இமயமலைகளில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்



கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக.

இந்த தேவ எக்காள இதழில் தர்ம் பிரகாஷ் ஷர்மா அவர்களின் அனுபவசாட்சியை நீங்கள் படித்து ஆனந்திப்பதற்காக மிகவும் விரிவாக சுமார் 100 பக்கங்களில் உங்களுக்குத் தந்திருக்கின்றேன். உலகில் எந்த ஒரு தேவ ஊழியனாலும் ஆண்டவரண்டை வழிநடத்த முடியாத வைராக்கியமான, மிகவும் செல்வாக்குள்ள அந்த இந்து மனிதரை அவர் கல்லூரி நாட்களில் படித்த பாடப் பகுதியான "ஆண்டவருடைய மலைப் பிரசங்கம்" எத்தனை எளிதாகவும், அழகாகவும் வழிநடத்தியிருக்கின்றது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? ஆம், தேவனுடைய வார்த்தைகள் ஜீவனுள்ளவைகள். "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" (எபி 4 : 12) என்று நாம் வேத புத்தகத்தில் வாசிக்கின்றோம்.

எந்த மனிதனானாலும் சரியே, அவனை ஜீவனுள்ள தேவனுக்கு நேராக வழிநடத்தக்கூடிய அவருடைய ஜீவ வார்த்தைகளைத்தான் எங்களுடைய வட மாநில ஊழியங்களில் மக்களுக்குக் கொடுத்து வருகின்றோம். இந்த ஊழியங்களின் உடனடி அறுவடைகளும், பலாபலன்களும் நம்முடைய கண்களுக்கு தற்பொழுது தெரியாத போதினும் தம்முடைய தாசன் தர்ம் பிரகாசுடன் ஒரு இரவு வேளை அவருடைய கல்லூரி ஹாஸ்டலில் தம்முடைய வார்த்தைகளின் மூலமாக பேசி அவரை தமது சொந்தமாக்கிக் கொண்ட கர்த்தர் நாங்கள் ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும் மக்களுக்குக் கொடுக்கும் தம்முடைய வார்த்தைகளின் மூலமாக நிச்சயமாகப் பேசுவார், அவர்களை தமது நித்திய ஜீவனுக்கு சுதந்திரவாளிகளாக்குவார் என்பதை நாம் எந்த ஒரு சந்தேகத்துக்கு இடமின்றி விசுவாசிக்கலாம். படிக்கும் அனைவரும் தேவனால் சந்திக்கப்படுவார்கள் என்பது முற்றும் கூடாத காரியமாக இருந்த போதினும் தேவனால் முன்குறிக்கப்பட்ட ஒரு கூட்டம் மக்கள் அவருடைய நித்திய இளைப்பாறுதலில் பிரவேசிக்கும் பாக்கியம் பெறுவார்கள் என்பதை நாம் நிச்சயமாக நம்பலாம். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

ஆண்டுதோறும் எங்களை ஒரு குழுவாகக் கூட்டி 2 வாகனங்களைத் தந்து மிகுந்த செலவினங்கள் நிறைந்த இந்த ஊழியத்தை மனுப்புத்திக்கு எட்டாத விதத்தில் நம் தேவன் அற்புதம் அதிசயமாக நடத்தி வருகின்றார். இது எந்த ஒரு தனி மனிதனோ அல்லது குழுவோ செய்கின்ற ஊழியம் அல்ல. அன்று தமது ஜனத்திற்கு செங்கடலைப் பிளந்து வழி அமைத்துக்கொடுத்து அவர்களை கானானுக்கு கரம் பிடித்து அழைத்துச் சென்ற சேனைகளின் கர்த்தர் ஒருவரே செய்கின்ற ஊழியம். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. அல்லேலூயா.

 

லோஹாகாட் என்ற இடத்தில்
செய்யப்பட்ட தேவ ஊழியங்கள்

நாங்கள் பித்தோராகார்ட் என்ற இடத்தில் சுமார் 10 நாட்களுக்கும் கூடுதலாக இருந்து எங்களுடைய ஊழியங்களை செய்து முடித்துக் கொண்டு அங்கிருந்து 63 கி.மீ. தொலைவிலுள்ள லோஹாகாட் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் மிகவும் குளிராக இருக்கின்றது. கேதுரு மரச் சோலையின் மத்தியில் அமைந்துள்ள இந்த இடம் பார்ப்பதற்கு அழகாக இருந்த போதினும் இந்த இடத்தில் உள்ள குளிர் நம்மை வாட்டுவதாக இருக்கின்றது. இந்த இடத்தில் நாங்கள் அரசாங்க ஓய்வு விடுதியில் தங்கியிருந்தோம். ஆண்டவருடைய அளவற்ற அன்பின் கிருபையால் எங்களுக்கு நாங்கள் 7 பேர் தங்கிக் கொள்ள பொது அறையும், இருவர் தங்கிக் கொள்ள ஒரு தனி அறையும் கிடைத்தது. அதின் காரணமாக நாங்கள் தங்கும் அறையின் வாடகைச் செலவுகளை கணிசமான அளவு மிச்சப்படுத்தினோம்.

நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதி மலை உச்சி மேட்டில் இருந்தபடியால் குளிரின் கடுமை இன்னும் அதிகமாக இருந்தது. பகலில் அறைக்குள் நாங்கள் இருக்க இயலாமல் சூரிய வெப்பத்திற்காக வெளியேதான் அதிகமாக இருந்தோம். அடுத்த ஒரு கஷ்டம் இந்த இடத்தில் எங்களுக்கு சரியான உணவுகள் கிடைக்கவில்லை. நாங்கள் தங்கியிருந்த ஓய்வு விடுதியில் சாப்பிடலாம் என்றால் விலைவாசிகள் நெருங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அதிகாலையிலும், மாலையிலும் டீ குடிக்க சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கும் கூடுதலாகவே நடக்க வேண்டியதாக இருந்தது. எங்கள் ஆகாரத்திற்கு இன்னும் கூடுதலான தூரம் நாங்கள் நடந்தோம். லோஹாகாட்டில் நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதிக்கு முன்பாக நாங்கள் நின்று கொண்டிருக்கும் படத்தை நீங்கள் காணலாம்.

இந்த லோஹாகாட்டில் நாங்கள் கஷ்டங்கள் அனுபவித்த போதினும் அன்பின் ஆண்டவர் சுற்றியுள்ள இடங்களில் எங்களுக்கு நல்ல ஊழிய வாய்ப்புகளைத் தந்தார். அநேக ஆரம்ப பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளின் ஏராளமான மாணவ மாணவியரைச் சந்தித்து தேவனுடைய பிரசுரங்களைக் கொடுக்க கர்த்தர் உதவி செய்தார்.

 

பசோடியில் செய்யப்பட்ட ஊழியங்கள்

ஒரு நாள் காலையில் நாங்கள் எங்கள் ஜெபங்களை ஏறெடுத்த பின்னர் எங்கள் வாகனங்களில் தேவனுடைய பிரசுரங்களை கணிசமாக எடுத்துக் கொண்டு லோஹாகாட்டிலிருந்து 30 கி.மீ. தூரம் மலைகளையே சுற்றிச் சுற்றி எங்களுக்கு எதிர்ப்பட்ட சின்னச் சின்ன 9 கிராமங்களைச் சந்தித்து அங்கிருந்த 6 பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவியருக்கும் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டே இறுதியில் எந்த ஒரு ஆள் அரவமற்ற மலைத் தொடர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தோம். எங்கள் வாகனங்கள் படிப்படியாக இறங்கி இறங்கி அடிவாரத்திற்கே சென்று கொண்டிருந்தது. அந்த இடங்களில் மயான அமைதி நிலவுவதையும், அவ்வப்போது கீழேயுள்ள அடர்ந்த கருங்கானகங்களிலிருந்து பறவைகளின் விந்தையான குரல் ஒலிகளையும் நாங்கள் கேட்டுக்கொண்டே சென்றோம். ஒரு குறிப்பிட்ட தூரம் வரவும் ஒரு வளைவில் ஒரு அறிவிப்பு பலகை இருந்தது. அதில் "அரசாங்க ஆரம்ப பள்ளி" - பசோடி என்றும் அங்கிருந்து பள்ளிக்கு இன்னும் 1 கி.மீ. தொலைவு இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. வாகனங்கள் செல்லக்கூடிய வழியாக இல்லாததால் நாங்கள் தொடர்ந்து செல்ல இயலவில்லை. அந்த பசோடி கிராமம் மிகவும் பின் தங்கிய கிராமமாகக் காணப்பட்டதுடன் அதின் சொற்பமான வீடுகள் எப்படியோ கட்டப்பட்டதாக இருந்தது. அங்குள்ள வீடு ஒன்றின் தலைவாசலில் ஒரு முதியவர் அமர்ந்திருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் நீங்கள் காண்பதுடன் நாங்கள் கொடுத்த சுவிசேஷ பிரசுரத்தை ஒரு வாலிபன் மற்றொரு வீட்டிலிருந்து ஆர்வமாகப் படிப்பதையும் நீங்கள் காணலாம்.

அன்பின் கருணாகரக் கர்த்தர் இத்தனை நெடுந்தூரத்திற்கு எங்களை அழைத்து வந்ததிலும் ஒரு மேலான நோக்கம் இருக்கவே செய்தது. அந்த கிராமத்தில் பூரன்சிங் என்ற வாலிபனை நாங்கள் சந்தித்தோம். ஆண்டவருடைய சுவிசேஷ செய்தியை அறிய அவன் மிகுந்த ஆர்வம் காட்டினான். வாய்ப்பை நாங்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டோம். நம்முடைய பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் அந்த வாலிபனுக்கு தேவனுடைய சத்தியத்தை கூடுதலான நேரம் எடுத்து மிகவும் தெளிவாக விளக்கிக் கூறினார்கள். வைராக்கியமான இந்து குடும்பத்திலிருந்து இரட்சகரை ஏற்றுக் கொண்டிருக்கும் அவர்கள் தனது சொந்த அனுபவ சாட்சியை எல்லாம் கூறி பூரன் சிங்கை ஓரளவுக்கு ஒரு நல்ல மனத்தெளிவுக்குக் கர்த்தருடைய கிருபையால் கொண்டு வந்தார்கள்.

அவன் மிகுந்த ஆர்வம் காட்டியபடியால் ஒரு ஹிந்தி வேதாகமத்தையும் ஜெபத்துடன் அவனுக்குக் கொடுத்து அதை நன்றாகப் படிக்கும்படியாகக் கூறினார்கள். சகோதரன் சாமுவேல் அவர்கள் உள்ளத்தின் பாரத்தோடு பூரன் சிங்கிற்கு ஆண்டவருடைய சுவிசேஷ சத்தியத்தை விளக்குவதையும், தனது கரத்தில் வேதாகமத்துடன் அதை அவன் ஆர்வத்தோடு கவனிப்பதையும் நீங்கள் படத்தில் பார்க்கலாம். தனித்த ஏகாந்தமான அந்த கிராமத்தில் வாழும் பூரன் சிங் நாங்கள் கொடுத்த வேதாகமத்தை அவ்வப்போது எடுத்து வாசிக்கவும் அதின் மூலமாக கர்த்தரின் குரல் கேட்கவும் தேவ பிள்ளைகளாகிய நீங்களும் உங்கள் ஜெபங்களில் அவனை அன்பாக நினைத்துக் கொள்ளுங்கள்.

 

கும்தேஷ் ஷக்கில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

லோஹாகாட் என்ற இடத்திலிருந்து கும்தேஷ் ஷக் என்ற இடம் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. அன்று காலையில் நாங்கள் ஒன்றாகக் கூடி எங்கள் ஜெப தூபங்களைக் கர்த்தருக்கு ஏறெடுத்து அன்றைய நாளின் தேவ ஊழியங்களை ஆண்டவருடைய கரங்களில் ஒப்புவித்துவிட்டு கும்தேஷ்க்குப் பிரயாணப்பட்டோம். எங்கள் வழித்தடத்தில் இருந்த சம்மன் தேவால், பில்டி, நீயூதுக்கானா, தூர்பா, தோனிசில்லாங் போன்ற கிராமங்களில் எங்கள் வாகனங்களை நிறுத்தி, நிறுத்தி மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்தோடு விநியோகித்துக் கொண்டே சென்றோம். எந்த ஒரு எதிர்ப்புகளும் இல்லாமல் மக்கள் ஆர்வத்தோடு அவைகளைப் பெற்று வாசித்தனர்.

எங்கள் வாகனங்கள் பெரிய பெரிய மலைகளைச் சுற்றி நீண்ட தொலைவு வந்ததும் இன்னும் தூரத்தில் ஒரு அழகிய மலைக் கிராமம் தெரிந்தது. ஆம் அதுதான் கும்தேஷ் கிராமம். எப்படியாவது அந்தக் கிராமத்திற்குச் சென்று ஆண்டவருடைய வார்த்தைகளைக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் சென்றோம். அந்தக் கிராமத்தின் ஒரு பகுதி ஆரம்பத்திலேயே இருந்தது. நமது தேவ ஊழியர்கள் அங்கும் இங்குமாக மேடுகளில் ஏறி அந்த இடத்திலிருந்த எல்லா வீடுகளுக்கும் சென்று சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தனர். பின்னர் நாங்கள் அங்கிருந்த ஒரு டீ கடையில் டீ குடித்துவிட்டு கிராமத்திற்குச் சென்றோம். அங்கு செல்லும் பாதை சீராக இல்லாததால் ஒரே ஒரு வாகனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு சிலர் மட்டுமே சென்றோம். அங்குள்ள மக்களுக்கு நாங்கள் சுவிசே பிரதிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு வயதான மனிதர் ஊரின் மத்தியிலுள்ள பெரிய அரச மரத்திற்குக் கீழாக சில மக்களிடம் கிறிஸ்தவ மார்க்கத்தை நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்திருக்கின்றோம் என்றும் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்று இந்தக் காரியத்தை நாங்கள் செய்வதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் என் காதில் விழவே நான் சற்று தொலைவில் இருந்த பாஸ்டர் சகோதரன் சாமுவேல் அவர்களை அருகில் அழைத்து விபரம் சொன்னேன்.

உடனே, அவர்கள் அங்கு சென்று நாங்கள் எதற்காக வந்திருக்கின்றோம் என்பதையும், மதத்தைப் பிரச்சாரம் பண்ண வராமல் மனுமக்களின் பாவங்களிலிருந்து அவர்களை விடுவித்து அவர்களுக்கு பரலோக வாழ்வு அளிக்க தம்மையே கல்வாரி சிலுவையில் தியாக பலியாக ஒப்புவித்து மரித்து உயிர்த்து இன்றும் ஜீவிக்கின்ற ஆண்டவர் இயேசுவை அறிவிக்க மட்டுமே வந்திருக்கின்றோம் என்று விபரமாக எடுத்துச் சொன்னார்கள். ஊர் மக்களுக்கு அப்படி துர்ச் செய்தி சொன்னவர் ஜெகநாத்சிங் என்ற ஓய்வுபெற்ற ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். அவருடைய கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை நமது சகோதரன் கூறி அவரை நன்கு புரிய வைத்ததன் பின்னர் அவருக்கு எங்கள்மேல் அன்பு வந்தது. அவர் எங்களை தனது வீட்டிற்கு வந்து தேநீர் பானம் அருந்திச் செல்ல மிகவும் வருந்தி அழைத்தபடியால் அவருடைய வீட்டிற்குச் சென்று இன்னும் கூடுதலாக அவருக்கு ஆண்டவரின் அன்பை பகிர்ந்து கொண்டோம். வீட்டிற்குச் சென்றதும் அவருடைய மகனைச் சந்தித்தோம். வாலிபனான அவன் தமிழ்நாட்டிலுள்ள நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி என்ற இடத்திற்கு அருகில் இருக்கும் நமது இந்திய ராணுவ விண்வெளி தொலைத் தொடர்பு மையத்தில் பணி செய்வதாகவும், லீவில் வீட்டிற்கு வந்ததாகவும் சொன்னான். நாங்கள் பேசும் தமிழைக் கேட்டபோது மிகுந்த சந்தோசம் அடைந்தான். எங்களை அன்போடு ஏற்று உபசரித்தான். அவனுக்கும் சுவிசேஷம் அறிவித்தோம். ஜெகநாத்சிங்கின் மனைவி இறந்துவிட்டார்கள். மிகவும் மனக்கவலை கொண்டிருப்பவராக அவர் காணப்பட்டார்.

ஆண்டவர் இயேசுவிலுள்ள ஆறுதலை அவருக்குக் கூறி அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை திட்டமாகக் கூறினோம். கர்த்தர் அவருடைய உள்ளத்தில் பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

அழகிய கும்தேஷ் கிராமத்தையும், ஜெகநாத்சிங்கிடம் நமது சகோதரன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளுவதையும், கிராமவாசிகள் கூடியிருப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

லோஹாகாட் என்ற அந்த இடத்தில் நாங்கள் 4 நாட்கள் தங்கியிருந்து அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களிலும், அநேக பள்ளிக்கூடங்களிலுமுள்ள நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்கள், புதிய ஏற்பாடுகள், வேதாகமங்கள் போன்றவற்றை ஜெபத்தோடு கொடுத்தோம். அந்த ஊழியங்களின் விபரங்களை தெளிவாக எழுதிக் கொண்டு சென்றால் இன்னும் பல பக்கங்கள் தேவைப்படும். ஏற்கெனவே இந்த இதழின் முகப்பு சாட்சியில் தர்ம் பிரகாஷ் ஷர்மா அவர்களுக்காக நிறைய பக்கங்கள் ஒதுக்க வேண்டியதாகிவிட்டது. அந்த பேரதிசயமான சாட்சியை நீங்கள் முழுமையாகப் படித்தே தீரவேண்டும், அவரைப்போல நீங்களும் வானத்தையும், பூமியையும் படைத்தவரின் குரலை தவறாது கேட்டே ஆக வேண்டும் என்ற எனது இருதய வாஞ்சையால் அதைச் செய்தேன்.

எங்களுடைய கரங்களிலிருந்து தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளைப் பெற்று ஆசை ஆவலோடு படிக்கும் தவனமுள்ள ஆத்துமாக்களின் சில புகைப்படங்களையும் நீங்கள் பார்க்கின்றீர்கள். ஒருவரும் கெட்டுப்போகாமல் யாவரும் நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டுமென்பதே தேவனின் கதறுதல். அந்த அன்பின் காரணமாக தேவ மைந்தன் தமது மூன்றரை லிட்டர் இரத்தத்தையுமே வடித்துக் கொடுத்துவிட்டார் என்று ஒரு தேவ பக்தன் எழுதுகின்றார். எங்களுடைய ஊழியங்களின் மூலமாக சந்திக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காகவும், கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் அந்த மக்களின் உள்ளங்களில் தொடர்ந்து நித்திய ஜீவனுக்கேதுவாக கிரியை செய்து கொண்டிருக்கவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். அதற்கான பிரதி பலன் பரலோகில் உங்களுக்கு உண்டு.



 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM