ஸ்டீபன் ஜெஃப்ரி, ஜியார்ஜ் ஜெஃப்ரி ஆகிய இரு உடன்
பிறந்த சகோதரரும் வேல்ஸ் நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார்கள்.
அக்காலத்தில் வேல்ஸ் நாடானது உலகப் புகழ்பெற்ற நிலக்கரிச் சுரங்க தேசமாக
விளங்கியது. அதின் காரணமாக ஸ்டீபன், ஜியார்ஜ் இருவரின் தகப்பனாரும், அவர்களுடைய
இனஜனங்களும் நிலக்கரி சுரங்கங்களிலேயேதான் தொழிலாளிகளாக பணி புரிந்தனர்.
எனினும், ஸ்டீபன் ஜெஃப்ரி, ஜியார்ஜ் ஜெஃப்ரி சகோதரர்கள் கர்த்தரைக் குறித்து
அறியவும், தேவதா பக்தி வாழ்வில் வளரவும் மிகவும் வாஞ்சையுடையோராயிருந்தனர்.
ஸ்டீபன் ஜெஃப்ரி 20 ஆம் நூற்றாண்டிலுள்ள அனைத்து தேவ ஊழியர்களிலும் ஒரு
அசாதாரணமான அற்புத தேவ ஊழியராக சிறந்து விளங்குவதற்கு காரணமாக இருந்தது அவர்
வேல்ஸ் நாட்டில் சென்று கொண்டிருந்த அவரது தேவாலயத்தில் தோன்றிய ஒரு அற்புத
காட்சியேயாகும். இரத்தம் வடிந்து கொண்டிருந்த ஒரு ஆட்டுக்குட்டியின் காட்சியே
அங்கு தோன்றிய காட்சியாகும். ஏறக்குறைய 300 பேர்கள் அந்த அபூர்வ காட்சியை
தேவாலயத்துக்கு வந்து கண்டு சென்றனர்.
அந்தக் காட்சியைக் கண்ட ஸ்டீபன் ஜெஃப்ரி பிரமிப்படைந்து தேவனுக்கு முன்பாகத்
தரையில் மூன்று நாட்கள் விழுந்து அழுது கொண்டிருந்தார். இந்த உலக மக்களின்
தேவைகளுக்காக, விசேஷமாக வியாதி வேதனைகளால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்
மக்களின் சரீர சுகங்களுக்காக அவர் தேவனை நோக்கிக் கதறினார். அந்த நாட்கள்
ஒன்றில் தேவனிடமிருந்து ஒரு விசேஷ அபிஷேகம் ஸ்டீபன் ஜெஃப்ரிக்கு கிடைத்துக்
கொண்டதான ஒரு பரிசுத்த ஆவியின் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அந்த 3
நாட்களுக்குப் பின்னர் அவர் தேவாலயத்திலிருந்து புறப்பட்டபோது, தான் யாராவது
வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்போது பரத்திலிருந்து அற்புத சுகத்தை அவர்கள்
பெற்றுக் கொள்ளுவதை அவர் ஆச்சரியத்துடன் கவனித்தார். அவரது அற்புத சுகமளிக்கும்
வரத்தின் காரணமாக கொஞ்ச காலத்திலேயே அவர் எந்த ஒரு பிரமாண்டமான கட்டிடத்தை
வாடகைக்கு அமர்த்தினாலும் அந்தக் கட்டிடம் மக்கள் திரளினால் உடனே நிரம்பி
வழிவதை அவர் கண்டார். சில பட்டணங்களில் அவர் வாடகைக்கு அமர்த்தியிருந்த
கட்டிடத்துக்குள் நுழைவதற்காக ஜனங்கள் 3 நாட்கள் வரை வரிசையில் வெளியே காத்து
நிற்க வேண்டியதாக இருந்தது.
ஸ்டீபன் ஜெஃப்ரி ஒரு இரும்பு மனிதனாக இருந்தார். தனக்கு முன்பாக அமர்ந்திருந்த
வியாதியஸ்தர்களுக்காக அவர் பாடினார், ஜெபித்தார், பிரசங்கித்தார். அத்தனை
பேரையும் கர்த்தருடைய கிருபையால் சுகப்படுத்தினார். அதின் பின்னர்
பக்கத்திலுள்ள ஏதாவது ஒரு ஹோட்டலுக்குச் சென்று தனது ஆகாரத்தைப் புசித்து
நன்றாகத் தூங்கி சுமார் 2 அல்லது 3 மணி நேரம் இளைப்பாறுவார். அதற்குள்ளாக அவரது
சக ஊழியர்கள் வந்திருந்தோர் அனைவரையும் மண்டபத்தின் கதவுகளைத் திறந்து
வெளியேற்றி ஒருவரும் இல்லாதபடி காலி செய்துவிடுவார்கள். அது நள்ளிரவு 11 மணி
ஆனாலும் அல்லது விடிபகல் 2 மணி ஆனாலும் அதைக் குறித்து மக்கள் கண்டு கொள்ளவதே
இல்லை. ஸ்டீபன் ஜெஃப்ரி நன்கு இளைப்பாறிவிட்டு திரும்பவும் பிரசங்க
மண்டபத்திற்கு வந்து தனது பாடல்களையும், ஜெபத்தையும், பிரசங்கத்தையும்
ஆரம்பிப்பார்.
சுகமளிக்கும் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே ஸ்டீபன் ஜெஃப்ரி பிரசங்க
மேடையிலிருந்து குதித்து கூட்டத்தினரின் பின் பகுதிக்குச் சென்று ஒவ்வொரு
வியாதிகளின் பெயர்களையும் கூறி அந்த வியாதிகள் மக்களுடைய சரீரங்களிலிருந்து
வெளியேறும்படி ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் கட்டளையிடுவார். அவ்வளவுதான், அந்த
வியாதியுள்ளோர் அனைவரும் பூரண சுகம் பெற்றனர்.
எலும்புகள் மாறிக்கிடந்த ஒரு மனிதனுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்ட போது அந்த
மனிதனுடைய எலும்புகள் "பட்" என்ற வெடிச் சத்தத்துடன் ஒன்று கூடியதை நாங்கள்
கண்டோம் என்று அங்கு கூடி வந்திருந்த மக்கள் சாட்சி பகர்ந்தார்கள்.
ஹவ்வார்ட் கார்ட்டர் என்ற தேவ மனிதர் ஒரு தடவை ஸ்டீபன் ஜெஃப்ரியின்
சுகமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஒரு நாள் இராக்காலம் ஒரு வாலிபன்
தனது ஒற்றைக் காலுடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டான். அந்த வாலிபனின் அடுத்த
கால் பூரண வளர்ச்சியின்றித் தொங்கிக் கொண்டிருந்தது.
அந்த வாலிபனின் காலைப் பார்த்து "காலே, இயேசுவின் நாமத்திலே நீ வளர்ச்சியடை
என்று நான் உனக்குச் சொல்லுகின்றேன்" என்று ஸ்டீபன் ஜெஃப்ரி கூறினார்.
அந்தக் கூட்டத்திலிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே அந்த
வாலிபனின் கால் 18 அங்குலம் அதாவது ஒன்றரை அடி அந்த இடத்தில் வளர்ந்தது. இந்தச்
சம்பவத்தைக் கூறின ஹவ்வார்ட் கார்ட்டர் என்ற தேவ மனிதர் உண்மை, ஆம், உண்மை
ஒன்றையே பேசக்கூடியவராவார். "அந்த ஆச்சரிய காட்சியைக் கண்ட மக்கள் மிகுந்த
பரபரப்புக்குள்ளானார்கள்" என்று கார்ட்டர் தொடர்ந்து கூறுகின்றார்.
ஹவ்வார்ட் கார்ட்டர் மேலும் "சகோதரன் சும்ரால் அவர்களே, அந்த மக்கள் தங்கள்
கைகளைத்தான் தங்கள் கால்களாக தரையில் ஊன்றி நடக்கவில்லை, மற்றபடி அவர்கள்
குதிக்கின்றார்கள், ஓடுகின்றார்கள், "கீச்" என்று அவர்கள் கத்திக்
கதறுகின்றார்கள்" என்று கூறினார்.
தேவ ஊழியக்காரருடைய ஜெபங்களால் மக்கள் குணமடையும்போது அந்த தேவ ஊழியர் தாழ்மையை
அணிந்து கொள்ளுவது மிகவும் கடினமாகும். ஜனங்கள் உங்களைப் புகழும்போது, ஜனங்கள்
உங்களை வாழ்த்தி, உங்களைத் தங்கள் தலையில் வைத்துத் துதி பாடும்போது, அவர்கள்
தங்களுடைய செல்வத்தை எல்லாம் உங்களுடைய காலடிகளில் கொட்டும்போது நிச்சயமாக
உங்களால் தாழ்மையைத் தரித்துக் கொள்ளவே முடியாது.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்பாக ஸ்டீபன் ஜெஃப்ரி ஆப்பிரிக்க தேசத்தில் நின்று
கொண்டிருந்தபோது "அன்பார்ந்த கனவான்களே, தாய்மாரே, உலகம் என்னை வணங்குவதற்காக
எனது காலடிகளில் கிடக்கின்றது" என்று கூறியதாக நான் என் காதுகளால் கேட்டேன்
என்று ஹவ்வார்ட் கார்ட்டர் என்னிடம் சொன்னார்.
ஸ்டீபன் ஜெஃப்ரி தனது எளிமையான பிரசங்கங்களைத் தொடர்ந்து கொஞ்ச காலம் செய்து
வந்தார். ஆரம்ப காலங்களில் நடைபெற்ற அதே வல்லமையான அற்புதங்கள் அவரது
கூட்டங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. ஆனால், அவரண்டை சேர்ந்திருந்த
அவரது திரண்ட ஐசுவரியம் அவரைப் பாதிக்கத் தொடங்கியது. ஒரு சாதாரண நிலக்கரிச்
சுரங்கத் தொழிலாளியைப்போல காட்சியளிக்க வேண்டிய தேவ மனிதர் பட்டும்
பீதாம்பரமும் உடுத்த கத்தோலிக்க பேராயராக காட்சியளித்தார்.
1936 ஆம் ஆண்டு நான் இங்கிலாந்து தேசத்திற்குத் திரும்பியபோது ஸ்டீபன் ஜெஃப்ரி
வியாதிக்குள்ளானார். நான் அவரைக் காண்பதற்காக அவர் வாழ்ந்த வேல்ஸ்க்கு ஒரு
ரயில் மூலமாகப் பயணமானேன். காரணம், மேலே கண்ட ஹவ்வார்ட் கார்ட்டருடன் நான்
தீபெத், ஜாவா, ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளுக்கு மிஷனரியாக சென்ற எனது
வரலாறுகளை வாசித்து பரவசம் அடைந்ததுடன் என்னை எப்படியாவது காண வேண்டுமென்ற ஆவல்
ஸ்டீபன் ஜெஃப்ரிக்கு இருந்ததை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தேன்.
அந்தச் சமயம் ஸ்டீபன் ஜெஃப்ரி, கீல்வாத மூட்டு வீக்க வியாதியால் பெரிதும்
கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நான் அவரது முகத்தைப் பார்ப்பதற்காக அவருக்கு
முன்பாகத் தரையிலே அமர்ந்திருந்தேன். ஆ, அவர் எத்தனையான இனிமையான முகத்தை
தன்னகத்தே கொண்டிருந்தார். அவருடைய தலையும், கழுத்தும் சற்று வளைந்து
காணப்பட்டது. அவருடைய புயங்களும், தோள் பட்டைகளும் முறுக்கப்பட்டதாக இருந்தன.
அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் தாராளமாக வடிந்து கொண்டிருந்தது. "எந்த முதல்
தரமான கொடிய வியாதியை நான் மக்களிடமிருந்து விரட்டியடித்தேனோ அந்த பயங்கர
வியாதியே இன்று என்னைப் பற்றிக் கொண்டுள்ளது" என்று அவர் என்னிடம் கண்ணீருடன்
சொன்னார்.
"நான் உங்களைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். உங்களுடைய மாபெரும்
உயிர் மீட்சி கூட்டங்களைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அமெரிக்கா,
ஆஸ்திரேலியா நாடுகளிலும் உலகின் இதர பல தேசங்களிலும் நடைபெற்ற உங்களுடைய
மாபெரும் சுகமளிக்கும் கூட்டங்களிலே கலந்து கொண்ட மக்கள் அதிசய அற்புதமாக
குணமடைந்த சரித்திரங்களை குறித்து நான் மக்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
உங்களைப் பார்ப்பதற்காகவே நான் இப்பொழுது வந்தேன்" என்று நான் கூறினேன்.
"சகோதரன் சும்ரால் அவர்களே, என்னை இந்த அறையில் வந்து எந்த ஒரு
பிரசங்கிமார்களும் பார்த்து பல வாரங்கள் ஆகின்றன. நான் சபைகளைக் கொடுத்து
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆலயத்தையும் கொடுத்த எனது எந்த ஒரு பாஸ்டர்களும் கூட
இதுவரை என்னை வந்து பார்க்கவில்லை" என்றார் அவர்.
"அதைப்பற்றி நீங்கள் எந்த ஒரு மன துயரமும் கொள்ள வேண்டாம். நீங்கள் எந்த ஒரு
அபிஷேகத்தைப் பெற்றிருக்கின்றீர்களோ அந்த அபிஷேகத்தினைக் கொண்டிருக்கும் தேவ
மக்களே உங்களைக் காண ஆவல் கொண்டு வருவார்கள். என் வாழ்க்கையில் நான் கண்ட
மிகுந்த மனமகிழ்ச்சியின் நாள் இதுவே என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்
என்று நான் விரும்புகின்றேன்" என்று நான் அவரிடம் கூறினேன்.
ஒரு காலத்தில் தேவனுடைய மகா வல்லமையான பாத்திரமாக கர்த்தருடைய அபிஷேகத்தைப்
பெற்று அவரால் அநேகருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தப்பட்டு, பின்னர் அந்த
பரிசுத்த நிலையிலிருந்து வீழ்ந்துபோன ஒரு மாபெரும் தேவ மனிதரோடு நான் சில மணி
நேரங்களைச் செலவிட்டது எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது. தேவனுடைய கரங்களால்
மிகவும் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதர் இப்படி வீழ்ச்சியடைவது
சாத்தியமாகுமா என்று என்னைத் தேவ ஊழியத்தின் பாதையில் பக்குவப்படுத்திய தேவ
மனிதர் ஹவ்வார்ட் கார்ட்டரிடம் நான் கேட்டேன்.
"சும்ரால் அவர்களே, தேவன் தமக்கே உரியதான தமது பொன்னையும், மகிமையையும் தமது
ஊழியக்காரர் வைத்துக் கொள்ள ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார். வேல்ஸ் நாட்டின்
நிலக்கரிச் சுரங்கங்களில் சாதாரண தொழிலாளியாக இருந்த இந்தப் பையன் தனது
அறியாமையின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களால் ஏராளம் தாராளமாக அள்ளி வீசப்பட்ட
பொன்னையும், தேவனுக்குச் சேர வேண்டிய மகிமையையும் தனக்கென்று எடுத்துக்
கொண்டதினால்தான் மாபெரும் தவறு நிகழ்ந்துவிட்டது" என்று அவர் என்னிடம்
சொன்னார்.
ஸ்டீபன் ஜெஃப்ரி இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வெகு சீக்கிரமாகவே மரித்துப்
போனார். நான் அவரண்டை சென்றிருந்தபோது அவர் எனக்குச் சொன்ன ஆவிக்குரிய ஞான
அறிவுரைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இன்றும் இருக்கின்றன.
ஸ்டீபன் ஜெஃப்ரி நாட்களில் ஏற்பட்ட உயிர் மீட்சியின் காரணமாக ஏற்பட்ட அநேக
சபைகளின் பாஸ்டர்கள் அவருடைய மரணப்படுக்கையில் அவரை வந்து பார்க்கவே இல்லை.
அந்த தேவ மனிதரின் வீழ்ச்சியிலிருந்து நான் கற்றுக்கொண்ட மாபெரும் பாடத்தை எனது
தேவ ஆலோசனைக்காக என் முகத்தை நோக்கிப் பார்க்கும் எனது இளைய தலை முறையினரான தேவ
ஊழியர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
ஜீவனுள்ள தேவனுடைய பொன்னையும், அவருக்குச் சேர வேண்டிய மகிமையையும் தொடக்கூடாது
என்ற சத்தியத்தை ஸ்டீபன் ஜெஃப்ரிக்கு ஒருவரும் போதிக்கவில்லையாதலால் அவர் தமது
தேவ வல்லமையை இழந்து நிர்ப்பந்தனாக மரித்தார்.
|