உத்தராஞ்சல் மாநிலத்தில் நடைபெற்ற
தேவ ஊழியங்கள்



"எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை. சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய் தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்குப் பிரியமுண்டாகப் பேசுகிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை, தேவனே சாட்சி" (1 தெச 2 : 3-5)

எனது உலகப் பிரகாரமான வேலையை விட்டு விட்டு தமது ஊழியத்தை முழுமையாகச் செய்ய கர்த்தர் என்னை கடந்த நாட்களில் பல தடவைகளும் அழைத்ததுண்டு. ஆனால், நான் அவருக்கு கீழ்ப்படியாமல் காலம் தாழ்த்தி வந்து கொண்டிருந்தேன். ஆனால், 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி அதிகாலை 3 : 15 மணி. அன்பின் ஆண்டவருக்கும் எனக்கும் அன்று போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. உலகப்பிரகாரமான எனது வேலையை உடனே விட்டுவிட்டு தமக்கு முழு நேர ஊழியனாகப் பணி செய்ய வரும்படியாக ஆண்டவர் திட்டமும் தெளிவுமாக மீண்டும் அழைப்பதை அந்த அதிகாலை வேளை என்னால் நன்கு உணர முடிகின்றது. எனினும், நான் ஆண்டவருக்கு சம்மதம் தெரிவிக்க விடாப்பிடியாக மறுத்து நின்றேன். 13, 12 வயதுடைய எனது அருமைப் பிள்ளைகள் சுந்தர்சிங், சார்லஸ் ஃபின்னி, அருமை மனைவி மற்றும் ஊரிலுள்ள எனது வயதான அருமைப் பெற்றோரைப் போஷித்துக் காப்பாற்றும் பொறுப்பின் காரியத்தையும், பிள்ளைகளுடைய கல்வி போன்றவற்றையும் தேவனுக்கு தெரியப்படுத்தி உலகப் பிரகாரமான எனது வேலையை எந்த ஒரு நிலையிலும் விடமுடியாத எனது இக்கட்டான சூழ்நிலையை அவருக்கு தெரியப்படுத்தி நின்றேன்.

ஆனால் அன்பின் கர்த்தர் என்னை விட்டபாடில்லை. எந்த ஒரு நிலையிலும் தாம் என்னைக் கைவிடாமல் பாதுகாப்பாக வழிநடத்தப்போவதாக அந்த விடிபகல் நேரம் என் உள்ளத்தில் பலமாக பேசியபடியால் அவருடைய உன்னத அழைப்புக்கு உத்திரவாதமாக வேதாகமத்திலிருந்து ஒரு வாக்குத்தத்தத்தை அவர் எனக்குத் தரும்படியாக நான் அவரிடம் கேட்டபொழுது வேதாகமத்தை திறந்து தம்முடைய வாக்குத்தத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக எனது உள்ளத்தில் திட்டமாகப் பேசவே நான் எனது தலையணைக்கு கீழாக வைத்திருந்த எனது பரிசுத்த வேதாகமத்தையும், டார்ச் விளக்கையும் எடுத்து இருட்டுக்குள் வேதாகமத்தை திறந்து திறந்த வேதாகம பகுதியில் எனது டார்சு விளக்கின் ஒளியை போட்டபோது அந்த ஒளி "இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சயமாயிருப்பார், உன் துக்க நாட்கள் முடிந்து போம்" (ஏசா 60 : 19-20) என்ற கர்த்தருடைய வசனங்களில் விழுந்தது. தேவனுடைய அற்புதமான வாக்குத்தத்தைப் பார்த்ததும் எந்த ஒரு மறுப்புமின்றி அந்த நாளிலேயே நான் எனது உலகப்பிரகாரமான வேலையை ராஜிநாமா செய்து விட்டு ஆண்டவருடைய ஊழியத்தைப் பூரணமாகப் பொறுப்பேற்றேன்.

"கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை, எல்லாம் நிறைவேறிற்று" (யோசு 21 : 45) "..............அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை" (1 சாமு 3 : 19) என்ற தேவனுடைய வார்த்தைகளின்படி 33 ஆண்டுகளுக்கு முன்பாக தேவன் என்னுடன் பேசிய அவருடைய வார்த்தைகள் பின் நாட்களில் அப்படியே முழுமையாக வந்து நிறைவேறிற்று. அதில் ஒரு உறுப்பு கூட தவறிப்போக அன்பின் தேவன் அனுமதிக்கவில்லை. அல்லேலூயா.

எனது 10 ஆம் வகுப்பு படிப்பு முடிந்ததும் கல்லூரிக்கு என்னை அனுப்பும்படியாக நான் எனது தந்தையிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதேன். ஆனால், பொருளாதார நிலையில் எனது தகப்பனார் மிகவும் கஷ்டத்துக்குள் இருந்ததால் அவர்களால் என்னை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்கக் கூடாமற் போயிற்று. எனது வாழ்வில் கல்லூரி படிப்பை இழந்து போன நான் எப்படியும் எனது மூத்த மகனையாவது கல்லூரிக்கு அனுப்பி அவர்கள் பெயருக்குப் பின்னால் வெறும் பி.ஏ. பட்டம் மட்டும் போட்டுக் கொள்ள கர்த்தர் எனக்கு உதவி செய்யும்படியாக அவரிடத்தில் நான் தயவாக மன்றாடினேன்.

நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்ளுவதற்கும் மிகவும் அதிகமாக நமக்கு நன்மையைப் பொழிந்தருளும் நம் அன்பின் ஆண்டவர் எனது மூத்த மகனுடைய பெயருக்குப் பின்னால் ஐந்து பட்டங்களை போட்டுக் கொள்ள அவர்களுக்கு கிருபை செய்தார். எனது இளைய மகன் 12 ஆம் வயதிலும், மூத்த மகன் 22 ஆம் வயதிலும் இருக்கும்போது தேவன் பிள்ளைகளை தம்முடைய இரட்சிப்பின் பாத்திரங்களாக்கி தமக்குரியவர்களாக்கிக் கொண்டார். பிள்ளைகள் இருவரும் வாலிபர்களாக இருக்கும் போது அவர்களைப் பார்த்தோர் "உங்கள் பிள்ளைகளை இப்படியான ஒரு பக்தி வாழ்வில் உங்களால் எப்படி வளர்க்க முடிந்தது?" என்று என்னிடம் ஆச்சரியத்துடன் கேட்டவர்கள் உண்டு. எல்லாப் புகழ்ச்சியும் தேவனுக்கே. நாங்கள் குடியிருந்த 3 ஆம் வாடகை வீட்டின் சொந்தக்காரர் ஒரு அன்பான கத்தோலிக்க கிறிஸ்தவ ஆசிரியர் ஆவார்கள். என்னுடைய மூத்த மகன் சுந்தர்சிங்கிற்கு அவர்கள் வேலை பார்த்த கத்தோலிக்க மேல் நிலைப்பள்ளியிலேயே முற்றும் இலவசமாக வேலை வாங்கிக் கொடுத்தார்கள்.

எனது இளைய மகன் சார்லஸ் ஃபின்னிக்கு ஒரு மேல் நிலை பள்ளி வேலைக்காக இண்டர்வியூ வந்தது. நான் மகனுடன் சென்றேன். மலையிலுள்ள பள்ளத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் இண்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. நான் மேட்டிலே நின்று கர்த்தர் மகனுக்கு இரக்கம் செய்யும்படியாக அவரைப் பாடித் துதித்துக் கொண்டிருந்தேன். நான் பாடிக் கொண்டிருப்பதை பார்த்த அங்குள்ள காவற்காரர் நான் பாடுவதன் காரணம் என்னவென்று கேட்ட போது மகனுக்கு ஆண்டவர் வேலை கொடுக்கும்படியாக பாடுகின்றேன் என்றேன். மொத்தம் 17 பேர் அந்த ஒரு வேலைக்கு இண்டர்வியூவுக்கு வந்திருந்தனர். அவர்களில் சிலர் கோட், சூட், டை எல்லாம் கட்டி கவர்ச்சியாக வந்திருந்தார்கள். ஆனால், மகன் எளிமையாகச் சென்றிருந்தான். அந்த நாளிலேயே மகன் வேலைக்கு தெரிவு செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் நிரந்தரமான வேலை உத்தரவும் மகனுக்கு கிடைத்தது. அதற்கும் நான் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. இதற்கான ஒரே காரணம், முதலாவது அன்பின் கருணாகர கர்த்தரின் சுத்தக் கிருபையும், அவரது அளவில்லா அன்பும் அடுத்தபடியாக எந்த ஒரு நிலையிலும் நம் அன்பின் ஆண்டவருக்கு நான் எந்த ஒரு துரோகம் செய்யாமல் அவருக்கு உண்மையும் உத்தமமுமாக அவருடைய பெலத்தால் தேவ ஊழியம் செய்து வந்த ஒரே காரியமும்தான்.

என் கரத்தைத் தாண்டிச் சென்ற தேவ மக்களின் காணிக்கை பணங்களைக் கொண்டு நான் எதை எதை எல்லாமோ செய்ய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், தேவ மனிதர் நெகேமியா சொன்னது போல "நானோ தேவனுக்குப் பயந்ததினால் அப்படிச் செய்யவில்லை, ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை" (நெகே 5 : 15 - 16)

எனது சிறு பிராயத்திலேயே பண ஆசையின் நச்சு வேரை என்னிலிருந்து அறுத்துப்போட்ட தேவன் நான் உலகப் பிரகாரமான வேலையில் சுமார் 20 ஆண்டு காலம் இருந்த நாட்களில் பல்லாயிரக்கணக்கான பணத்தை தொழிலாளிகளுக்கு என் கரத்தால் வாராந்திர சோத்துப் படி, சம்பளம், போனஸ் என்று எண்ணி எண்ணிக் கொடுத்து அந்த பண ஆசையை இன்னும் கூட "சீ" என்று அருவெறுத்து ஒதுக்க எனக்கு வகை செய்து கொடுத்தார். அல்லேலூயா.

பணத்திற்காக தேவ ஊழியம் என்ற காரியத்தை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. தேவனை அறியாதவர்களும், தேவனுடைய மகத்தான அன்பை தங்கள் வாழ்வில் ருசியாதவர்களும், மெய்யாகவே மனந்திரும்பாத மக்களும், தேவனுடைய திட்டமான அழைப்பில்லாமல் ஊழியம் செய்வோரும் பணத்திற்காக தேவனுடைய ஆரோக்கியமான உபதேசத்தைப் புரட்டி தந்திரமாக ஊழியம் செய்வார்கள். ஆண்டவருடைய திட்டமான கட்டளைப்படி மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் தேவ ஜனத்திற்கு பிரசங்கிக்க வேண்டிய அவர்கள் (லூக்கா 24 : 47, அப் 5 : 31) நிலையில்லா சரீர சுகத்தையும், கானல் நீராம் இம்மை வாழ்வின் செழிப்பையும், செல்வத்தையும் கவர்ச்சியான வண்ணங்கள் கொடுத்து பிரசங்கிப்பார்கள். அப்படிப்பட்ட கள்ள அப்போஸ்தலரின் முடிவுகளை நாளடைவில் உங்கள் சொந்தக் கண்களாலேயே காணலாம். "அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்" (2 கொரி 11 : 15) ஒரு தேவ ஊழியன் பணத்திற்காக தந்திரமாக ஊழியம் செய்கின்றான் என்றால் அவன் தேவ ஊழியன் அல்லன், அவன் சாத்தானாம் பிசாசின் மகன். அக்கினியும், கந்தகமும் எரிகிற நித்திய அக்கினிக் கடலுக்கு நியமிக்கப்பட்ட பிசாசானவனுடன் சேர்ந்து இரவும் பகலும் அவனுடன் வாதிக்கப்பட நியமிக்கப்பட்டவர்கள் அவர்கள் (வெளி 20 : 10) ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுவது எத்தனை பயங்கரமானது (எபிரேயர் 10 : 31) என்பதை அந்த பேதை மாந்தர் இன்னும் அறியவில்லை. பட்சிக்கிற அக்கினியோடு விளையாடுகின்றார்கள்.

நமது ஊழியச் செய்திகளுக்கு முன்னால் இந்தக் காரியங்களை எல்லாம் நான் எழுதுவதன் காரணம் நமது வடமாநில ஊழியங்கள் முற்றுமாக ஆத்தும பாரத்தோடு, தேவனுடைய நாம மகிமைக்காக மட்டும் செய்யப்பட்டு வருகின்றது என்பதையும், இந்தச் செய்தியில் நாம் வெளியிடும் படங்கள் வடக்கே செய்யப்படும் தேவ ஊழியங்களின் ஒரு தெளிவான விளக்கத்தை உங்களுக்குத் தருவதற்கேயல்லாமல் தேவ பகைஞர் கடந்த நாட்களிலும் தற்பொழுதும் நினைப்பது போல "படங்கள் போட்டு பணம் சம்பாதிப்பதற்கல்ல" இந்த எளிய தேவ ஊழியத்தில் ஆண்டவருடைய கிருபையின் கரம் நம்மை வருடா வருடம் எத்தனை அற்புதமும், ஆச்சரியமுமாகத் தாங்கி வழி நடத்திக் கொண்டு வருகின்றது என்பதை கர்த்தருக்குள் நீங்கள் நன்கு அறிவீர்கள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.

 

கதிகாம் கிராமத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

தேவ ஊழியர்களாகிய நாங்கள் பித்தோர்கார்ட் பட்டணத்தில் சில தினங்கள் தங்கியிருந்து தேவனுடைய பல்வேறு பிரசுரங்களை மக்களுக்குக் கொடுக்கக்கூடிய விதத்தில் நல்ல விதமாக ஒழுங்குபடுத்திக் கொண்டு 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் தேதி காலை வேளையில் நாங்கள் எல்லாரும் ஒன்றுகூடி கர்த்தருக்கு எங்களை ஒப்புவித்து ஜெபித்த பின்னர் கதிகாம் என்ற இடத்திற்குப் பயணமானோம். அந்த இடம் நாங்கள் இருந்த பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. நாங்கள் சென்ற வழித்தடத்தில் ரஸ்தாவுக்கு அருகாமையிலிருந்த ஓரிரு ஆரம்ப பாடசாலைகளுக்குச் சென்று தேவனுடைய வார்த்தையைக் கொடுத்துவிட்டு நண்பகலுக்கு சற்று முன்னதாக கதிகாம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் வந்த வழித்தடம் ஆரம்பத்தில் சற்று நல்ல பாதையாக இருந்தபோதினும் கதிகாமை நெருங்க நெருங்க எங்கள் பயணப்பாதை மரண நிழலின் பள்ளத்தாக்காகவே இருந்தது. இந்த கதிகாமில் எப்படியாவது சுவிசேஷத்தை அறிவித்துவிட வேண்டும் என்று தங்கள் சுவிசேஷ வாகனத்துடன் வந்த சுவிசேஷ நற்பணி இயக்கத்தினர் (Operation Mobilization) இந்த இடத்திலுள்ள பாதையின் பயங்கரத்தைக் கண்டு திரும்பிப் போய்விட்டதாக நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். கதிகாம் கிராமம் பள்ளத்தாக்கிலேயேதான் உள்ளது. எனினும் மலைகள் சூழ்ந்த அழகான இடம். மலைகள் சூழ்ந்த கதிகாம் என்ற இடத்தில் நமது சுவிசேஷ வாகனங்கள் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளுடன் நின்று கொண்டிருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

கதிகாம் கிராமத்தின் உயர்நிலைப் பள்ளி செங்குத்தான இறக்கத்தில் இருந்தது. நமது தேவ ஊழியர்கள் அங்கு சென்று தேவனுடைய சுவிசேஷ நற்செய்தி அறிவித்து அதற்கப்பால் தேவனுடைய பிரசுரங்களையும் பிள்ளைகளுக்குக் கொடுத்தார்கள். பாஸ்டர் சகோதரன் சாமுவேல் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். அந்த உயர்நிலைப் பள்ளியில் 140 பிள்ளைகளும் 6 ஆசிரியர்களும் இருந்தனர். அதற்கு அருகாமையில் இருந்த ஆரம்ப பள்ளியிலும் தேவ ஊழியம் நடைபெற்றது. அங்கு 35 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் இருந்தனர். அதன்பின்னர் நாங்கள் கதிகாம் கடை வீதியிலும் கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தோம். கதிகாமிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் அமர்ந்திருப்பதையும், பாஸ்டர் சாமுவேல் சகோதரன் அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

அதன் பின்னர் நாங்கள் அங்கிருந்து ஜகிராலி என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்த உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 156 மாணவர்களுக்கும் அவர்களுக்கு கல்வி கற்பித்த 8 ஆசிரியர்களுக்கும் கர்த்தருடைய பிரசுரங்களை விநியோகித்தோம். பின்னர் அங்கிருந்து பான்ஸ் என்ற இடத்திலுள்ள கடைவீதியில் சுவிசேஷ கைப்பிரதிகளைக் கொடுத்தோம். அங்கிருந்த ஆரம்ப பள்ளியிலும் தேவ ஊழியம் செய்தோம் மொத்தம் 30 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் இருந்தனர். கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டே நாங்கள் பாபே என்ற இடத்திற்கு வந்தோம். அங்கே மேட்டின்மேல் ஒரு உயர் நிலைப் பள்ளியும், ஒரு ஆரம்ப பள்ளியும் இருப்பதை நாங்கள் அறிந்து எங்கள் வாகனங்களை ரஸ்தாவில் விட்டு விட்டு மலை உச்சி ஏறிச் சென்று தேவனுடைய கைப்பிரதிகளை உயர் நிலைப் பள்ளியில் இருந்த 70 மாணவர்களுக்கும் 7 ஆசிரியர்களுக்கும், ஆரம்ப பாடசாலையில் இருந்த 30 மாணவர்களுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் விநியோகித்தோம். பாபே ரஸ்தாவில் எங்கள் வாகனங்கள் இரண்டும் நின்று கொண்டிருப்பதையும் உச்சியில் பள்ளிகள் இருப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

நாங்கள் பாபேயைவிட்டு கொஞ்சதூரம் வரவும் ஜக்தட் என்ற இடத்தில் மேட்டின் மேல் இருக்கும் ஒரு ஆரம்ப பாடசாலைக்கு ஏறிச் சென்று அங்கும் ஆண்டவருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். அங்கிருந்த உயர்நிலைப் பள்ளியிலும் ஊழியம் செய்தோம். சகோதரன் நாட்டன் அவர்கள் ஜக்தட் பள்ளியில் ஊழியம் முடித்து பள்ளிக்கு முன்பாக நின்று கொண்டிருப்பதைப் படத்தில் நீங்கள் காணலாம்.

அங்கிருந்து நாங்கள் பயணப்பட்டு சிந்தோலி, மஜேடா போன்ற இடங்களிலிருந்த ஆரம்ப பள்ளிகளில் தேவனுடைய ஊழியங்களைச் செய்துவிட்டு இருள் சூழும் நேரம் பித்தோர்கார்ட் பட்டணம் வந்து சேர்ந்தோம். அந்த நாளின் இறுதியில் நாங்கள் தேவ ஊழியம் செய்த மஜேடா ஆரம்ப பாடசாலையையும் நீங்கள் காணலாம்.

 

டிக்தோலியில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

ஒரு நாள் எங்கள் வாகனங்களை தேவனுடைய பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டு நாங்கள் எல்லாரும் ஒன்று கூடி ஜெபித்துவிட்டு பித்தோர்கார்ட் என்ற இடத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள டிக்தோலி என்ற இடத்திற்குச் சென்றோம். பித்தோர்கார்ட் பட்டணத்தின் கடைவீதிகளை நாங்கள் கடந்து செங்குத்தாக பிரயாணம் செய்து படிப்படியாக மலை ஏறி சண்டாக் என்ற மலைக் கிராமத்தின் உச்சியை எட்டிப் பிடித்தோம். அங்கிருந்து பார்த்தால் நாங்கள் விட்டு வந்த பித்தோர்கார்ட் பட்டணம் அழகாக காணப்பட்டது. சண்டாக்கிலிருந்து நாங்கள் இறங்கு முகமாகப் பிரயாணப்பட்டு அடர்ந்த சிறு சிறு காடுகளையும், பசுமையான புல் மைதானங்களையும் கடந்து சென்று கொண்டிருந்தோம். எங்கள் வலது இடது கைப்பக்கங்களின் இயற்கைக் காட்சிகள் அழகாக இருந்தபோதினும் எங்கள் வாகனங்கள் ஓடி வந்து கொண்டிருந்த ரஸ்தா வெறும் கருங்கற்களால் நிரப்பப்பட்டதாகவும் எங்கள் பயணத்தை மிகவும் கஷ்டமுடையதாகவும் ஆக்கிவிட்டது. கற்கள் எந்த இடத்தில் வாகனங்களின் டயர்களை வெட்டி எப்பொழுது பஞ்சர் ஆக்கிவிடுமோ என்று மிகவும் பயத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். ஆனால் அன்பின் ஆண்டவர் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி காத்துக் கொண்டார். கர்த்தருக்கு துதி உண்டாவதாக.

நாங்கள் டிக்தோலி கிராமத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கும் போது ஒரு தாயாரும், அவர்களின் வாலிப மகளும் தங்கள் கையை நீட்டி எங்கள் வாகனங்களை நிறுத்த பிரயாசப்பட்டார்கள். ஆனால், நாங்கள் வாகனங்களை நிறுத்தவில்லை. காரணம், அவர்கள் டிக்தோலி கிராமத்திற்கு செல்லாமல் எங்களுக்கு எதிர் திசையில் வேறு எங்கோ சென்று கொண்டிருந்தார்கள்.

இறுதியாக நாங்கள் செங்குத்தாக இறக்கத்தில் எங்கள் வாகனங்களைக் கொண்டு சென்று டிக்தோலி கிராமத்தின் சிறிய கடைத் தெருவுக்கு வந்து சேர்ந்தோம். அந்தக் கிராமத்தின் அமைப்பு மிகவும் அழகாக இருந்தது. காரணம், அது செங்குத்தான மலை இறக்கத்தில் இருந்தது. கிராமத்திற்கு அப்பால் எந்த ஒரு குடியிருப்புகளும் இல்லை. அதோடு மலை முடிந்துவிட்டது. அங்கிருந்து பார்த்தால் நாங்கள் சென்றிருந்த டிக்தோலி கிராமம் ஒரு பிரமாண்டமான உருண்டையான கோளத்தில் ஒட்டி வைக்கப்பட்டது போலக் காணப்பட்டது. தேவனுடைய படைப்பின் மாட்சிகளை அதிகமாக ருசித்து அதின் சிருஷ்டிகரை மனங்குளிர வாழ்த்திப் போற்றும் எனக்கு அந்தக் காட்சி என்றும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது.

நாங்கள் டிக்தோலி கிராமம் சென்றதும் கடைத் தெருவிலுள்ளவர்களுக்கெல்லாம் சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம். கடைத் தெருவுக்கு முன்னால் நடு வீதியில் ஒரு கட்டிடத்தின் உச்சியில் கொஞ்சம் வாலிபர்கள் அமர்ந்திருந்தார்கள். நமது தேவ ஊழியர்களில் யாவருக்கும் இளவயதான நரேந்தர் சிங் மிகவும் விரைந்து ஓடிச் சென்று அதில் ஏறி அங்கிருந்த அனைவருக்கும் கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்தார்கள். அந்த மக்கள் அவைகளைப் பெற்று ஆசை ஆவலாக படித்தனர். அந்தக் காட்சியை நீங்கள் காணலாம்.

சற்று நேரத்தில் அந்த இடத்திற்கு ஒரு வயதான மனிதர் வந்து சேர்ந்தார். அவர் நாங்கள் கொடுத்த பிரசுரங்களை கருத்தோடு படித்து அதிலே மிகவும் ஆர்வம் காட்டுபவராக தெரிந்தார். அவருடைய அளவுகடந்த ஆவலைக் கண்ட நாங்கள் அவருக்கு ஒரு ஹந்தி வேதாகமத்தை ஜெபத்தோடு வழங்கினோம். அதைப் பெற்றுக் கொண்ட அவருடைய ஆனந்தத்தை அளவிட முடியாது. அதைத் தனது கண்களிலே வைத்து ஒத்திக் கொண்டு பின்னர் தனது மார்போடு அணைத்துக் கொண்டார். அந்தக் காட்சி எங்களைப் பரவசப்படுத்துவதாக இருந்தது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

டிக்தோலியின் முழு கிராமமும் சற்று தொலைவில் இருப்பதை நாங்கள் கவனித்தோம். உடனடியாக நமது ஊழியர்கள் எல்லாரும் அந்த கிராமத்தை நோக்கி ஓடினார்கள். ஒவ்வொரு வீடாக ஏறிச் சென்று அவர்கள் கிராம மக்கள் அனைவருக்கும் தேவனுடைய பிரசுங்களைக் கொடுக்கத் தொடங்கினார்கள். வீடுகள் பூட்டிக் கிடந்த சில வீடுகளின் கதவுக்கு கீழாக கைப்பிரதிகளை வைத்தார்கள். டிக்தோலி கிராமம் முழுமையிலும் நாங்கள் ஊழியம் செய்து முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டோம். அப்பொழுது வெயில் நல்ல காட்டமாக அடித்துக் கொண்டிருந்தது.

நாங்கள் எங்கள் வாகனங்களை ஓட்டிக்கொண்டு கணிசமான தூரம் மேலே வரவும் ஒரு தாயும், அவர்களின் வாலிப மகளும் எரிக்கும் வெயிலில் தலையில் ஏதோ சாமான்களை வைத்துக் கொண்டு கஷ்டத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். எங்கள் வாகனங்களைக் கண்டதும் கை காட்டி நிறுத்தினார்கள். இவர்கள் இருவரும்தான் நாங்கள் டிக்தோலி கிராமத்திற்கு போகும் போது எங்கள் வாகனங்களை நிறுத்தச் சொல்லி கை அசைத்தவர்கள் ஆவார்கள். வெயிலின் அகோரம் காரணமாக நாங்கள் அவர்களை எங்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டோம்.

கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு தேவனுடைய சுவிசேஷத்தை அவர்களுக்கு நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களுடன் இருந்த நரேந்தர் சிங் அந்த மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். அவர்களும் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். அந்த தாயின் பெயர் புஷ்பா என்பதாகும். அவர்களுடைய மகளின் பெயர் ஜோதி. ஜோதி நன்றாகப் படித்து பட்டம் பெற்றவள். வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். தாயும், மகளும் எங்களுடைய வார்த்தையில் மிகவும் வாஞ்சையும், ஆர்வமும் காட்டியதால் எங்கள் வசமிருந்த அனைத்து கிறிஸ்தவ பிரசுரங்களிலும் வகைக்கு ஒன்றாக அவர்களுக்குக் கொடுத்ததுடன் எங்கள் வசம் இருந்த குமானி மொழியிலான "கெட்ட குமாரன்" "சுவிசேஷ நற்செய்தி" போன்ற சி.டி. கேசட்டுகளையும் கொடுத்தோம். யாவுக்கும் மேலாக அந்த அன்பான மக்களுக்கு ஒரு ஹிந்தி மொழி வேதாகமத்தையும் வழங்கினோம். அவர்கள் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. சுமார் 10 கி.மீ. தொலைவு எங்களுடன் பயணம் செய்தபடியால் தேவனுடைய வார்த்தைகளை தெளிவாகக் கூற ஒரு பொன்னான சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் கொடுத்த யாவையும் கட்டாயம் படிப்பதாகக் கூறி தங்கள் பைகளுக்குள் மிகவும் கவனமாக வைத்துக் கொண்டார்கள்.

பித்தோர்கார்ட் பட்டணம் வந்ததும் பட்டணத்தில் அவர்களை அப்படியே நாங்கள் இறக்கிவிட்டு போகாமல் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை நாங்கள் விசாரித்து அங்கேயே அவர்களைக் கொண்டு செல்ல விரும்பினோம். எங்களுடைய இந்த அன்பு இன்னும் கூட அவர்களை உள்ளம் கசியச் செய்தது. நாங்கள் கொடுத்த தேவனுடைய பிரசுரங்கள் மூலமாக கர்த்தர் அவர்களோடு பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் டிக்தோலி கிராம ஊழியம் முடித்து பித்தோர்கார்ட் பட்டணத்திற்கு திரும்பும் பாதையில் சேரா, மூஸ்டாமனி மற்றும் சண்டாக் என்ற இடங்களிலும் எங்கள் வாகனங்களை நிறுத்தி கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்து விட்டு வந்தோம்.

 

பித்தோர் கார்ட் பள்ளிகளில் நடைபெற்ற ஊழியங்கள்

கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் இங்குள்ள பெரிய பள்ளிகளில் அங்கு கல்வி பயிலும் ஏராளமான மாணவ மாணவியருக்கு தேவனுடைய சுவிசேஷ கைப்பிரதிகளைக் கொடுத்து ஊழியம் செய்யும் அற்புத சிலாக்கியத்தை கர்த்தர் இந்த தடவை எங்களுக்குத் தந்தார். இங்குள்ள கிறிஸ்தவ மிஷன் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் உள்ள 1000 மாணவிகளுக்கும், 35 ஆசிரியைகளுக்கும் கர்த்தருடைய பிரதிகளை ஜெபத்தோடு வழங்கினோம். பள்ளியின் பிரின்ஸ்பால் அம்மையாரிடம் நம்முடைய பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் அதற்காக முன் அனுமதி பெற்றுக் கொண்டார்கள். இந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளும் குறிப்பிட்ட மிகவும் சொற்பமான கிறிஸ்தவ மாணவிகளைத் தவிர அனைவரும் இந்துக்கள் என்பதை நாம் மறப்பதற்கில்லை. அந்த மலை நாட்டின் நானா பக்கங்களிலுள்ள ஏராளமான கிராமங்களிலிருந்து அவர்கள் அங்கு வந்து கல்வி பயிலுகின்றனர். இங்கு மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் உயர்பட்டதாரியான ஆசிரியை ஒருவர் பித்தோர்கார்ட் பட்டணத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் மனைவி என்பதை நாம் மறப்பதற்கில்லை. ஆசிரியைகளில் பலரும் இந்து மக்களே ஆவார்கள்.

குறிப்பிட்ட அந்த நாளில் நாங்கள் மிகுந்த ஜெபத்தோடு எங்கள் வாகனங்கள் இரண்டையும் தேவனுடைய பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டு மேல் நிலைப்பள்ளிக்குச் சென்று எங்கள் வாகனங்களை பள்ளியின் பிரதான நுழை வாயிலில் நிறுத்திவிட்டு முதலாவது சுவிசேஷ பிரதிகள் நிறைந்த அட்டைப் பெட்டிகளை மேட்டில் அமைந்திருந்த பள்ளிக்குத் தூக்கிக் கொண்டு சென்று வைத்தோம். பள்ளியின் அன்பான பிரின்ஸ்பால் அம்மையாரின் உத்தரவுப்படி பள்ளி மாணவிகள் வகுப்பு வாரியாக அசெம்ளி வளாகத்தில் வந்து கூடினார்கள். நாங்கள் எல்லாரும் அந்த பிள்ளைகளுக்கு ஹிந்தி லூக்கா சுவிசேஷத்தினுள் நாங்கள் வைத்திருந்த தேவனுடைய அருமையான சுவிசேஷப் பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். மேல் வகுப்பு பிள்ளைகளில் ஆர்வமுள்ள குறிப்பிட்ட பிள்ளைகளுக்கு ஹிந்தி புதிய ஏற்பாடு மற்றும் 158 பக்கங்களுள்ள சத்திய மார்க்கம் என்ற யோவான் சுவிசேஷங்களையும் கொடுத்தோம். அந்த அன்பான பிள்ளைகள் தங்கள் கரங்களில் தேவனுடைய நித்திய சுவிசேஷத்தை ஏந்திச் செல்லுவதையும், அவைகளை ஆர்வத்துடன் வாசிப்பதையும் நாங்கள் பார்த்தபோது அன்பின் ஆண்டவருக்குள் உள்ளம் பூரித்தோம். அந்தக் காட்சிகளை தேவ மக்களாகிய நீங்களும் காண வேண்டுமென்ற ஆசையில் நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை. காரணம், நாங்கள் அந்த இடத்தில் செய்த அருமையான தேவ ஊழியங்களை சத்துருவானவன் அதின் மூலம் பரிகசித்து கெடுத்துவிட இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் அதைத் திட்டமாகத் தவிர்த்துக் கொண்டோம்.

அந்த மேல் நிலைப் பள்ளியிலுள்ள இந்து ஆசிரியைகளில் பலரும் எங்களிடமிருந்து ஹந்தி மொழி பரிசுத்த வேதாகமங்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். அன்பின் ஆண்டவர் அவர்களின் உள்ளங்களில் பேசும்படியாக நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். மேல் நிலைப் பள்ளியின் முகப்பில் எங்கள் வாகனங்களிலிருந்து சுவிசேஷப் பெட்டிகளை நாங்கள் இறக்குவதையும், எங்களுக்கு முன்பாக மேட்டின்மேல் கிறிஸ்தவ மிஷன் பெண்கள் மேல் நிலைப்பள்ளிக் கட்டிடங்கள் தெரிவதையும் நீங்கள் காணலாம்.

மேல் நிலைப் பெண்கள் பள்ளிக்கூட ஊழியம் முடிந்ததும் அதை ஒட்டி கீழே இருந்த ஆரம்ப பள்ளிக்கூடத்தில் உள்ள மாணவ மாணவியருக்கு கைப்பிரதிகளைக் கொடுத்து ஊழியம் செய்தோம். அந்தப் பள்ளியில் 110 பிள்ளைகளும் 5 ஆசிரியர்களும் இருந்தனர். மேட்டின் மேல் இருந்த அந்த பள்ளியை நீங்கள் படத்தில் காணலாம்.

அதின் பின்னர் தயாசாகர் என்ற ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கூடத்திற்குச் சென்று பள்ளியின் பிரின்ஸ்பால் அவர்களின் அனுமதியோடு ஒவ்வொரு வகுப்பாகச் சென்று சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்தோம். அத்துடன் ஆசிரியர்களுக்கு புதிய ஏற்பாடுகள், வேதாகங்கள் போன்றவற்றையும் ஜெபத்துடன் கொடுத்தோம். தயாசாகர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுமார் 750 பிள்ளைகளும் 20 ஆசிரியர்களும் அப்பொழுது இருந்தனர்.


மல்லிகார்ச்சுன் பப்ளிக் ஸ்கூல்

மேற்கண்ட பள்ளிகளின் ஊழியங்கள் முடித்த அடுத்த நாள் பித்தோர்கார்ட் பட்டணத்திற்கு சுமார் 4 அல்லது 5 கி.மீ. தொலைவில் மலை உச்சியிலுள்ள மல்லிகார்ச்சுன் பப்ளிக் ஸ்கூலுக்கு அங்கு கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுக்க அந்த நாளின் காலை வேளையிலேயே ஜெபத்துடன் எங்களுடைய வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்றோம். நல்ல பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஐசுவரியமுள்ள பிள்ளைகள் படிக்கின்ற நல்ல தரமான ஆங்கிலப் பள்ளியில் அதிலும் வைராக்கியமான இந்து மக்களின் குழந்தைகள் கல்வி பயிலும் அந்தப் பள்ளியில் கிறிஸ்தவ வெளியீடுகளைக் கொடுக்க எங்களுக்கு ஒரு தருணம் கிடைத்ததென்றால் அது அன்பின் ஆண்டவரின் சுத்தக் கிருபையாகும்.

அந்தப் பள்ளியின் பிரின்ஸ்பால் வினோத் பட் என்பவர் ஒரு இந்து பிராமண மனிதராவார். அவர் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள். காரணம், நமது ஆண்டவர் இயேசு இரட்சகரைக் குறித்தும், கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்தும் அவருக்கு உள்ளான மனதில் ஒரு பற்றும் பாசமும் இருப்பதாகவும் தனது இந்து மார்க்கத்தின் போதனைகளும், பல்வேறு கடவுளர்களும், வழிபாடுகளும் அந்த மனிதருக்கு பிடிக்காததால் நமது சகோதரனிடம் அவ்வப்போது கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்து விளக்கங்கள் கேட்பாராம். வைராக்கியமான இந்து மதத்திலிருந்து அன்பின் ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நமது சகோதரன் அந்த மதத்திலிருந்து வெளிவந்ததன் காரணத்தை அவருக்கு விளக்கமாக சொல்லுவார்களாம். அவர்களின் போதனைகளில் மிகவும் திருப்தியடைந்த அவர் நமது சகோதரனை நேசிப்பதுடன் வேளாவேளைகளில் தனது பள்ளி மாணவருக்கு இயசு இரட்சரைக் குறித்து முக்கியமான சந்தர்ப்பங்களில் அழைத்துப் பேசவும் சொல்லுவாராம்.

அந்த நட்பின் அடிப்படையில் நமது சகோதரன் அவருடைய பள்ளியில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுக்க அனுமதி கேட்டபோது மிகுந்த மகிழ்ச்சியோடு உடனே சம்மதித்து விட்டார்.

நாங்கள் பள்ளி ஆரம்பிப்பதற்கு வெகு முன்பே போய் ஆயத்தமாகிக் காத்திருந்தோம். பள்ளி ஆரம்பிக்கும் போது அசெம்பளியில் மாணவ மாணவியருக்கு நாங்கள் கொண்டு சென்ற பிரசுரங்களைக் கொடுக்கும்படியாக பிரின்சிபால் எங்களிடம் சொன்னார். அப்படியே நாங்கள் தேவனுடைய பிரசுரங்களை எங்கள் கரங்களில் ஏந்தி பிள்ளைகளுக்குக் கொடுக்க ஆயத்தமாக வெளியே நின்று கொண்டிருந்தோம். பள்ளி அசெம்பளி முடிந்ததும் எங்களை உள்ளே அழைத்து பிள்ளைகளுக்கு தேவனுடைய பிரசுரங்களை விநியோகிக்கச் சொன்னார்கள். நாங்கள் அவைகளைக் கொடுப்பதற்கு முன்னர் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் பிள்ளைகளுக்குக் கர்த்தர் இயேசுவைக்குறித்து ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் சொன்னார்கள். அதின் பின்னர் சுமார் 500 மாணவ மாணவியரும், 20 ஆசிரியர்களும் குழுமியிருந்த அங்கு பிரசுரங்களை ஜெபத்தோடு கொடுத்தோம். ஆசிரியர்களுக்கு புதிய ஏற்பாடுகள், சத்திய மார்க்கமும், மிகவும் வாஞ்சையுள்ள ஆசிரியர்களுக்கு வேதாகமங்களும் வழங்கினோம். பள்ளி பிள்ளைகளுக்கு தேவனுடைய பிரசுரங்களை கொடுக்க அனுமதி வழங்கிய பள்ளியின் பிரின்ஸ்பால் அவர்களுக்கு நாங்கள் எல்லாரும் போய் எங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தோம். மல்லிகார்ச்சுன் பள்ளியின் முகப்பு வாயிலையும், பள்ளியின் உள் வளாகத்தையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.


