இமயமலைகளில் நடைபெற்ற
தேவ ஊழியங்கள்



"மாரியும், உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, பூமியை நனைத்து, அதில் முளை கிழம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசாயா 55 : 10 - 11)

கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமத்திற்கு துதி கனம் மகிமை உண்டாவதாக. மேற்கண்ட தேவனுடைய வசனத்தின்படி ஆண்டவருடைய வசனம் ஒருக்காலும் வெறுமையாகத் திரும்பாமல் அவர் விரும்புகிறதை நிறைவேற்றி முடிக்கும் என்று நாம் திட்டமும் தெளிவுமாகப் பார்க்கின்றோம்.

ரயில் வண்டி விரைந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. ஒரு தேவனுடைய ஊழியர் தனது கரங்களில் தேவனுடைய பிரசுரங்களை ஏந்திக்கொண்டு வந்து வண்டியில் அமர்ந்திருப்போருக்கெல்லாம் பிரசுரங்களை இலவசமாகக் கொடுக்கின்றார். எல்லாரும் மறுப்பின்றி சந்தோசமாக அவரிடமிருந்து அவற்றை வாங்கிப் படிக்கின்றனர். அவர்களில் ஒரு மனிதன் அந்தப் பிரசுரத்தை வாங்கி அவருடைய கண்களுக்கு முன்பாகவே மிகுந்த கோபத்துடன் அதை வெளியே வீசி எறிந்து விடுகின்றான். அதைக் குறித்து அந்த தேவ ஊழியர் எந்த ஒரு கடுஞ்சொல்லும் அவனைக்கூறாமல் அமைதியாகக் கடந்து செல்லுகின்றார். வெளியே வீசப்பட்ட தேவனுடைய பிரதி காற்றினால் அங்கும் இங்கும் அலைசடிப்பட்டு இறுதியில் ரயில் தண்டவாளத்தில் போய் விழுந்து அங்கே பாதுகாப்பாகக் கிடக்கின்றது. எத்தனை நாட்களாக அது அங்கு கிடந்ததோ நமக்குத் தெரியாது. ஒரு நாள் ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் முற்றும் வெறுப்புற்று இந்த உலகத்தில் உயிர் வாழ்வதை விட சாவதே நலம் என்ற திட்டமான முடிவுக்கு வந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள ரயிலுக்கு முன்பாக வந்து விழும் யோசனையை நலம் என்று தெரிந்து கொண்டு ரயில் தண்டவாளத்தில் ஏறி வந்து நிற்கின்றான். அந்த நேரம் அவனது கண் பார்வை தண்டவாளத்தில் கிடக்கும் தேவனுடைய பிரசுரத்தில் விழுகின்றது. ரயில் இன்னும் வரவில்லையாதலால் அந்தக் கைப்பிரதியை ஏனோதானோவென்று எடுத்து அவன் அதை வாசிக்கின்றான். தேவனுடைய அநாதி அன்பின் தீர்மானத்தின்படி அவனுக்காக அந்தக் கைப்பிரதி வீசப்பட்டிருந்த படியால், அவன் அதை வாசித்த உடனேயே அவனை அறியாமல் ஒரு உறுதியான நம்பிக்கையும், தேவ சமாதானமும் அவனை ஆட்கொண்டதால் அவன் தனது தற்கொலை முயற்சியை உடனே கைவிட்டுவிட்டு தண்டவாளத்திலிருந்து இறங்கி வீடு சென்று கைப்பிரதியில் குறிப்பிட்டபடி தனக்காக தனது ஜீவனையே கொடுத்த தன் ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவருடைய அன்பின் அடிமையானான். அந்த மனிதன் எடுத்துப் படித்தது ஒரு அற்பமான துண்டு காகிதமாக இருந்தபோதினும் அதில் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தமையால் அவன் அதை வாசித்து காப்பாற்றப்பட்டு நித்திய ஜீவனுக்கு சுதந்திரவாளியானான்.

