டு நமது வாகன சுவிசேஷ ஊழியத்தில்
பங்கெடுத்த கர்த்தருடைய பிள்ளைகள் பாஸ்டர் என்.சாமுவேல் (பித்தோர்கார்ட்)
டி.ற்றி.நார்ட்டன் (நாசரேத்) என்.சாமுவேல் (நீலகிரி) பாக்கேலால் (ருத்ரபூர்)
சுனில் (சண்டாக்) பாஸ்டர் ஓபேத் (கதர்பூர்) விக்ரம் சிங் (கதர்பூர்) (வாகன
ஓட்டுநர்கள் மனோஜ் (பித்தோர்கார்ட்) நரேஷ் (பித்தோர்கார்ட்) ஆவார்கள்.
அந்தப்படத்தை நீங்கள் செய்தியில் காணலாம்.

வழக்கம்போல இந்த தடவையும் நமது வாகன ஓட்டுநர்கள் சகோதரன் மனோஜ் அவர்களும்,
சகோதரன் நரேஷ் அவர்களுமாவார்கள். எதிர்பாராதவிதமாக மனோஜ் அவர்கள் கடுமையான
மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டு டில்லியில் மருத்துவ சிகிட்சை பெற்று
கர்த்தருடைய பேரன்பால் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். 2 சிறிய பெண்
பிள்ளைகளுக்குத் தந்தையான அவர்கள் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த வேளையில்
அவருடைய பெற்றோர் தங்கள் குல தெய்வங்களான கடவுளர்களைப் பற்றிக்கொள்ளும்படியாக
எவ்வளவோ முயற்சித்தும் மனோஜ் அதை முற்றும் நிராகரித்து, அந்த தெய்வங்களை
கண்ணேறிட்டும் பார்க்காமல் தனது முழு நம்பிக்கையையும் ஆண்டவர் இயேசு ஒருவர்
மேலேயே வைத்து கர்த்தர் தனக்கு நல்ல பூரண சுகம் அளிப்பார், அவர் தன்னை
ஒருபோதும் கைவிடவேமாட்டார் என்று கூறி தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்து
பரத்திலிருந்து விடுதலையைப் பெற்றுக் கொண்டார்கள். அல்லேலூயா. மனோஜ் தன்னுடைய
ஆச்சரியமான சுகத்தை குறித்து ஒரு நாள் தனது கண்களிலிருந்து கண்ணீர் வடிய வடிய
எங்கள் ஜெபக்கூடுகையில் அழுதுகொண்டே சாட்சி பகர்ந்தார்கள். கர்த்தர் ஒருவருக்கே
மகிமை. மஞ்சள் காமாலை நோயால் தாக்குண்ட நிலையில் மிகவும் பெலவீனமாக காட்சி
தரும் மனோஜ் சகோதரனை நீங்கள் படத்தில் காணலாம். ஆரம்பத்தில் ஒரு வாரம்
டில்லிக்குச் சிகிட்சைக்காக சென்றபடியால் அவர்களால் எங்களுடன் ஊழியத்தில்
கலந்து கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக மற்றொரு ஓட்டுநர் கலந்து கொண்டார்.
அதற்கப்பால் மீதமுள்ள நாட்கள் அனைத்திலும் மனோஜ் தனது வாகனத்தை எந்த ஒரு
பெலவீனமும் இல்லாமல் ஓட்டி கர்த்தருடைய ஊழியத்தை மகிழ்ச்சியோடு செய்தார்கள்.
வாகன ஓட்டுநர்கள் மனோஜ் மற்றும் நரேஷ் இருவரின் படங்களை நீங்கள் இந்தச்
செய்தியில் காணலாம்.

ஆச்சரியவிதமாக இந்த தடவை நமது 2 வாகனங்களின் ஒரு மாத கால வாடகையை ஒரு
கர்த்தருடைய பரிசுத்த பிள்ளை ஆண்டவருடைய ஏவுதலால் சந்தித்தார்கள். ஆ,
ஆண்டவருடைய வழிகளையும், அவருடைய அதிசய நடத்துதல்களையும் யாரே அளவிட முடியும்?
யார் யார் ஆண்டவருடைய ஊழியங்களை பண ஆசையின்றி, மனுஷனுடைய புகழ் ஆரவாரங்களை
எதிர்நோக்காமல், சிலுவை நேசரை மட்டும் உலகுக்கு உயர்த்திக் காண்பிப்பார்களோ
அந்த மக்களை தேவன் இன்றும் தமது நாமத்திற்கு மகிமையாக எடுத்துப் பயன்படுத்தவல்ல கர்த்தராக இருக்கின்றார்.
