"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித் தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான், ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்" (சங் 126 : 5, 6)
கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமத்திற்குத் துதி, கனம், மகிமை உண்டாவதாக. தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை புற மதஸ்தினருக்கு நாம் அறிவிக்கும் நமது பிரயாசங்களைக் கர்த்தர் ஆசீர்வதிக்கிறவராகவும், நமது இருதயத்தின் பரிசுத்த ஆவல்களை நிறைவுசெய்கின்ற அன்பின் கன்மலையுமாகவுமிருக்கின்றார். ஆனால், அதற்காக நாம் பாரத்தோடு தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் விதைத்த ஜீவ விதைகள்முப்பது, அறுபது, நூறுமான பலனைக் கொடுக்கும். இதுகாறும் நாம் நமது வாகன தேவ ஊழியங்களின் மூலமாக பல்லாயிரக்கணக்கான இமயமலை வாழ் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும் கொடுத்து வந்திருக்கின்றோம். அந்த வார்த்தைகள் ஒன்றும் வீண்போகாது என்று தேவனுடைய வார்த்தை திட்டமும், தெளிவுமாகக் கூறுகின்றது. "மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படி செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசாயா 57 : 10, 11)
சமீப மாதங்கள் ஒன்றில் எனக்கு தேவ ஊழியத்திற்காக வந்த காணிக்கை மணி ஆர்டர்களில் இமாச்சல் பிரதேசத்திலிருந்து எனக்கு முன்பின் தெரியாத ஓம் பிரகாஷ் சௌத்திரி என்ற இந்து மனிதர் காங்டா மாவட்டத்திலிருந்து ரூபாய் 225 அனுப்பியிருந்ததை நான் மிகவும் ஆச்சரியத்துடன் கவனித்தேன். மணி ஆர்டர் பாரத்தின் அடிக்கட்டையில் "நீங்கள் அனுப்பிய ஆங்கில வேதாகமத்துக்காக உங்களுக்கு ஒரு மூட்டை (Bundle of love) அன்பு" என்று எழுதியிருந்தார். 2005 ஆம் ஆண்டில் நாங்கள் எங்கள் இமாச்சல் பிரதேச வாகன தேவ ஊழியத்தின்போது நாங்கள் தர்மசாலை என்ற பட்டணத்தில் தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தோம். தர்மசாலையில் இந்திய இராணுவ பாசறையும் உள்ளது. எங்கள் வாகனங்கள் இரண்டும் அந்த இராணுவ பாசறைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன. தேவனுடைய பிரசுரங்களை நமது தேவ ஊழியர்கள் அங்கிருந்த இராணுவத்தினருக்கும் கொடுத்தனர். அவற்றை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்று வாசித்தனர். அதின் பின்னர் நமது தேவ ஊழியர்கள் தேவனுடைய பிரசுரங்களை தர்மசாலையின் மற்ற பகுதிகளில் கொடுத்துக்கொண்டிருந்த வேளையில் நான் நமது வாகனங்களைப் பார்த்துக் கொண்டு ஒரு வாகனத்தில் உட்கார்ந்திருந்தேன். அந்தச் சமயத்தில் ஒரு படித்த மனிதர் என்னண்டை வந்து தனக்கு ஒரு ஆங்கில வேதாகமம் வேண்டுமென்று என்னிடம் கேட்டார். அவருக்கு கொடுக்க எங்கள் வசம் ஆங்கில வேதாகமம் இல்லை என்றும், ஊர் சென்ற பின்னர் ஒரு வேதாகமம் நிச்சயமாக அனுப்புவதாகவும் சொன்னேன். அந்த மனிதரிடமிருந்து அவருடைய முகவரியைப் பெற்று வந்து நான் சொன்ன என் வார்த்தையின்படி இங்கு வந்த பின்னர் அவர்களுக்கு ஒரு அழகிய கையடக்கமான ஆங்கில வேதாகமம் ஒன்று வாங்கி அனுப்பினேன். அதைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அந்தப் பணத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள். நான் அந்தப் பணத்தை அவர்களுக்கே திரும்ப அனுப்பி வேதாகமத்தை நான் அவர்களுக்கு முற்றும் எனது அன்பளிப்பாகவே அனுப்பியிருந்தேன் என்றும் அதை அவர்கள் நன்கு வாசித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதினதுடன் மிகவும் பயனுள்ளதும், விலை மதிப்புள்ளதுமான வேறு சில ஹிந்தி மொழி கிறிஸ்தவ புத்தகங்களை வாங்கி இங்கிருந்து பதிவுத் தபாலில் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அன்பின் ஆண்டவர் அவர்களுடன் தமது வார்த்தைகளின் மூலமாகப் பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
சமீப நாட்களில் மற்றொரு காரியம், மதுரை ஒட்டன்சத்திரத்திலிருந்து தேவமனிதர் டாக்டர் செல்வின் ஐயா அவர்கள் நாங்கள் வடக்கே இமயமலைப் பகுதிகளில் ஊழியம் செய்த இடத்திலிருந்து தனக்கு வந்த சில கடிதங்களின் நகல்களை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதில் குறிப்பிட்ட ஒரு பெண் அன்பின் ஆண்டவரைக் குறித்து அதிகமாக அறிவதற்காக பலதடவைகளும் ஒட்டன்சத்திரத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அந்தப் பெண்ணுக்கு அனுப்ப கிறிஸ்தவ பிரசுரங்கள் தங்கள் வசம் இல்லாததால் எங்களை அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொள்ளவும் தேவையான பிரசுரங்களை அவர்களுக்கு அனுப்பி உதவும்படியாகவும் கேட்டிருந்தார்கள். நான் உடனே உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள நமது தேவ ஊழியர்களுடன் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணைச் சந்திக்கும்படியாக கேட்டுக்கொண்டேன். அதின்படி நமது தேவ ஊழியர் பாஸ்டர் ஜேம்ஸ் அவர்கள் ஹீரா நேகி என்ற அந்தப் பெண்ணைச் சந்திக்க 240 கி.மீ தொலைவு பிரயாணம் செய்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு சுவிசேஷம் அறிவித்துவிட்டு வந்திருக்கின்றார்கள். மிகவும் பயனுள்ள கிறிஸ்தவ பிரசுரங்கள் இங்கிருந்தும் பதிவுத் தபாலில் ஹீரா நேகிக்கு அனுப்பப்பட்டிருப்பதுடன் மேற்கண்ட நமது பாஸ்டர் சகோதரன் அவர்களும் தன் வசம் கர்த்தருடைய பிரசுரங்களை எடுத்துச் சென்று கொடுத்திருக்கின்றார்கள். கர்த்தருக்கே மகிமை.

இதில் ஒரு ஆச்சரியமான காரியம் என்னவெனில், ஹீரா நேகி என்ற அந்தப் பெண் நாங்கள் கொடுத்த கிறிஸ்தவப் பிரசுரங்களை வாங்கும் வாய்ப்பைப் பெறாதவர்கள். எங்களிடமிருந்து பிரசுரங்களை வாங்கி வைத்திருந்த மற்றொரு நபரிடமிருந்து அவைகளைப் பெற்றுப் படித்து அதினால் தொடப்பட்டதன் காரணமாக டாக்டர் செல்வின் ஐயாவுடன் தொடர்பு கொண்டிருக்கின்றாள்.

எங்களிடமிருந்து தேவனுடைய பிரசுரங்களைப் பெற்று அதின் மூலமாகத் தொடப்பட்ட மற்றொரு ஆத்துமா சுந்தர்சன் சன்யால் என்ற வாலிபனாவான். அவனும் ஒட்டன்சத்திரத்திற்கு ஆண்டவர் இயேசுவைக் குறித்து அதிகமாக அறிந்து கொள்ள கடிதம் எழுதியிருக்கின்றான். பாகேஷ்வர் ஜில்லாவிலுள்ள தேவ்லியாத் என்ற கிராமத்தைச் சேர்ந்த அவனைச் சந்திக்க நம்முடைய தேவ ஊழியர் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்கள் பித்தோர்கார் என்ற இடத்திலிருந்து நீண்ட தூரம் தனது ஸ்கூட்டரில் பிரயாணம் செய்து பேரிநாக் என்ற இடம் வரை வந்து அந்த இடத்தில் தனது வாகனத்தை விட்டுவிட்டு குறுகலான பாதை வழியாக கால்நடையாக சுமார் 20 கி.மீ. தூரம் நடந்து தேவ்லியாத் கிராமத்தில் மேற்கண்ட சுந்தர் சன் சன்யால் என்ற வாலிபனைச் சந்தித்து அவனுக்கு ஆண்டவர் இயேசுவைக் குறித்து விபரமாகக் கூறியிருக்கின்றார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் பலரும் அந்த வாலிபனின் வீட்டில் வந்து கூடிவிட்டார்களாம். அந்த இடத்தில் அந்த மக்கள் எல்லாருக்கும் கர்த்தருடைய சுவிசேஷத்தைக் கூறிவிட்டு சகோதரன் மிகுந்த மகிழ்ச்சியோடு கடந்து வந்திருக்கின்றார்கள். மேற்கண்ட தவனமுள்ள ஆத்துமாக்கள் யாவரோடும் அன்பின் ஆண்டவர் தொடர்ந்து பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
நாம் வடக்கே செய்து வருகின்ற தேவஊழியங்கள், மக்களுக்கு நாம் விநியோகிக்கும் திரள் திரளான தேவனுடைய வார்த்தைகள் யாவும் ஏற்ற காலத்தில் கர்த்தருக்கு மகிமையான அறுவடையைப் பிறப்பிக்கும் என்று நாம் நிச்சயமாக விசுவாசிக்கலாம். நாம் செய்ய வேண்டிய காரியம் எல்லாம் வடக்கே செய்யப்பட்ட ஊழியங்களுக்காக தொடர்ந்து தேவ சமூகத்தில் மன்றாடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
|