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, கைப்பிரதியை துண்டு துண்டாக கிழித்து வீசப்பட்ட நிலையிலும் அதில் ஒரு துண்டுத்தாளில் காணப்பட்ட தேவனுடைய வார்த்தையை வாசித்து ஜீவன் காக்கப்பட்டோர் அநேகராவார்கள். தேவ ஊழியர்கள், மற்றும் மற்ற மக்களுடைய இரட்சிப்பில் கவனமாக இருக்கும் தேவ மக்கள் எப்படியாவது அவர்களுடைய கரங்களில் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்துவிட வேண்டுமென்று துடிதுடிப்பதன் ஒரே காரணம் தேவன் தமது வார்த்தைகளின் மூலமாக அந்த உள்ளங்களில் கட்டாயம் பேசி தமது மேலான நோக்கத்தை நிறைவேற்றிவிடுவார் என்பதுதான். எப்படியாவது தேவனுடைய வார்த்தைகள் அவர்களுடைய கரங்களுக்குச் சென்று கிடைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

இந்த இதழின் ஆரம்பத்தில் காணப்படும் தேவ மனிதர் ஹட்சன் டெய்லர் என்ற பரிசுத்தவானுடைய வாழ்க்கை சரித்திரத்தில் நாம் வாசிப்பதும் அதுவேதான். சீன மக்களுக்கு எப்படியாவது தேவனுடைய வார்த்தைகளைக் கொடுப்பதில் அவர் கண்ணும் கருத்துமாகவிருந்தார். தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்கும் அந்த மனிதருக்கு தனது சுவிசேஷ பிரசுரங்கள் எவ்வளவு தேவையானாலும் அவை அனைத்தையும் இலவசமாக கொடுக்க முன் வந்ததுடன் சீனாவில் அவருடைய வாழ்க்கைச் செலவுகளையும் கூட தானே ஏற்றுக்கொள்ள இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் வேதாகம சங்கத்தினர் முன் வந்ததின் காரணமும் அதைக் கருத்தில் கொண்டுதான்.

கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையாலும், தேவ பிள்ளைகளாகிய உங்களுடைய முழுமையான தியாக அன்பின் காணிக்கைகளைக்கொண்டும் நாங்கள் வடக்கே இமயமலைகளிலும் மேற்கண்ட காரியத்தைதான் ஆத்தும பாரத்தோடும், ஜெபத்தோடும் செய்து கொண்டு வருகின்றோம். முடிந்த அளவு அதிகமான எண்ணிக்கையில் தேவனுடைய சுவிசேஷ பங்குகள், புதிய ஏற்பாடுகள், முழுமையான வேதாகமங்கள் மற்றும் தேவனுடைய வார்த்தைகளுக்கு நேராக வழிநடத்தக் கூடிய தரமான தேவனுடைய பிரசுரங்களை பயன்படுத்துகின்றோம். கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.

நாங்கள் துவாராகாட் என்ற இடத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலுள்ள சவுக்குட்டியா என்ற இடத்திற்கு வந்து தங்கி அங்கிருந்து சுற்றியுள்ள அநேகக் கிராமங்களில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தோம். துவராகாட்டிலிருந்து சவுக்குட்டியா செல்லும் பாதை முற்றும் இறங்குமுகமாகவே இருந்தது. இந்த இடத்தை கனாயி என்றும் அழைக்கின்றனர். கர்த்தருடைய கிருபையால் நாங்கள் வசதியாக தங்கியிருந்து ஊழியம் செய்ய அனுகூலமாக ஒரு நல்ல லாட்ஜ் பட்டணத்தின் ஆரம்பத்திலிலேயே எங்களுக்கு கிடைத்து கொண்டது. எங்கள் வாகனங்களையும் நாங்கள் பாதுகாப்பாக நிறுத்த லாட்ஜ்க்கு முன்பாக இடம் கொடுத்தார்கள். நாங்கள் எல்லாரும் வசதியாக மூன்று அறைகளில் தங்கிக் கொண்டோம். காலையில் நாங்கள் குளிப்பதற்கு நல்ல வெந்நீர் கொடுத்தார்கள். எங்கள் விருப்பம்போல எங்களுக்கு ஆகாரம் செய்து தந்தார்கள். நாங்களும் எங்கள் ஊழியங்கள் முடித்து லாட்ஜ் திரும்பியதும் நல்ல புதிதான காய்கறிகளை கடை வீதிக்குச் சென்று சமையல்காரருக்கு வாங்கிக் கொடுத்தோம். லாட்ஜ்ஜின் பணியாளர்களும் நாங்கள் எல்லாரும் ஒரே குடும்பத்தின் பிள்ளைகளைப்போல நடந்து கொண்டோம். அவர்கள் எங்களுக்குப் பாராட்டிய அன்பு மிகவும் அதிகமாகும். லாட்ஜ்ஜின் பணியாளர்கள் மூவரும் நாங்கள் எல்லாரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தை நீங்கள் காண்பீர்கள்.

 
கோபாலை கர்த்தருக்குள் வழிநடத்தியது

நாங்கள் அந்த இடத்தில் தங்க வேண்டுமென்பது ஆண்டவரின் அநாதி தீர்மானமாக இருந்தது. காரணம், அந்த லாட்ஜ்ஜில் கோபால் என்ற ஒரு பணிவான வாலிபன் இருந்தான். படித்த அவன் திருமணமானவன். குழந்தை இல்லை. மனதில் அநேக கவலைகள் அவனைச் சூழ்ந்திருந்தது. வெளியூரிலிருந்து அவன் வேலைக்காக அங்கு வந்திருந்தான். அதிகாலை டீ மற்றும் வெந்நீர் எல்லாம் அவன்தான் எங்களுக்கு கொண்டு வந்து தருவான். நாங்கள் எங்களுடன் கொண்டு சென்றிருந்த தேவனுடைய பிரசுரங்களை எல்லாம் அவன் பார்த்துவிட்டு ஆண்டவர் இயேசுவைக் குறித்து அறிய அதிக ஆவல் கொண்டான். சந்தர்ப்பத்தை கர்த்தருக்குள் நாங்கள் நன்கு பயன்படுத்தி அந்த வாலிபனுக்கு ஒவ்வொரு நாளும் சத்தியத்தை எடுத்துக்கூறினோம். பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் தனது கட்டிலில் தனக்கு அருகாமையில் ஒவ்வொரு நாளும் கோபாலை அமரச்செய்து வேதாகமத்திலிருந்து தேவ வசனங்களை எடுத்துக் காண்பித்து அவனை கர்த்தருக்குள் வழிநடத்தினார்கள். அதின் பின்னர் எங்கள் வசம் இருந்த தேவனுடைய பிரசுரங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிரதிகள் கொடுத்து, முழுமையான இந்தி வேதாகமம் ஒன்றும் கோபாலுக்கு கொடுத்தோம். அவைகளை எல்லாம் அவன் வாசிப்பதாகவும், கர்த்தரை தேடுவதாகவும் அவன் தனது கண்களில் கண்ணீர் மல்க எங்களிடம் கூறினான். நாங்கள் சவுக்குட்டியா போய் அந்த லாட்ஜ்ஜில் தங்கியிருந்தது கோபாலை கர்த்தருக்குள் வழிநடத்த அனுகூலமாக இருந்தது என்பதை அறியும்போது எங்கள் உள்ளம் கர்த்தருக்குள் களிகூருகின்றது. பாஸ்டர் சகோதரன் சாமுவேல் அவர்களின் கட்டிலில் கோபால் அமர்ந்திருந்து தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருப்பதையும், நாங்கள் கொடுத்த கர்த்தருடைய பிரசுரங்களை கோபால் தனது மார்போடணைத்து நிற்பதையும் படத்தில் நீங்கள் காணலாம்.

   

 
சவுக்குட்டியா செழிப்பான இடம்,
ஆனால் விளைச்சல் வீணாகின்றது

ராம் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ள சவுக்குட்டியா மிகவும் சொழிப்பான இடம் என்று கூறப்படுகின்றது. துவாராகாட் என்ற இடத்தில் தங்கியிருந்த பஞ்சபாண்டவர்கள் அங்கிருந்து வந்து இந்த சவுக்குட்டியாவிலும் தங்கி பின்னர் கட்வால் மலைகளின் வழியாக கேதாரம் சென்று முக்தி சென்றதாக வரலாறு கூறுகின்றதாம். அந்த தகவல் நமக்கு தேவை இல்லைதான். சவுக்குட்டியா சமவெளி பிரதேசம் ஆனதால் வேளாண்மைத் தொழில் கொடிகட்டிப் பறக்கின்றது. இந்த இடங்களில் நெல், கோதுமை மற்றும் காய்கறிகள், பழவர்க்கங்கள் குறிப்பாக மாமரங்கள் நிறைய காணப்படுகின்றது. நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்ஜின் பெரிய ஜன்னல் வழியாக எங்களுக்கு முன்பாக வயல் வெளிகளில் நடக்கும் பணிகளை அநேகமாக நாங்கள் தினமும் காண்பதுண்டு. தூரத்தில் ஓடுகின்ற பெரிய ராம்கங்கா நதியும் அதை ஒட்டியுள்ள சவுக்குட்டியா பட்டணமும், உழவுத் தொழிலிலும், அறுவடை வேலைகளிலும் ஈடுபட்டுள்ள கிராமவாசிகளின் காரியங்களையும் நாங்கள் கவனிப்பதுண்டு. அவர்களுடைய கடினமான உழைப்பின் பலனை விலங்கினங்கள் குறிப்பாக குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தின்று நாசமாக்குவதை நாங்கள் கண்டு வேதனையடைந்திருக்கின்றோம். ஆனால், அந்த ஏழை கிராம மக்கள் தங்கள் உழைப்பை தங்கள் கடவுளர்களும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளட்டும் என்ற பெருந்தன்மையான எண்ணத்தில் அதை அதிகமாக கண்டு கொள்ளுவதில்லை. நரிகளையும், மற்ற விலங்கினங்களையும் கூட நாங்கள் எங்கள் அறையிலிருந்து பார்த்ததுடன் ஒரு நாள் ஒரு பெரிய உடும்பு எங்கள் ஜன்னல் வழியாக கீழே ஊர்ந்து சென்று கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்க்கு அடுத்த பக்கம் ரஸ்தாவை ஒட்டி இருளடர்ந்த கானகம் உள்ளது. அங்கிருந்து கானக விலங்கினங்கள் வரலாம் என்று நினைத்தோம். உழவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளையும், அறுவடை செய்து கொண்டிருக்கும் பெண்களையும், விளைச்சலை அழித்து நாசமாக்குகின்ற குரங்குகளின் கூட்டத்தையும் நீங்கள் காண்பதுடன் நாங்கள் கண்ட உடும்பையும் நீங்கள் காண்கின்றீர்கள்.

 
துவாராகாட்டில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

சவுக்குட்டியாவிலிருந்து ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் காலை ஆகாரத்திற்குப் பின்னர் எல்லாரும் கூடி ஜெபித்துவிட்டு எங்கள் இரு வாகனங்களையும் எடுத்துக் கொண்டு துவாராகாட் என்ற இடத்திற்கு வந்தோம். அங்கே ஓரிடத்தில் பூர்வ கால மெதடிஸ்ட் மிஷனரிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு இண்டர் மீடியட் கல்லூரி (நாம் மேல்நிலைப்பள்ளி என்று அழைப்பதை அங்கு இண்டர் மீடியட் காலேஜ் என்று அழைக்கின்றனர்) இருப்பதாக கேள்விப்பட்டு அந்தக் கல்லூரியில் உள்ள மாணவ மாணவியர் யாவருக்கும் தேவனுடைய பிரசுரங்களை கொடுத்துவிடவேண்டும் என்ற ஆவலில் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னரே பள்ளியின் பிரதான வாசலுக்கு முன்பாக வந்து நின்று கொண்டிருந்தோம். பிள்ளைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கொடுக்கக்கூடிய பிரசுரங்களை நாங்கள் வகைப்படுத்தி ஆயத்தமாக வைத்துக் கொண்டோம். துவாரகாட் மிஷன் மேல் நிலைப் பள்ளிக்கு முன்னர் எங்கள் வாகனங்கள் நின்று கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.

மற்ற பள்ளிகளில் படிக்கின்ற பெண் பிள்ளைகள் நாங்கள் நின்று கொண்டிருந்த பள்ளியைக் கடந்து செல்லுவதை நாங்கள் கவனித்த பொழுது அவர்களுக்கும் சாந்தி மார்க்கம் என்று அழைக்கப்படுகின்ற லூக்கா சுவிசேஷத்தையும் இதர கைப்பிரதிகளையும் ஜெபத்துடன் கொடுத்தோம். நாங்கள் கொடுத்த பிரசுரங்களை பிள்ளைகள் ஆவலாக வாங்கி வாசித்துக் கொண்டு செல்லும் காட்சிகளையும் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் காலை அசெம்ளி நடந்து கொண்டிருப்பதையும் நீங்கள் காணலாம்.

மிஷன் இண்டர் மீடியட் கல்லூரி ஆரம்பிப்பதற்கு முன்னர் அதின் பிரின்ஸ்பால் அவர்களிடம் நமது சகோதரர்கள் சென்று அதில் படிக்கின்ற மாணவ மாணவியர் யாவருக்கும் தேவனுடைய பிரசுரங்களை இலவசமாகக் கொடுக்க அனுமதி கேட்டனர். பொதுவான காலை அசெம்ளி முடிந்ததும் ஒவ்வொரு வகுப்புகளுக்காகச் சென்று அவைகளைக் கொடுக்கும்படியாக அவர் எங்களைக் கேட்டுக் கொள்ளவே நாங்கள் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் சென்று ஜெபத்துடன் ஆண்டவருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். அந்த மிஷன் கல்லூரியில் மொத்தம் 250 பிள்ளைகளும் 18 ஆசிரியர்களும் இருந்தனர். வேதாகமம் தங்களுக்கு வேண்டுமென்று விரும்பிக்கேட்ட 13 ஆசிரியர்களுக்கு ஹிந்தி மொழி வேதாகமங்களைக் கொடுத்தோம். கிறிஸ்தவ மிஷனரிகள் தோற்றுவித்த அந்த மிஷன் பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் பலரும், மாணவர்களில் அநேகரும் இந்துக்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயமாகும். கர்த்தர் அந்த நாளின் காலை வேளையில் எங்களுக்குக் கொடுத்த அருமையான ஊழிய வாய்ப்புக்காக அவருக்கு நன்றி கூறிவிட்டு தொடர்ந்து எங்கள் ஊழியத்தைச் செய்தோம்.

 
சித்ரேஷ்வர், மகத்காம், பான் என்ற இடங்களில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள்

துவாராகாட் மிஷன் இண்டர் காலேஜ்ஜில் நாங்கள் எங்கள் ஊழியங்களை முடித்துவிட்டு சில கில்லோ மீட்டர்கள் வண்டி ஓட்டத்திற்குப்பின்னர் மலை உச்சியில் ஒரு மேல்நிலைப்பள்ளி இருப்பதை அங்குள்ள கிராமவாசிகள் மூலமாக கேள்விப்பட்டு வாகனங்களை நாங்கள் அங்கு ஓரிடத்தில் நிறுத்திவிட்டோம். எங்களிலுள்ள பெலசாலிகளான சகோதரர்கள் பெட்டிகளில் தேவனுடைய பிரசுரங்களை நிரப்பிக் கொண்டு அடர்ந்த சோலை மரங்களுக்கு நடுவாக மலை உச்சியில் இருந்த சித்ரேஷ்வர் மேல் நிலைப்பள்ளிக்குப் புறப்பட்டனர். வாகனங்கள் செல்லக்கூடிய ரஸ்தாவாக இல்லாததால் கடினமான ஒற்றையடிப் பாதை வழியாகவே நமது சகோதரர்கள் வியர்வை வடிய வடிய, மூச்சு வாங்க நடந்து சென்று அந்த மேல் நிலைப் பள்ளியில் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்தனர். அந்த மேல் நிலைப் பள்ளியில் மொத்தம் 271 மாணவ மாணவியரும் 17 ஆசிரியர்களும் இருந்தனர். அந்த மேல் நிலைப் பள்ளியை அடுத்து இருந்த ஆரம்ப பாடசாலையில் 59 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்களுக்கும் கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்தனர். சித்ரேஷ்வர் மேல் நிலைப்பள்ளியையும், அதை அடுத்து இருந்த ஆரம்ப பள்ளியையும் படத்தில் நீங்கள் காண்பீர்கள்.

அதின் பின்னர் நமது சகோதரர்களில் சிலர் மலையின் மிகவும் உச்சியில் காணப்பட்ட மகத்காம் கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த உயர்நிலைப்பள்ளியில் ஆண்டவருடைய வார்த்தைகளைக்கூறி அங்கிருந்த 200 மாணவர்களுக்கும் 6 ஆசிரியர்களுக்கும் பிரசுரங்களைக் கொடுத்தனர். உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அனில் குமார் நமது சகோதரர்களுக்கு மிகவும் அன்பு பாராட்டியுள்ளார். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. அவருக்கு ஹிந்தி வேதாகமம் உட்பட நல்ல அருமையான பிரசுரங்களை நமது ஊழியர்கள் கொடுத்து திரும்பியிருக்கின்றனர். மலை உச்சியில் மரங்களுக்கு கீழாக காணப்படும் மகத்காம் உயர்நிலைப்பள்ளியை நீங்கள் காணலாம்.

உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு ஆரம்ப பள்ளியில் 40 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கும் சுவிசேஷம் கொடுக்கப் பட்டுள்ளது. அதின் பின்னர் திரும்பும் வழியில் இருந்த பைராட்டி கிராமத்தில் இருந்த ஆரம்ப பாடசாலையில் காணப்பட்ட 42 மாணவருக்கும் 4 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை நமது சகோதரர்கள் கொடுத்திருக்கின்றனர்.

இறுதியில் பான் என்ற கிராமத்தில் இருந்த ஆரம்ப பாடசாலையில் இருந்த 41 மாணவர்களுக்கும் 2 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாடசாலையின் தலைமை ஆசிரியை சம்பாதேவி அவர்களுக்கு ஒரு ஹிந்தி வேதாகமம் கொடுத்திருக்கின்றனர். பான் கிராமத்தின் பள்ளியையும், பான் கிராமத்தின் ஆரம்பத்தில் ரஸ்தாவின் ஓரமாக நாட்டப்பட்ட அறிவிப்பு பலகையையும் நீங்கள் காணலாம்.

 
நாகார்ச்சுன், சிங்காலி, சுராய்கேத்-பிட்டோலியில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள்

காலை 9 மணிக்கு நாங்கள் எங்கள் வாகனங்களுடன் தேவ ஊழியத்திற்காகப் புறப்பட்டோம். புறப்படும் முன்னர் நாங்கள் வழக்கம்போல ஒன்றுகூடி ஜெபித்து கர்த்தருக்கு எங்களையும், எங்கள் வாகனங்களையும், அன்றைக்கு மேற்கொள்ளப்போகும் தேவனுடைய ஊழியங்களையும் ஒப்புவித்துவிட்டு துவாரகாட் ரஸ்தாவில் சென்றோம். ஏறத்தாழ 10 கி.மீ. தொலைவிற்கு வலது இடது புறங்களில் அடர்த்தியான சவுக்கு மரக் காடுகள் காணப்பட்டது. அந்த 10 கி.மீ. தொலைவிற்கு எந்த ஒரு மனுஷ சஞ்சாரமே காணப்படவில்லை. எங்களுக்கு எதிர்புறத்திலிருந்தோ அல்லது எங்களைக் கடந்தோ எந்த ஒரு வாகனமும் செல்லவில்லை. இறுதியில் நாங்கள் இன்னும் ஏழு கி.மீ. பிரயாணம் செய்து நாகார்ச்சுன் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்தக் கிராமம் மலை அடிவாரத்தில் இருப்பதைக் கவனித்தோம். பிள்ளைகள், மலைகளின் நானா பகுதிகளிலிருந்தும் வந்து படிப்பதற்காக வசதியாக ஒரு மேல்நிலைப்பள்ளியை அந்த மலை உச்சியில் அந்த இடத்தில் கட்டியிருக்கின்றனர். ஆண்களும், பெண்களும் கல்வி பயிலும் அந்த மேல்நிலைப்பள்ளியின் பிரின்சிபால் பிரவிண் குமார் ஒரு பிராமணர் ஆவார். பள்ளியிலுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் கிறிஸ்தவ பிரசுரங்களை விநியோகிக்க அவர் பூரண சம்மதம் தெரிவித்ததுடன் தனக்கு ஒரு ஹிந்தி வேதாகமம் வேண்டுமென்று எங்களிடம் விரும்பிக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். நாங்கள் தேவ ஊழியத்திற்காக விசேஷமாக டில்லியில் இருந்து அதிக விலைகொடுத்து வாங்கி வைத்திருந்த கிறிஸ்தவ புத்தகங்களிலிருந்து வகைக்கு ஒன்றாக அவருக்குக் கொடுத்தோம். அந்த மேல்நிலைப் பள்ளியில் 130 மாணவரும் 5 ஆசிரியர்களும் இருந்தனர். அனைவருக்கும் பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன. நாகார்ச்சுன் மேல் நிலைப்பள்ளி மேட்டில் இருப்பதை நீங்கள் காணலாம்.

அந்த மேல் நிலைப்பள்ளிக்குக் கீழாகவே நாகார்ச்சுன் ஆரம்ப பாடசாலை ஒன்றும் இருந்தது. அதில் 55 மாணவரும் 3 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம். அந்த ஆரம்ப பாடசாலையையும் நீங்கள் படத்தில் காணலாம்.

நாகார்ச்சுன் என்ற இடத்திலிருந்து நாங்கள் சிங்கராலி என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்த பள்ளியில் படித்த 13 மாணவர்களுக்கும் 2 ஆசிரியர்களுக்கும் சுவிசேஷ பிரதிகளை விநியோகித்தோம். சிங்கராலி பள்ளியின் படத்தையும் நீங்கள் காண்பீர்கள்.

சிங்கராலியிலிருந்து 3 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து நாங்கள் சுராய்க்கேத் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த இடத்தில் சுராய்கேத் பிட்டோலி என்ற பெயரில் ஒரு பெரிய மேல்நிலை பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் பிரின்சிபால் அனில் குமார் பந்த் அவர்களிடம் தேவனுடைய பிரசுரங்களை பள்ளியின் மாணவ மாணவியருக்கு கொடுக்க அனுமதி கேட்டு அந்தப் பள்ளியில் படித்த 500 மாணவ மாணவியருக்கும் 30 ஆசிரியர்களுக்கும் சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். ஒவ்வொரு வகுப்பு வகுப்பாக நாங்கள் சென்று பிரதிகளைக் கொடுத்ததுடன் அந்த நேரம் அடித்த வெயிலின் காரணமாக மரத்தடி நிழலில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த இடங்களிலும் பிரதிகளை கொடுத்தோம். சுராய்க்கேத் - பிட்டோலி இண்டர் காலேஜ் (மேல்நிலை பள்ளி) முகப்பு வாயிலையும், அந்தப் பள்ளியில் கர்த்தருக்காக தான் கொண்டு வந்திருந்த பிரதிகளை எல்லாம் கொடுத்து முடித்து தனது வெறுமையான ஜோல்னா பையுடன் திரும்பிக் கொண்டிருக்கும் நமது சகோதரன் விஜய்சிங் அவர்களையும் நீங்கள் காண்கின்றீர்கள்.

ஹிந்தி தெரிந்த தேவ பிள்ளைகள் எங்கள் வார்த்தைகள் உண்மையா என்பதை நீங்களே வாசித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் பள்ளியில் வேலை பார்த்த கமலா ஹார்போலா ஒரு பிராமணர் ஆவார். அவர் தனக்கு ஒரு ஹிந்தி வேதாகமம் வேண்டுமென்று எங்களிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டார். கலியாணமாகாத கமலா 36 வயதுடையவர். ஹிந்தி வேதாகமம் வேண்டுமென்று விரும்பிக்கேட்ட வாஞ்சையுள்ள ஆத்துமாக்களுக்கெல்லாம் அவற்றைக் கொடுத்தோம். சுராய்க்கேத்-பிட்டோலி மேல்நிலைப் பள்ளியையும், மரத்தடி நிழலில் பாடம் நடக்கும் வகுப்புகளில் நமது சகோதரர்கள் ஆர்வத்தோடு பிரசுரங்களை கொடுப்பதையும் படங்களில் நீங்கள் காண்பீர்கள்.

அந்த மேல்நிலைப் பள்ளியை ஒட்டியே பள்ளத்தில் ஒரு ஆரம்ப பாடசாலையும் இருந்தது. அங்கே படித்த 39 மாணவர்களுக்கும், மூன்று ஆசிரியர்களுக்கும் தேவனுடைய சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தோம். அன்பின் ஆண்டவர் எங்களுக்கு கொடுத்த அருமையான ஊழியங்களுக்காக அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்துவிட்டு ஜெபத்துடன் சவுக்குட்டியாவிலுள்ள எங்கள் லாட்ஜ்க்கு திரும்பினோம். எங்கள் கரங்களிலிருந்து மக்கள் தேவனுடைய பிரசுரங்களைப் பெற்றுப்படிக்கும் காட்சிகளை படங்களில் நீங்கள் காண்பீர்கள். பாவிகளாகிய எங்களுடைய கடினமான பாடுகளும், பிரயாசங்களும், தேவப்பிள்ளைகளாகிய உங்களுடைய தியாக அன்பும், ஜெபங்களும் ஒரு நாள் நிறைந்த அறுவடையைத் தந்தருள அன்பின் பரம தகப்பன் தயைபுரிவாராக.

 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM