தேவ எக்காளத்தை பார்த்ததும் அது சிறப்பாகவும், வெகு அழகாகவும் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்து அது எங்கே அச்சிடப்படுகின்றது? எந்த அச்சுக்கூடத்தினர் அதை அச்சிடுகின்றனர்? என்று பலரும் என்னைக் கேட்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்நாட்டில் வெளியாகும் அநேக கிறிஸ்தவ பத்திரிக்கைகளைக் காட்டிலும் நம்முடைய "தேவ எக்காளம்" அழகான முகப்பு அட்டையுடன் விலையுயர்ந்த காகிதத்தில், சிறப்பாக அச்சிடப்பட்டு வெளியாகின்றது. ஆரம்ப கால ஆண்டுகளில் கொஞ்ச பக்கங்களுடன் "தேவ எக்காளம்" மற்ற அச்சுக்கூடங்களில் அச்சிடப்பட்டது. பக்கங்கள் கொஞ்சம் கூடுதலாகிவிட்டால் அந்தப்பக்கங்களை அந்த அச்சகத்தார் உடனே நீக்கிவிடுவார்கள். அப்படி பக்கங்கள் நீக்கப்பட்டு என் கரங்களை வந்தடைந்த தேவ எக்காளத்தை ஆண்டவருடைய பாதங்களில் வைத்து அதை அவருக்கு காண்பித்து அங்கலாய்த்த நாட்கள் உண்டு. ஆனால், இந்த நாட்களில் நான் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் என் மனங்குளிர கம்பியூட்டரில் டைப் செய்து அச்சிட்டு வெளியிட அன்பின் தேவன் கிருபை செய்திருக்கின்றார். அந்த அன்பின் கர்த்தருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்தமுடியும்?
கோத்தகிரியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலுள்ள குன்னூர் என்ற பட்டணத்தில் உள்ள குன்னூர் பிரிண்டிங் பிரஸ் என்ற அச்சகத்தார் நமது தேவ எக்காள பத்திரிக்கையை கடந்த 14 ஆண்டு காலமாக அச்சிட்டுத் தருகின்றார்கள்.
இந்த அச்சகத்தின் காலஞ்சென்ற நிறுவனர் திரு. மாரிமுத்து ஐயா அவர்கள் எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். பண ஆசையற்ற, யாவரையும் மிகவும் அன்புடன் நேசிக்கின்ற, எளிமையான இந்து பக்தன் ஆவார்கள். குன்னூருக்கு அருகிலுள்ள வெல்லிங்டன் ராணுவ பள்ளிக்கு அருகில் Dhody & Sons என்ற பெயரில் அச்சுக்கூடம் அமைத்து அச்சுத் தொழிலில்அந்த நாட்களில் கொடிகட்டிப் பறந்த ஒரு நிறுவனத்தில் அச்சுக்கலையை சிறப்பாக கற்று தனது சொந்த அச்சகத்தை பின்னர் அவர்கள் குன்னூரில் ஆரம்பித்தார்கள்.
அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் இளைய குமாரன் திரு.ஆறுமுகம் அவர்கள் தனது தந்தையின் தொழிலை எடுத்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் முயற்சியால் இன்று நீலகிரி மலைகளில் அவர்களது அச்சுக்கூடம் முதன்மை ஸ்தானத்தில் விளங்குகின்றது. அவர்களும் தனது தகப்பனாரிடமிருந்து அச்சுத் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டதுடன் அவர்களைப் போல அன்புள்ளம் கொண்டவர்கள். கிறிஸ்தவ மக்கள் பலரிடம் காணப்படாத மிகுந்த உண்மை அவர்களிடம் உண்டு.
இங்கே நமது குன்னூர் அச்சுக்கூடத்தில் நாம் வாங்கிக் கொடுக்கும் நமது பேப்பரை தனி அலமாரியில் வைத்து அதில் ஒரு துண்டு காகிதத்தைக் கூட அவர்கள் தங்கள் தேவைக்கு எடுக்கமாட்டார்கள். நான் அங்கு போகின்ற சமயம் என்னைக் கூப்பிட்டு "வந்து பாருங்கள், உங்கள் பேப்பர் எங்களிடம் இவ்வளவு கையிருப்பு உள்ளது, நீங்கள் இன்னும் இத்தனை பதிப்புகளுக்கு காகிதம் வாங்க அவசியமில்லை" என்று என்னிடம் சொல்லுவார்கள். நமக்கு எந்தெந்த விதத்தில் பணத்தை மிச்சம்பண்ணிக் கொடுக்க முடியுமோ அந்தவிதத்தில் அவர்கள் கரிசனையாக இருப்பார்கள். |