அதற்காக அந்த தேவ மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் இரவும் பகலும் ஒத்தாசையின்
பர்வதத்தை நோக்கிக் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியது மட்டுமேதான். தனது தேவைகளை
அவன் யாருக்கும் தெரிவிக்காமல், யாருக்கும் விளம்பரப்படுத்தாமல் வானத்தையும்
பூமியையும் உண்டாக்கின கர்த்தருக்கு தனது தேவைகளைக்கூறிவிட்டு அவருடைய
பாதங்களில் இரவும், பகலும் ஜெபத்தில் தரித்திருப்பதுதான். "என் கண்கள்
எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது" (சங் 25 : 15) என்று தாவீது
இராஜா தனது அனுபவத்தை நமக்குச் சொல்லுவார்.
இந்த தடவை எனது மகன் சுந்தர்சிங், சார்லஸ் பின்னி என்ற இரண்டு மகன்களும்
அவர்களது குடும்பங்களும் பிள்ளைகளோடு சென்னை வரை வந்து எங்களை வழி
அனுப்பிவிட்டுச் சென்றனர். அந்த நாளின் இரவில் 1:45 மணிக்கு கண் விழித்த நான்
அதற்கப்பால் ஜெபத்தில் முழங்கால்களிலேயே நின்றேன். அதிகாலை 4 மணிக்கு எல்லாரும்
கண் விழித்துவிட்டார்கள். ஜெபத்திற்குப் பின்னர் எனது இரு மகன்களும் அவர்களது
மனைவிமார் எலிசபெத், ஜேஸ்மீன் இருவரும் எங்களுடன் வந்து எங்களை விமான
நிலையத்தின் பிரதான வாயிலில் வழி அனுப்பி வைத்துவிட்டுச் சென்றனர்.
சகோதரன் நார்ட்டன் அவர்களும், பாஸ்டர் என்.சாமுவேல் மற்றும் நானும்
சென்னையிலிருந்து காலை சரியாக 6 மணிக்குப் புறப்பட்டு 8:30 மணிக்கு டில்லி
விமான நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து காலை 10:30 மணிக்குப் புறப்பட்ட
அடுத்த விமானத்தில் நாங்கள் ஏறி காலை 11:15 மணிக்கெல்லாம் உத்தராஞ்சல்
மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பட்டணத்தின் "ஜாலி கிராண்ட்" என்ற விமான
நிலையத்தில் வந்து இறங்கினோம். டேராடூன் பட்டணத்திலிருந்து 26 கி.மீ. தொலைவில்
கானகத்திலிருக்கும் அந்த இடத்திலிருந்து நாங்கள் பயணப்பட்டு ரயில்
நிலையத்திற்கு அருகிலுள்ள "அன்மோல்" என்ற ஒரு லாட்ஜில் வந்து தங்கினோம். அந்த
நாளின் பகற் காலத்தில் நாங்கள் அங்கிருந்துவிட்டு இரவு சுமார் 11 மணி அளவில்
புறப்படும் "டேராடூன் எக்ஸ்பிரஸ்" ரயிலில் காதகோடம் ரயில் நிலையம் வந்து
சேர்ந்தோம். இரவில் ரயிலில்
எங்கள் இளைப்பாறுதல் தேவ சமாதானத்தோடிருந்தது.
காதகோடம் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு அரசாங்க ஓய்வு விடுதியில் நமது
ஊழியத்தில் கலந்து கொள்ளும் சகோதரர்கள் பாக்கேலால், ஓபேத், விக்கிரம்சிங்,
மனோஜ், நரேஷ் ஆகிய நால்வரும் முந்திய நாளே வந்து தங்கியிருந்தனர். அவர்கள்
அங்கு வந்து தங்குவதற்காகவே முன்கூட்டியே ஓய்வு விடுதியில் அறை புக்
செய்யப்பட்டு ஆயத்தமாக இருந்தது.
எங்களை ஏற்றி வந்த டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் காதகோடம் ரயில் நிலையத்திற்குள்
காலை 7:30 மணிக்கு வந்து சேரவும் நம்முடைய சகோதரர்கள் எல்லாரும் எங்கள் வரவை
எதிர்நோக்கி எங்களைச் சந்திப்பதற்காக ரயில்வே பிளாட்பாரத்தில் ஆவலோடு காத்துக்
கொண்டிருந்தார்கள். நாங்கள் ரயிலிலிருந்த இறங்கவும் அவர்கள் அனைவரின் சந்தோசம்
பொங்கிப் பூரிப்பதாக இருந்தது. கர்த்தருக்கே மகிமை. எனினும் நமது டிரைவர்
சகோதரன் மனோஜ் அவர்கள் மஞ்சள் காமாலை வியாதியால் தாக்குண்டு எலும்பும் தோலுமாக
இருப்பதை நாங்கள் கண்டபோது எங்கள் கண்கள் குளமாயின. நாங்கள்
எல்லாரும் ஓய்வு விடுதி அறைக்குச் சென்று குளித்து எங்களை ஆயத்தம் செய்து கொண்ட
பின்னர் எங்களைச் சந்திக்க ஹல்த்வானி பட்டணத்திலிருந்து வந்திருந்த பாஸ்டர்
சகோதரன் ஜேம்ஸ் அவர்கள் வரவிருக்கும் தேவ ஊழியங்களுக்காக ஜெபித்து எங்களை வழி
அனுப்பி வைத்தார்கள்.
எங்கள் வாகனத்திற்கு டீசல் நிரப்பியதும் நாங்கள் அனைவரும் 220 கி.மீ.
தொலைவிலுள்ள பித்தோர்ட்கார்ட் பட்டணம் நோக்கி ஜெபத்துடன் பயணப்பட்டோம்.
கர்த்தருடைய கிருபையால் சுமார் 8 மணி நேர பயணத்திற்குப் பின்னர் மாலை 5 மணி
அளவில் நாங்கள் பித்தோர்கார்ட் பட்டணம் வந்து சேர்ந்து அங்குள்ள உல்கா என்ற
விடுதியில் தங்கினோம். நாங்கள் தங்குவதற்கு வசதியாக சில மாதங்களுக்கு முன்பாகவே
அது முன்பதிவு செய்யப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
இந்த தடவை நாங்கள் பெரும் எண்ணிக்கையான தேவனுடைய பிரசுரங்களை சரியாக ஒரு மாத
காலத்திற்குள்ளாக மக்களுடைய கரங்களில் கொடுத்து முடித்துவிட வேண்டியது அவசியமாக
இருந்ததால் அவைகளை மக்களுக்கு கொடுக்கும் விதத்தில் குழுவாக உட்கார்ந்து
வகைப்படுத்தும் பணியில் சில நாட்களை செலவிடும் காரியத்தை தவிர்ப்பதற்காக
பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் குடும்பத்தினர் சில நாட்களாக
இராப்பகலாக உட்கார்ந்து 20000 ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷத்துக்குள் பண்டிட்
தர்ம் பிரகாஷ் சர்மா அவர்கள் எழுதிய 3 விதமான கைப்பிரதிகளையும்,
மும்பையிலிருந்து நாம் அச்சிட்டுப்பெற்ற பிரதிகளையும் வைத்து அவைகளைப்
பெட்டிகளில் நேர்த்தியாக வைத்துக்கட்டி வைத்துவிட்டார்கள். அவர்களின் அந்த
அன்பின் செயலால் நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை உடனே ஆரம்பிக்க அனுகூலமாக
இருந்தது. அவர்களுக்கு நாங்கள் கர்த்தரில் பெரிதும் நன்றி கடன்பட்டுள்ளோம்.
நாங்கள் பித்தோர்கார்ட் பட்டணம் வந்து சேர்ந்து ஒரு நாள் இளைப்பாறுதலுக்குப்
பின்னர் உடனடியாக 83 கி.மீ. தொலைவிலிருந்த டார்ச்சுலா என்ற பட்டணம் நோக்கிப்
பயணப்பட்டோம். இந்த டார்ச்சுலா பட்டணம் சீனா மற்றும் நேப்பாள நாடுகளின்
எல்லைகளில் உள்ளது. நாங்கள் எங்கள் இரு வாகனங்களையும் சாமுவேல் சகோதரன்
வீட்டிலுள்ள கைப்பிரதி பெட்டிகளில் வேண்டியவற்றை டார்ச்சுலா பகுதிகளில்
ஊழியத்திற்காக ஏற்றிக் கொண்டோம். பெட்டிகள் எங்கள் வாகனங்களில் ஏற்றப்படுவதை
நீங்கள் காண்பதுடன் நாங்கள் அனைவரும் டார்ச்சுலா புறப்படும் முன்னர் பாஸ்டர்
சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் வீட்டின் முன்னர் நின்று ஒரு புகைப்படம்
எடுத்துக் கொண்ட காட்சியையும் நீங்கள் காணலாம்.




|