சம்பாவத்திலிருந்து சிப்தி என்ற இடம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மலை ரஸ்தாவில் வளைந்து வளைந்து அடிவாரம் சென்று இறுதியில் எங்கள் வாகனங்கள் இந்த ஊரை வந்தடைந்தது. இந்த ஊரில் ஒரு சிறிய கடை வீதி உள்ளது. அதின் அருகிலேயே மரங்களடர்ந்த பகுதிக்குள் ஒரு இண்டர்மீடியட் கல்லூரி உள்ளது. நமது இடத்தில் மேல் நிலைப்பள்ளி என்பதை அங்கு அவர்கள் கல்லூரி என்று அழைக்கின்றனர். அப்படியேதான் எழுதியும் வைத்திருக்கின்றனர். உங்களுக்கு ஹிந்தி தெரியுமானால் படத்தில் காண்பதை வாசித்துப் பாருங்கள். அங்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை மாணாக்கர்கள் விரிவுரையாளர்கள் என்றும் தலைமை ஆசிரியரை பிரின்சிபால் என்றுமே அழைக்கின்றனர்.

சம்பாவத்திலிருந்து நாங்கள் சற்று காலை நேரத்திலேயே புறப்பட்டு சிப்தி கிராமத்தை வந்தடைந்துவிட்டோம். பொதுவாக மேல் நிலைப் பள்ளிகளில் மாணாக்கருக்கு கிறிஸ்தவ பிரசுங்களை கொடுக்க ஆசிரியர்கள் அனுமதி அளிப்பதில்லை. அப்படியே பள்ளியின் தலைமை ஆசிரியரே வகுப்புகளுக்குள் சென்று பிரதிகளை பிள்ளைகளுக்கு கொடுக்கும்படியாக சந்தோசமாக அனுமதி கொடுத்துவிட்டாலும் அந்த இடத்தில் தந்திர சாத்தான் தனது ஆளை ஆயத்தமாக வைத்துக் காத்துக் கொண்டிருப்பான். அங்கு ஒரே ஒரு ஆசிரியர் அதற்கு எதிராக போர்க் கொடி ஏந்தி தலைமை ஆசிரியரிடம் மதமாற்ற பிரச்சாரம் என்ற வார்த்தையைப் போட்டு அவரை மேற்கொண்டு எங்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி விடுவான். சாத்தானுடைய இந்தக் கலையை நாங்கள் பல்லாண்டு காலமாகக் கண்கூடாக கண்டிருப்பதால் அவனுடைய தந்திரத்திற்கு நாங்கள் எங்களை விலக்கிக் காத்துக் கொண்டு விடுகின்றோம்.
அதின் காரணமாக பள்ளிக்கு வரும் பாதைகளிலேயே நாங்கள் நின்று தேவனுடைய சுவிசேஷ பிரதிகளை பிள்ளைகளுக்கு ஜெபத்துடன் விநியோகித்து விடுகின்றோம். பிள்ளைகளும் அவைகளைப் பத்திரமாக தங்கள் பாடப் புத்தகங்களுடன் வைத்து வாசித்துவிட்டு பாதுகாப்பாக வீட்டிற்கு எடுத்துச் சென்று விடுவார்கள். அவர்களுடைய பெற்றோர் அவைகளை வீடுகளிலே வாசிக்க அது நல்ல சந்தர்ப்பமாகிவிடுகின்றது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக. அந்த நாளிலும் நாங்கள் அனைவரும் பிள்ளைகள் பள்ளிக்கு வரும் சில வழித் தடங்களை முன்கூட்டியே கேட்டறிந்து ஆங்காங்கு போய் எங்கள் ஜோல்னா பைகளை பிரசுரங்களால் நிறைத்து நின்று கொண்டோம். இந்தப் பொறுப்பான பணியில் நமது டிரைவர் சகோதரர்களும் நமக்கு தோளோடு தோள் கொடுத்து நிற்பார்கள். அப்படி அவர்கள் ஆண்டவருக்கு தொண்டு செய்யும் ஒரு படத்தை அதாவது நமது டிரைவர் சகோதரன் நரேஷ் அவர்கள் தனது கை நிறைய பிரசுரங்களை எடுத்துக் கொண்டு தேவையான நமது ஊழியர் ஒருவருக்குக் கொடுக்க விரைந்து கொண்டிருப்பதை நீங்கள் படத்தில் காணலாம்.

நாங்கள் அப்படிக் கொடுப்பதை அறிந்த அருகிலிருந்த ஒரு கிராமத்திலுள்ள கற்றறிந்த பெண் மக்களும் தங்கள் கிராமத்திலிருந்து ஏறி வந்து எங்களிடம் தேவனுடைய பிரசுரங்களைக் கேட்டு வாங்கிச் சென்றனர். அப்படி ஓரிடத்தில் நமது தேவ ஊழியர் விஜயசிங் அவர்கள் சிப்தி மேல் நிலைப் பள்ளிப் பிள்ளைகளுக்கு பிரசுரங்களை கொடுத்துக் கொண்டிருப்பதையும், மற்றொரு படத்தில் நமது சகோதரர்கள் நார்ட்டன் மற்றும் நரேந்தர் அவர்கள் தங்கள் பணிகளில் கருத்தாக இருப்பதையும், நமது பாஸ்டர் சகோதரன் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் தேவனுடைய பிரசுரங்கள் அடங்கிய பெட்டி ஒன்றை தனது தலையில் தூக்கிச் சுமந்து செல்லுவதையும் மற்றொரு படத்தில் விஜயசிங் அவர்களும், நரேந்தர் அவர்களும் கிராமப் பெண்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். சிப்தி மேல் நிலை பள்ளியில் 300 பிள்ளைகள் படிப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்த ஒரு ஆரம்ப பள்ளியிலும் 60 பிள்ளைகள் படிப்பதாக அறிந்தோம். அவர்களுக்கும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்திருந்தோம்.




சிப்தியில் நாங்கள் எங்கள் ஊழியத்தை முடித்துவிட்டு அங்குள்ள சிறிய கடை வீதியிலும் அனைவருக்கும் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்தோம். பின்னர் அங்குள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு கர்த்தர் பாராட்டின அவருடைய அன்புக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம். எங்கள் வாகனங்கள் சுற்றி சுற்றி வளைந்து உச்சி மலை ஏறினது. கீழே நாங்கள் ஊழியம் செய்த சிப்தி ஊரும் அதின் பள்ளியும் சிறிதாகத் தெரிந்தன. அங்கே நடைபெற்ற தேவ ஊழியங்களை ஆண்டவர் ஆசீர்வதிக்க ஜெபித்துவிட்டு இறுதியாக சம்பாவத் பட்டணம் வந்து சேர்ந்தோம்.
சம்பாவத்தைச் சுற்றி 30 கி.மீ. தொலைவிலுள்ள அமேதி, 40 கி.மீ. தொலைவிலுள்ள ஜல்தி, 55 கி.மீ. தொலைவிலுள்ள நரசிங் தாக்கா, கேத்திக் கான், லல்லுவாபானி, நாரியல் காம், மானார், சன்யா பகட், போன்ற அநேக கிராமங்களுக்குச் சென்று அங்கு அமைந்துள்ள மேல் நிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் ஆரம்ப பள்ளிகள் போன்றவற்றில் பயிலுகின்ற பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியருக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்ததுடன் அங்குள்ள கிராமவாசிகளுக்கும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். எல்லா காரியங்களையும் விபரமாக எழுதி நாங்கள் எடுத்த படங்களைப் போட இங்கு இடம் போதாது, மனுஷீக பெலத்தாலும் அது இயலாது. ஆனால், செய்யப்பட்ட ஊழியங்களையும், அதற்காக நாங்கள் எடுத்துக் கொண்ட அன்பின் பிரயாசங்களையும், எங்களுடைய ஆத்தும பாரத்தையும் "நீர் என்னைக் காண்கின்ற தேவன்" என்று ஆகார் அம்மையார் அன்று சொன்னார்களே (ஆதி 16 : 13) அந்த சர்வ வல்ல கர்த்தர் காண்பவராக, அறிகின்றவராக இருக்கின்றார்.
இறுதியாக கர்த்தரை நேசிக்கின்ற தேவ பிள்ளைகளாகிய நீங்கள் இல்லையேல் இந்த ஊழியங்கள் ஒன்றும் இல்லை. நீங்களே எங்களை அனுப்பினீர்கள். எங்கள் அனைத்து தேவைகளையும் நீங்களே உங்கள் கஷ்ட சம்பாத்தியத்திலிருந்து சந்தித்தீர்கள். பல்லாயிரக்கணக்கான இமயமலை மக்கள் கரங்களில் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் பத்திரமாகப் போய்ச் சேர்ந்திருக்கின்றன என்றால் அதின் ஒரே காரணம் நீங்கள்தான். ஆம், நீங்கள் மாத்திரமேதான். தமது நாமத்தினிமித்தம் கொடுக்கப்பட்ட ஒரு கலசம் தண்ணீரையும் நினைவில் வைத்து அதற்கான பிரதி பலனை தப்பாமல் அளிக்கும் கர்த்தர் உங்களுடைய பிரயாசங்களை மறந்துவிடுவதற்கு அவர் அநீதியுள்ளவர் அல்லவே! அதின் பிரதி பலனை நீங்கள் ஓர் நாள் பரலோகில் காண்பீர்கள்.
பாவிகளாகிய எங்கள் மூலமாக 2008 ஆம் ஆண்டு ஏறெடுக்கப்பட்ட ஊழியங்கள் முப்பது, அறுபது, நூறுமான பலனை ஏற்ற காலங்களில் பிறப்பிக்க தேவ பிள்ளைகளாகிய நீங்கள் தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நம்முடைய பிரயாசங்களின் பலனை ஒரு நாள் நாம் பரலோகில் காண்போம். அல்லேலூயா!
எங்களுடைய கரங்களிலிருந்து தேவனுடைய பிரசுரங்களைப் பெற்றுப் படிக்கும் மக்களின் படங்களையும் நீங்கள் காணலாம். |