2012 ஆம் ஆண்டின் ஜனுவரி மாதம் 7 ஆம் நாள் எனது
வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது. அந்த நாளின் காலை 7
மணிக்கு கோவைக்கு ஒரு வாடகை காரில் செல்ல நான் ஒழுங்கு செய்திருந்தேன். தமிழ்
வேதாகமங்கள், கிறிஸ்தவ புத்தகங்கள் போன்றவற்றை அங்கு வாங்குவதற்காக நான் செல்ல
வேண்டியதாக இருந்தது. தான் பணிபுரியும் பெண்கள் மேல் நிலை பள்ளியில் கல்வி பயிலும்
கர்த்தரை ஏற்றுக்கொண்ட, பணம் கொடுத்து வாங்க முடியாத இந்துப் பெண் பிள்ளைகள்
மற்றும் ஏழை கிறிஸ்தவ பெண் பிள்ளைகளுக்கு முற்றும் இலவசமாக வேதாகமங்கள் வாங்கிக்
கொடுப்பது, அவர்களை கர்த்தருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்துவது, வறுமைப்பட்ட
பிள்ளைகளுக்கு உதவி செய்வது போன்ற காரியங்களை எல்லாம் எனது மூத்த மருமகள்
கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக செய்து வருகின்றார்கள். பள்ளியில் பயிலும்
பிள்ளைகள் அவர்களுக்கு "பைபிள் ஆண்டி" (Bible
Aunty) என்று பெயர்
வைத்திருக்கின்றார்கள். கர்த்தருக்கே மகிமை. குறிப்பிட்ட அந்த நாளில் நான்
அவர்களுக்கு வேதாகமங்கள் வாங்குவதற்காகவே முக்கியமாக கோவை சென்றேன். அந்த நாளின்
அதிகாலை 3:45 மணிக்கெல்லாம் நான் கண்விழித்தேன். நீலகிரியில் அப்பொழுது கடும்
குளிர் காணப்பட்டது. ஜெபிப்பதற்காக நான் முழங்கால் ஊன்ற விரும்பிய போது சாத்தான்
எனது காதிற்குள்ளாக தொடர்ந்து சற்று நேரம் படுத்திருக்க என்னை மிகவும் பலமாக
ஏவினான். அவனது தீய ஆலோசனைக்கு நான் செவி சாயாமல் உடனே முழங்காலூன்றி தொடர்ச்சியாக
சுமார் 2 மணி நேரம் ஆண்டவருடைய பாதங்களில் அந்த நாளின் பிரயாணத்தை கர்த்தர்
பொறுப்பெடுத்து நடத்தித் தரும்படியாக மன்றாடி ஜெபித்தேன்.
காலையில் நான் எனது பிரயாணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவும் நானும், கிறிஸ்தவ
டிரைவர் ஜேக்கப் அவர்களும் ஜெபம் ஏறெடுத்த பின்னரே கார் புறப்பட்டது. அந்த நாளில்
வேதாகமங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு கோவையிலிருந்து நாங்கள் கோத்தகிரி திரும்பிக்
கொண்டிருந்தோம். கோத்தகிரிக்கு இன்னும் சுமார் 7 கி.மீ. தூரம் இருக்கும்போது எங்கள்
வாகனம் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தின் வழியாக உச்சி மேட்டில் வந்து கொண்டிருந்தது.
அந்த நேரம் காலியான ஒரு பெரிய லாரி இன்னும் உயரமான மேட்டிலிருந்து நாங்கள் வந்து
கொண்டிருந்த பள்ளத்தாக்கை நோக்கி விரைந்து ஓடி வந்து கொண்டிருந்தது. ஓடி வந்து
கொண்டிருந்தது என்று சொல்லுவதைவிட அது பறந்து வந்து கொண்டிருந்தது என்றுதான் சொல்ல
வேண்டும். அது வரும் பயங்கர வேகத்தைப் பார்த்ததும் நான் அருகிலிருந்த டிரைவரிடம்
இப்படிப்பட்ட வாகனங்களால்தான் ரஸ்தாவில் அழிவுகள் உண்டாகின்றன என்று சொல்லி வாயை
மூடுவதற்குள்ளாக அந்த லாரி இடி முழக்கம்போன்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டு எங்களுக்கு
பின்னாலுள்ள ரஸ்தாவின் தடுப்புச்சுவரை மோதி உடைத்துக்கொண்டு ஆழமான பள்ளத்தாக்கினுள்
போய் விழுந்தது. அந்த லாரி முழுவதும் மூன்று பகுதிகளாக சிதறுண்டு போனதை நாங்கள்
எங்கள் கண்களால் கண்டோம். அந்த கெடு பாதாள பள்ளத்தாக்கில் கிடந்த லாரி அண்டை
இறங்கிச் செல்லவே இயலாது. சற்று நேரம் நின்று நாங்கள் அந்த துயரத்தைப்
பார்த்துவிட்டு கோத்தகிரிக்கு வந்துவிட்டோம். நாங்கள் கோத்தகிரியை நெருங்க நெருங்க
தமிழ் நாடு அரசாங்க ஆம்புலன்ஸ் வண்டி 108 அந்த விபத்தில் மாண்டோரையும்,
காயம்பட்டோரையும் எடுத்து வருவதற்காக துயர ஒலி எழுப்பிக்கொண்டு கோத்தகிரியிலிருந்து
புறப்பட்டு வந்து எங்களைத் தாண்டி விரைந்து கடந்து செல்லுவதை நாங்கள் துக்கத்தோடு
கண்டோம்.
சில நொடிப் பொழுதிற்கு முன்பாகத்தான் எங்கள் வாகனம் லாரி மோதிய தடுப்புச் சுவரை
கடந்து மேலே வந்திருந்தது. "வெறும் 4 நொடிகளுக்கு நாம் பிந்தியிருந்தால் அந்த லாரி
நமது காரின் மேல் மோதி நமது காருடன் சேர்த்து அதுவும் கெடு பாதாளம் போயிருக்கும்,
நாமும் நொறுங்கிப்போயிருப்போம்" என்று டிரைவர் ஜேக்கப் துயரத்தோடு சொன்னார்கள்.
அந்த லாரியை ஓட்டியவன் அதிகமான குடிபோதையில் இருந்ததாகவும், அவன் தனது லாரிக்கு
டீசல் போடும் போதே கோத்தகிரி பெட்ரோல் பங்கில் உள்ளவர்கள் அவனை வாகனத்தை
எடுக்கவிடாமல் எவ்வளவோ தடுத்ததாகவும், எச்சரித்ததாகவும் நாங்கள் பின்னர்
கேள்விப்பட்டோம். அந்த விபத்து நிகழ்ச்சியானது தொலைக்காட்சியில்
காண்பிக்கப்பட்டதாகவும், செய்தி தாட்களிலும் வந்திருந்ததாகவும் சொன்னார்கள்.
வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு துயர சம்பவத்தை நான் முதன் முதலாவதாக பார்த்ததுடன்
டிரைவர் ஜேக்கப் அவர்களுக்கும் இதுவே முதல் தடவை என்று சொன்னதுடன் இந்த விபத்தைப்
பார்த்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் தனது வாகனத்தை எடுக்கும்போது அதிகமான
ஜெபத்தோடும், உருக்கமான மன்றாட்டோடும் எடுப்பதாக அவர் என்னிடம் கூறினார்.
அந்த நாளின் அதிகாலையில் தேவ சமூகத்தில் பாவியாகிய நான் தேவ பெலத்தால் ஏறெடுத்த
உருக்கமான 2 மணி நேர ஜெபம் நான்கு நொடிப் பொழுதை எங்களுக்கு ஈவாக முன்கூட்டிக்கொடுத்து
அழிவிலிருந்து எங்களைக் காத்துக் கொண்டது. இதை கருத்தோடு வாசிக்கும் தேவ பிள்ளையே,
ஜெபத்தை உங்கள் வாழ்க்கையில் ஏனோதானோவென்று ஒருக்காலும் எண்ணிவிடாதேயுங்கள்.
இடைவிடாது ஜெபியுங்கள் (1தெச 5 : 17) தேவன் உங்கள் உள்ளத்தில் ஜெபிக்க
ஏவும்போதெல்லாம் உடனே முழங்கால்களில் விழுங்கள். "மகனே, ஜெபம் விசேஷம்" என்று
சொல்லிச் சென்ற அந்த பரிசுத்தவானின் வாழ்க்கை முழுவதுமே ஜெபமாக அமைந்தது.
மனிதர்களிடத்தில் பேசுவதைவிட தன்னை ஆட்கொண்ட தன் இரட்சா பெருமானிடத்தில் பேசுவதையே
அந்த தேவ மனிதர் பாக்கியமாக எண்ணி எப்பொழுதும் அவருடைய பாதங்களிலேயே அதிகமாகத்
தரித்திருந்தார்கள். ஒரு பரிசுத்த மணி மொழி இவ்வாறு உள்ளது "உனது அதிகமான
முழங்காலூன்றுதல்கள் ஒரு சிறப்பான பரிசுத்த நிலையில் உன்னை எப்பொழுதும் வைத்துக்
காத்துக் கொள்ளும்" (A lot of kneeling will keep you
in good standing) என்பதே அந்த வாசகம்.
|