கனாலிசின்னா, சத்கட் போன்ற இடங்களில்
செய்யப்பட்ட ஊழியங்கள்

ஒரு நாள் காலையில் நாங்கள் எங்கள் வாகனங்களை சுவிசேஷ பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டு காலை ஆகாரத்தைக் கூட சாப்பிடாமல் பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள கனாலிசின்னா என்ற இடத்திற்கு பிரயாணப்பட்டோம். அந்த இடத்திலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் உள்ள பிள்ளைகளுக்கு தேவனுடைய சுவிசேஷப் பிரசுரங்களை பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக பள்ளியின் முகப்பு வாசலிலே நின்று எப்படியும் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நாங்கள் துரிதமாகச் சென்றோம். காரணம், பொதுவாக அரசாங்க மேல் நிலைப் பள்ளிகளில் கிறிஸ்தவ பிரசுரங்களை பள்ளி மாணவ மாணவியருக்குக் கொடுக்க அதின் பிரின்சிபால்கள் எங்களை அனுமதிப்பதில்லை. எனவே, அவர்களிடம் அனுமதி கேட்டு அவர்கள் மறுப்பதைக்காட்டிலும் சுயாதீனமாக வழியிலே பிள்ளைகளைச் சந்தித்து பிரசுரங்களைக் கொடுத்து விடுவோம்.

பள்ளி திறப்பதற்கு வெகு முன்னதாகவே நாங்கள் கனாலிசின்னாவை சென்றடைந்துவிட்டபடியால் அங்குள்ள கடைவீதியில் உள்ள சிறிய ஹோட்டலில் எங்கள் காலை ஆகாரத்தை முடித்து விட்டு அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடிய இடங்களில் நாங்கள் எங்கள் கையில் நிறைய பிரசுரங்களுடன் நின்று கொண்டோம். நேரம் நெருங்க நெருங்க பிள்ளைகள் சாரை சாரையாக பள்ளிக்கு வரத் தொடங்கினார்கள். கர்த்தருடைய கிருபையால் அநேக மாணவ மாணவியர்களின் கரங்களில் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்துவிட்டோம். பிள்ளைகளுடன் வந்த ஆசிரியர்களையும் நாங்கள் விடாமல் புதிய ஏற்பாடுகள் மற்றும் சத்திய மார்க்கம் போன்றவைகளையும் அவர்களுக்குக் கொடுத்தோம். கர்த்தருடைய கிருபையால் எந்த ஒரு எதிர்ப்பும், மறுப்புமின்றி அவர்கள் சுவிசேஷ பிரசுரங்களை சந்தோசத்தோடு எங்கள் கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டார்கள். கர்த்தருக்கே துதி உண்டாவதாக. கனாலிசின்னா மேல் நிலைப் பள்ளியின் பிரதான நுழை வாசலிலிருந்து சகோதரன் நார்ட்டன் அவர்களும் விஜய் சிங் அவர்களும் பிரசுரங்களை கொடுத்துக் கொண்டு நிற்பதை நீங்கள் காணலாம்.

கனாலிசின்னா மேல் நிலைப் பள்ளியில் நாங்கள் தேவனுடைய பிரசுரங்களை மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டு அங்குள்ள கடைவீதியிலும் பிரதிகளை விநியோகம் செய்தோம். அந்த இடத்தில் சில வாடகை ஜீப் வாகனங்களும், நிறைய கிராமவாசிகளும் கூடியிருந்தனர். பின்னர் அங்கிருந்து சில கி.மீ. தொலைவு பிரயாணம் செய்து வந்தோம். மலை உச்சியில் மரங்களடர்ந்த பகுதியில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் எங்கள் கண்களில்பட்டது. அது ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாகும். நமது தேவ ஊழியர்களில் சிலர் மட்டும் அந்த உயரமான இடத்தில் அமைந்திருந்த பள்ளிக்கு ஏறிச் சென்று பிள்ளைகளுக்கு தேவனுடைய கைப்பிரதிகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பினார்கள். அந்தப் பள்ளியின் பிரின்ஸ்பால் அம்மையாருக்கு ஒரு ஹிந்தி வேதாகமமும் கொடுத்ததாக எங்களிடம் சொன்னார்கள். அந்தப் பள்ளியில் 140 மாணவிகளும் 8 ஆசிரியர்களும் இருந்திருக்கின்றனர். மரங்களின் ஊடாக மலை முகட்டில் தெரியும் மேல்நிலப்பள்ளியை நீங்கள் பார்க்கலாம்.

அங்கிருந்து நாங்கள் சட்கர்ட் என்ற இடத்திலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியிலும் மற்றுமொரு தனியார் பள்ளியிலும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்தோம். இரண்டு பள்ளிகளிலும் சேர்த்து 60 பிள்ளைகளும் 8 ஆசிரியர்களும் இருந்தனர். அதற்கப்பால் பதால் பொக்ரா என்ற இடத்திலுள்ள 32 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் கொண்ட ஆரம்ப பள்ளியில் சுவிசேஷப் பிரசுரங்களைக் கொடுத்தோம். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு வேதாகமம் ஒன்றும் கொடுத்தோம். நயினிபத்தல் என்ற இடத்தில் ஒரு மனிதன் "நான் உங்களை இந்த இடத்தில் கிறிஸ்த மார்க்கத்தை பிரசங்கம் பண்ணவிட மாட்டேன். இந்த இடத்தில் நாங்கள் இந்து மக்களாக இருக்கின்றோம். நாங்கள் எக்காலத்தும் இந்துக்களாகவே இருப்போம்" என்று சத்தமிட்டுப் பேசினான்.

அங்கிருந்து நாங்கள் சத்கட் என்ற கிராமத்திற்கு எங்கள் வாகனங்களில் வந்து அந்த கிராமத்திற்கு முன்பாகவே ஒரு பள்ளிக்கூடம் கீழே பள்ளத்தில் இருப்பதைக் கண்டு எங்கள் வாகனங்களை ரஸ்தாவிலிருந்து இடது கைப்பக்கமாக வாகனங்களுக்கு நன்றாக இடம் கொடுத்து நிறுத்திவிட்டு எங்கள் ஜோல்னா பைகளுடன் கீழே இறங்க முயற்சிக்கையில் மேலே ரஸ்தாவில் கூடியிருந்த வாலிபர்களில் ஒருவன் கீழே வந்து எங்கள் வாகனத்தின் நம்பர்களை வாசித்துவிட்டு "எந்த ஒரு நிலையிலும் கீழே உள்ள பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு கிறிஸ்தவப் பிரசுரங்களைக் கொடுக்கப்போகக் கூடாது என்று தடுத்தான். அத்துடன் ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு நேரிடும் காரியங்கள் உங்களுக்கும் ஏற்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா" என்று கேட்டான்.

அந்த வேளையில் நமது வாகனங்கள் ஒன்றின் டிரைவரான மனோஜ் என்பவர் அந்த வாலிபர்களைப் பார்த்து "நான் பித்தோர்கார்ட் பட்டணத்தைச் சேர்ந்தவன். எனினும் எனது பெற்றோரின் பிறப்பிடம் இந்த சத்கட் என்ற கிராமம்தான். எங்கள் பூர்வீக இருப்பிடம் இங்கு உள்ளது" என்று சொல்லவும் அந்த வாலிபர்கள் அப்படியே பின்வாங்க ஆரம்பித்ததுடன் "ஒரிசாவிலிருந்து கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காக நீங்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள் என்று நாங்கள் உங்களை தவறாக நினைத்து விட்டோம். அதினால்தான் நாங்கள் வந்து வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் பார்த்தோம். எங்களை மன்னியுங்கள். உங்கள் விருப்பப்படி கீழே உள்ள பள்ளிக்குச் சென்று கிறிஸ்தவ பிரசுரங்களைக் கொடுங்கள்" என்று கூறினான்.

அதைத் தொடர்ந்து நமது தேவ ஊழியர்கள் மான்களைப்போல கீழே குதித்துச் சென்று அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கெல்லாம் தேவனுடைய கைப்பிரதிகளைக் கொடுத்து விட்டு பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஹிந்தி வேதாகமமும் இதர பிரதிகளும் கொடுத்துவிட்டுச் சந்தோசமாகத் திரும்பினர். நாங்கள் சென்று ஊழியம் செய்த சத்கட் உயர்நிலைப்பள்ளியை நீங்கள் காணலாம்.


மறக்கமுடியாத மஜர்கானா கிராமம்

அன்பின் ஆண்டவருடைய திட்டமான ஆலோசனைப்படி நாங்கள் ஒரு நாள் காலையில் பித்தோர்கார்ட்டிலிருந்து நேப்பாள எல்லையான ஜூலாகாட் செல்லும் ரஸ்தாவின் பிரிவில் உள்ள மஜர்கானா என்ற ஒரு கிராமத்திற்குச் சென்றோம். அந்தக் கிராமத்தில் எங்கள் வாகனங்களை அங்குள்ள சிறிய கடைவீதியில் நிறுத்திவிட்டு கடைவீதியின் மேலும் கீழுமுள்ள வீடுகள் ஒவ்வொன்றிற்கும் சென்று தேவனுடைய பிரசுரங்களை மக்களுக்குக் கொடுத்தோம். அந்த கிராம மக்கள் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அவைகளை எங்கள் கரங்களிலிருந்து ஆசை ஆவலோடு வாங்கி வாசித்தார்கள்.

நாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் எங்களுடன் அந்த கிராமத்திலுள்ள ஒரு அன்பான மகள் எங்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். அது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் மஜர்கானா கிராமத்தை விட்டுப் புறப்படும் சமயம் தனது உள்ளத்தில் உள்ள ஆசையை எங்களுக்குத் தெரிவித்தாள். அதைக் கேட்ட நாங்கள் உண்மையில் மிகுந்த ஆச்சரியமடைந்தோம். ஆம், அவள் தனக்கென்று சொந்தமாக வைத்துக் கொள்ள ஒரு ஹிந்தி வேதாகமம் வேண்டுமென்று கேட்டாள். அவளுடைய விருப்பப்படி நாங்கள் அவளுக்கு ஒரு வேதாகமத்தைக் கொடுத்தோம். அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதை அப்படியே வாங்கி முத்தமிட்டு தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். ஆ, அந்தக் காட்சி எத்தனை கண்கொள்ளாக்காட்சி என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! அந்தப் பரிசுத்த வேதாகமத்தை அவள் தனக்கு அருகிலிருந்த தனது அன்பான சிநேகிதியிடமும் காண்பித்து ஏதோ அவளிடத்தில் பேசினாள். அவ்வளவுதான், அவளும் தனக்கென்று ஒரு வேதாகமம் வேண்டுமென்று எங்களை அன்புடன் கேட்டாள். அவளுடைய விருப்பப்படி அவளுக்கும் ஒன்றைக் கொடுத்தோம். அவர்கள் இருவரும் கர்த்தருடைய வேதாகமத்தை தங்கள் கரங்களில் ஏந்தியவர்களாக கடைவீதியில் நின்று கொண்டிருந்தது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இரண்டாவதாக வேதாகமத்தை எங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மகளின் தந்தை நாங்கள் சென்றிருந்த மஜர்கானா ஊரில் ஒரு கடை வைத்திருக்கின்றார். அந்த அன்பான மனிதருக்கும் ஆண்டவரைக் குறித்துச் சொல்லி தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து வந்தோம். அந்த கிராமத்தில் தேவன் எங்களுக்கு ஒரு அருமையான ஊழிய வாய்ப்பைத் தந்தார். நாங்கள் சென்ற மஜர்கானா கிராமத்தையும், ஹிந்தி வேதாகமம் இரண்டாம் தடவையாக எங்கள் கரங்களிலிருந்து பெற்றுக் கொண்ட பிள்ளையின் தந்தையையும் நீங்கள் காணலாம்.


அடக்கினி கிராமத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

அடக்கினி என்ற இடம் பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஒரு அழகிய இடமாகும். அது மிகவும் பள்ளத்தில் உள்ள மலைக் கிராமமாகும். வழக்கம் போல ஒரு நாள் காலை வேளையில் நாங்கள் ஒன்றாகக் கூடி ஜெபித்த பின்னர் அங்கு புறப்பட்டோம். அடக்கினியிலுள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியை முதலாவது சந்தித்து பிள்ளைகளுக்கு ஆண்டவருடைய சுவிசேஷப் பிரசுரங்களைக் கொடுக்க நாங்கள் தீர்மானித்தோம் அடக்கினி கடை வீதியிலிருந்து பெண்கள் உயர்நிலைப் பள்ளி உச்சி மேட்டில் இருந்தது. எங்கள் வாகனங்களை கீழே நிறுத்திவிட்டு நாங்கள் மேடு ஏறி நானா பக்கங்களிலிருந்தும் பிள்ளைகள் பள்ளிக்கு வரக்கூடிய இடங்களில் கைகளில் சுவிசேஷப் பிரசுரங்களை ஏந்தி தயார் நிலையில் காத்திருந்தோம். பள்ளி ஆரம்பிக்கும் சமயத்தில் பிள்ளைகள் கும்பல் கும்பலாக வர ஆரம்பித்தனர். கர்த்தருடைய கிருபையால் ஓரளவு அனைவருக்கும் கைப்பிரதிகளை ஜெபத்துடன் விநியோகித்தோம். சகோதரன் நார்ட்டன் அவர்களும், விஜய்சிங் அவர்களும் கரங்களில் தேவனுடைய பிரசுரங்களை ஏந்தியவர்களாக பிள்ளைகளுக்கு கொடுக்க காத்திருப்பதை நீங்கள் படத்தில் காண்பதுடன் சுவிசேஷ பிரதிகளை எங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மாணவிகள் தங்கள் பள்ளிக்கு முன்னால் கூடியிருப்பதையும் காணலாம். அங்கு மொத்தம் 150 மாணவிகளும் 9 ஆசிரியர்களும் இருப்பதாகச் சொன்னார்கள்.

அங்கு நாங்கள் ஊழியம் முடித்துவிட்டு அடக்கினி கடை வீதியில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். கடை வீதியிலும் ஒரு ஆரம்ப பள்ளி ஒன்று இருந்தது. அதில் 24 பிள்ளைகளும் 2 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்களுக்கும் கைப்பிரதிகளைக் கொடுத்து ஊழியம் செய்த பின்னர் சுலோனி என்ற இடத்திலுள்ள ஆரம்ப பாடசாலையிலும் ஊழியம் செய்தோம். அங்கு 35 பிள்ளைகளும் 2 ஆசிரியர்களும் இருந்தனர். அதற்கப்பால் ஜோலாகேத், மத்காம் போன்ற இடங்களில் தேவ ஊழியங்களை முடித்துக் கொண்டு நாங்கள் எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தோம்.


கருங்கானகத்தில் ஒரு பள்ளிக்கூடம்

பித்தோர்கார்ட் பட்டணம் மிகவும் கேந்திர முக்கியத்துவமான பட்டணமாகும். நேப்பாளம், சீனா என்ற இரு நாடுகளின் எல்லைகளும் இந்தப் பட்டணத்தைத் தொட்டு நிற்பதால் நமது இந்திய எல்லைகளைப் பாதுகாக்க ஒரு பெரிய இந்திய ராணுவ தளம் இங்குள்ளது. அதுமட்டுமல்ல, இந்து மக்களின் மிகவும் புண்ணிய ஸ்தலமான கைலாசம் செல்ல வேண்டுமானால் இந்தப் பட்டணத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். யாவுக்கும் மேலாக மகாத்துமா சாது சுந்தர் சிங் அவர்கள் இந்தப் பட்டணத்தின் வழியாக கைலாச மலைகளிலுள்ள கைலாச மகாரிஷியைக் காண்பதற்காக ஒரு தடவை இந்தப்பட்டணத்தின் வழியாகச் சென்றதாக அவருடைய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஒரு நாள் நாங்கள் தேவனுடைய ஊழியத்தின் பாதையில் நேப்பாளத்தின் எல்லைப் பகுதியான ஜூலாகாட் என்ற இடத்திற்குச் சென்று அங்குள்ள கடைவீதிகளில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தோம். அங்குள்ள இந்திய அரசாங்க அதிகாரிகள் ஓரிருவருக்கு நாங்கள் எங்களுடன் கொண்டு சென்ற கிறிஸ்தவ சி.டி. களும் கொடுத்தோம். நாங்கள் எங்கள் ஊழியங்களை முடித்து பித்தோர்கார்ட் திரும்பும் வழித்தடத்தில் கௌரிகாட் என்ற இடத்தில் மலை உச்சியில் அடர்ந்த கானகச் சோலைக்குள் ஒரு பள்ளி இருப்பதை கண்டு பிடித்தோம். நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது அது ஒரு உயர் நிலைப் பள்ளிக்கூடம் என்பதை அறிந்தோம். பள்ளிப் பிள்ளைகளுக்கு அப்பொழுது எழுத்து தேர்வு நடந்து கொண்டிருந்தது. பள்ளியின் பிரின்ஸ்பாலிடம் நாங்கள் பிரதிகளை பிள்ளைகளுக்குக் கொடுக்கும்படியாக அனுமதி கேட்டபோது மிகுந்த மகிழ்ச்சியோடு எங்களுக்கு அனுமதி அளித்தார். எழுத்துப் பரீட்ஷை நடந்து கொண்டிருந்ததால் மிகவும் விரைவாக அவைகளை பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு செல்லும்படியாகச் சொன்னார். உடனே நாங்கள் அங்குள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் தேவனுடைய பிரதிகளை ஜெபத்தோடு வழங்கினோம். ஆசிரிய பெரு மக்களுக்கு புதிய ஏற்பாடுகள் மற்றும் சத்தியமார்க்கத்தைக் கொடுத்தோம்.

ஆசிரியர்களில் ஒருவர் தனக்கு ஒரு வேதாகமம் வேண்டும் என்று மிகவும் ஆசை ஆவலோடு எங்களிடம் கேட்டார். அந்தச் சமயம் எங்கள் கை வசம் வேதாகமம் இல்லாததால் திரும்பவும் ஒரு நாள் ஒரு வேதாகமத்துடன் நீண்ட தொலை தூரம் அவருக்காக பிரயாணம் செய்து வந்து அவருக்குக் கொடுத்தோம். அவர் அடைந்த சந்தோசம் மிகவும் அதிகமாக இருந்தது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

நாங்கள் சென்ற பள்ளி அடர்ந்த காட்டுப் பகுதியில் கட்டப் பட்டிருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தோம். நிச்சயமாக புலி, கரடி வாழும் கானகப் பகுதி அது. எனினும், கானகவாசிகளான அவர்களுக்கு காட்டைப் பற்றி பயம் எதற்கு? நாங்கள் சென்று ஊழியம் செய்த அந்தக் கானகப் பள்ளிக்கூடத்தையும், பள்ளிக்கூடத்தின் முகப்பில் கானகப்பகுதியில் கருங்கல் முகப்பு வளைவும் உள்ளதையும், நமது தேவ ஊழியர்கள் கரங்களில் சுவிசேஷ பிரசுரங்களை ஏந்திக் கொண்டு கஷ்டத்துடன் அந்தக் கானகத்துக்குள் ஏறிச் செல்லுவதையும் நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

நாங்கள் 10 நாட்கள் பித்தோர்கார்ட் பட்டணத்தில் தங்கியிருந்து கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக எங்கள் இரு வாகனங்களில் தேவனுடைய பிரசுரங்களை ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்று எங்கெங்கெல்லாம் ஆத்தும பாரத்தோடு ஊழியம் செய்தோம் என்பதை அன்பின் ஆண்டவர் அறிகின்றார். அவைகள் யாவையும் நான் உங்களுக்கு எழுதவில்லை. எழுதவும் இயலாது. முடிவில்லாத நித்தியம் மட்டும் அதை உங்களுக்கு வெளிப்படுத்தும். கர்த்தருக்கே மகிமை. நாங்கள் கொடுத்த தேவனுடைய பிரசுரங்களை ஆசை ஆவலோடு வாங்கி வாசிக்கும் தவனமுள்ள ஆத்துமாக்கள் சிலரின் படங்களையும் நீங்கள் இந்தச் செய்தியில் பார்ப்பீர்கள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.


 

உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் தனது சபையின் கிளைகளை வைத்திருக்கும் ஒரு வயது முதிர்ந்த பரிசுத்த தேவ மனிதர் தனது சபை விசுவாசி ஒருவரிடம் தனது கால் சட்டையை உயர்த்தி எத்தனை ஆயிரம் ஆயிரம் மணி நேரங்களோ தேவ சமூகத்தில் முழங்காலூன்றி ஜெபித்து ஜெபித்து கரடாகப் போன தனது முழங்கால்களைக் காண்பித்து, தனது ஊழியத்தின் ஆசீர்வாதத்திற்கான இரகசியம் இது ஒன்று மட்டுமே என்றும், அந்த விசுவாசியும் அவரைப் போல தேவ சமூகத்தில் அதிகமதிகமாக ஜெபித்து எல்லா தேவ ஆசீர்வாதங்களையும் கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அன்பாக தேவ ஆலோசனை கூறினாராம்.

தேவ பிள்ளையே, இப்படிப்பட்ட பரிசுத்த தேவ மனிதர்களைப் பின்பற்றிச் செல்லுங்கள். மகத்தான பரலோக ஆசீர்வாதம் காண்பீர்கள். அதை விட்டு விட்டு நிச்சயமற்ற சரீர சுகத்தையும், நீர்மேல் குமிழியாம் இந்த உலக வாழ்வின் செழிப்பையும், செல்வத்தையும் மேடைகளிலே நின்று மனதை மயக்கும் வார்த்தைகளால் (தீத்து 1 : 10) பிரசங்கிக்கும் பெருமைக்கார ஊழியர்களை நாடித் தேடி ஓடாதேயுங்கள். அப்படிச் செய்வீர்களாகில் எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமின்றி உங்கள் மதியீனமான செயலுக்காக நீங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை திட்டமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கும் (சங் 119 : 37)

மாயையைப் பற்றி கிறிசொஸ்தம் என்ற பரிசுத்தவான் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கின்றார்:-

"லோக மாந்தர் அனைவருக்கும் ஒரு பிரசங்கத்தைப் பிரசங்கிக்கக் கூடிய தகுதி எனக்கு மாத்திரமே இருக்கின்றது என்பதை தேவன் அறிந்து அந்த லோக மாந்தர் அனைவரையும் நான் காணத்தக்கதாக எனக்கு முன்பாகக் கூடி வரச் செய்து உலகத்தின் மிக உயர்ந்ததொரு மலையை என்னுடைய பிரசங்க பீடமாக எனக்கு அமைத்துத் தந்து எனக்கு முன்பாக கூடி வந்த உலக மக்கள் அனைவருக்கும் என் பிரசங்க வார்த்தைகள் கேட்கத்தக்கதாக எனக்கு அவர் தம்முடைய பிரதான தூதனின் எக்காள குரல் ஓசையைத் தரும் பட்சத்தில் நான் அந்த மக்களுக்குப் பிரசங்கிக்கும்படியாக தெரிந்து கொள்ளக்கூடிய தேவனுடைய வசனம் யாதெனில் "மனுப்புத்திரரே, எதுவரைக்கும் வீணானதை (ஆங்கில வேதாகமத்தில் மாயை என்று திருப்பப்பட்டுள்ளது) விரும்பி பொய்யை நாடுவீர்கள்" (சங் 4 : 2) என்ற வசனத்தையே தெரிந்து கொள்ளுவேன்" என்று கூறினார்.



 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM