தேவ எக்காளத்திற்கான செய்திகளை கர்த்தர் அற்புதமாக எனக்கு வாங்கிக் கொடுத்த இரண்டு டைப்ரைட்டர்களின் உதவியால் சுமார் 11 அல்லது 12 ஆண்டு காலமாக டைப் செய்து தயாரித்து அச்சுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்படி டைப் செய்வதும் மிகவும் கடினமான காரியமே. காரணம், கை விரல்களை பலமாக அழுத்தி அச்சுப் பதிக்க வேண்டும். அந்தக் காரியமும் எனக்கு மிகவும் கஷ்டம் என்று என் நிலை அறிந்த கருணைக் கடலாம் நம் அன்பின் ஆண்டவர் விரலால் தொட்ட மாத்திரத்தில் அச்சுப் பதிக்கக்கூடிய அற்புதமான கம்பியூட்டர் ஒன்றை எனது பிள்ளைகள் மூலமாக 2001 ஆம் ஆண்டு எனக்கு வாங்கிக் கொடுத்தார். பிள்ளைகள் எனக்கு ஒரு கம்பியூட்டர் வாங்கித் தருகின்றோம் என்று சொன்ன போது நான் அவர்களோடு அது வேண்டவே வேண்டாமென்று கடுமையாகப் போராடினேன். ஆனால் அவர்கள் என்னை விட்டபாடில்லை. "அப்பா நீங்கள் பயப்படத் தேவையில்லை, நீங்கள் கர்த்தருடைய உதவியோடு கம்பியூட்டரை மிக விரைவில் கற்றுக் கொண்டு அதில் சாதனையே படைத்து விடுவீர்கள்" என்று சொல்லி அதிக விலையில் (2001 ஆம் ஆண்டு கம்பியூட்டர்களின் விலை எல்லாம் மிகவும் அதிகம்) ஒரு கம்பியூட்டர் வாங்கித் தந்தார்கள். பிள்ளைகளின் வார்த்தையின்படியே கர்த்தாவின் அதி அற்புத அன்பினால் நான் கம்பியூட்டரை பயன்படுத்த மிகத் துரிதமாக கற்றுக் கொண்டேன். அதைப் பயன்படுத்த கர்த்தர் எனக்கு எப்படி உதவி செய்தார் என்ற காரியங்களை எல்லாம் நான் நமது தேவ எக்காளத்தின் கடந்த இதழ் ஒன்றில் விரிவாக எழுதியிருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதில் ஒரே ஒரு காரியத்தை மட்டும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். தமிழ் டைப் ரைட்டரில் இருப்பது போல கம்பியூட்டரின் கீ போர்ட் தமிழில் இல்லாததால் ஆங்கில வார்த்தைகளை வைத்தேதான் தமிழில் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆங்கில எழுத்தாகப் பார்த்து பார்த்து டைப் செய்ய வேண்டும். ஆரம்பத்தில், காலை முதல் மாலை வரை அப்படி ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்து பார்த்து டைப் செய்து மாலை சமயத்தில் ஏதோ ஒரு சிறிய தவறில் காலை முதல் மாலை வரை டைப் செய்த அனைத்து செய்திகளும் மறைந்து போயிருக்கும். அதைக்கண்ட எனது கண்கள் கண்ணீரால் நிரம்பும். இழந்து போனதை திரும்பவும் நான் அடுத்த நாள் ஜாக்கிரதையாக டைப் செய்வேன். பயிற்சியாளர்களின் எஜமானராகிய நம் அன்பின் தேவன் அந்தவிதமாக என்னைப் பழக்குவித்தபடியால் கர்த்தருடைய கிருபையால் இன்று நல்ல விரைவாக செய்திகளை கம்பியூட்டரில் தமிழில் டைப் செய்ய முடிகின்றது. கர்த்தருக்கே மகிமை.
கடந்த சுமார் 7 ஆண்டு காலமாக நமது தேவ எக்காளச் செய்திகளை நான் நமது கம்பியூட்டரிலேயே அச்சுப் பதித்து வருகின்றேன். அதின் காரணமாக, எந்த ஒரு சிரமமுமின்றி நிறைய பக்கங்களுடன், கூடுமானவரை பிழைகளின்றி தேவ எக்காளத்தை வெளியிட முடிகின்றது. 2006 ஆம் ஆண்டின் முதல் இதழ் 128 பக்கங்களுடன் வெளி வந்ததை நீங்கள் அறிவீர்கள். கம்பியூட்டர் இருப்பதன் காரணமாக கடந்த கால பரிசுத்த பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை முழு நீள அளவில் முழுமையாக தேவ பிள்ளைகளாகிய உங்களுக்குக் கொடுக்க தேவ கிருபையால் எனக்கு முடிகின்றது.
கம்பியூட்டரின் ஒரு மாபெரும் அதிசயச் செயல் என்னவெனில், நாம் அதில் டைப் செய்யும் செய்திகளை எப்படி வேண்டுமானாலும் நாம் நினைத்தபடி அடித்தல், திருத்தல், சேர்த்தல் எல்லாம் செய்து கொள்ளலாம். கீழுள்ள செய்தியை மேலே கொண்டு செல்லலாம், மேலுள்ளதை கீழே கொண்டு வரலாம். அதில் டைப் செய்யும் எழுத்துக்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சிறிதோ அல்லது பெரிதோ செய்து நாம் பார்க்கலாம். அதின் காரணமாக டைப் செய்யும் செய்திகளின் பிழைகளை நாம் இலகுவாக கண்டு கொள்ள முடிகின்றது. கம்பியூட்டர் வைத்திருக்கும் தேவப் பிள்ளைகளுக்கு இந்தக் காரியங்கள் எல்லாம் நன்கு தெரியும். கம்பியூட்டர் சாதனம் கர்த்தருடைய ஊழியத்திற்குச் செய்யும் மகத்தான சேவையை விவரிக்க வார்த்தைகளில்லை. அந்த அற்புத கண்டுபிடிப்பை மனிதனுக்கு வெளிப்படுத்திக் கொடுத்த தேவனுக்கு நாம் அனந்தங்கோடி ஸ்தோத்திரம் செலுத்தலாம்.
அதிலுள்ள இண்டர்நெட் இணைப்பு மூலமாக மேல் நாடுகளிலுள்ள பூர்வ காலத்து பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள், அவர்களுடைய அனலூட்டும் எழுப்புதல் பிரசங்கங்கள், அவர்கள் எழுதிய புத்தகங்களின் செய்திகள், அவர்களுடைய படங்கள் போன்ற யாவற்றையும் நாம் பெற்றுக் கொள்ள முடிகின்றது. கடந்த தேவ எக்காளத்தின் முகப்பில் காணப்படும் "வில்லியம் கிரிம்ஷா" என்ற தேவ பக்தனின் படமும் இண்டர் நெட் மூலமாகவே நமக்குக் கிடைத்தது. கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. மேல் நாடுகளில் வெளியாகும் நல்ல தரமான ஆவிக்குரிய கிறிஸ்தவ பத்திரிக்கைகளின் செய்திகளைக் கூட நாம் சந்தா செலுத்தாமல் இலவசமாக பார்த்துப் படிக்கலாம். அதிலிருந்து அச்சுப் பதிப்பு எடுத்துக் கொள்ளலாம். நாம் அப்படிச் செய்வதற்காக அந்த தேவ மக்கள் நமக்கு வசதி செய்து கொடுத்திருக்கின்றனர்.
நமக்குக் கம்பியூட்டர் கிடைத்த கடந்த சுமார் 7 ஆண்டு காலங்களில் வெளியான தேவ எக்காளங்கள் சுமந்து வந்த பரிசுத்த பக்தர்களின் முழு நீள வாழ்க்கை வரலாறுகள் பல உண்டு. அதினால் ஆசீர்வாதம் பெற்ற தேவ மக்கள் அநேக ஆயிரங்களாவார்கள். கம்பியூட்டர் நமக்கு கிடைத்திராதபட்சத்தில் தேவ எக்காளம் இதுவரை அச்சிடப்பட்டு வெளி வந்திருக்கும் என்று நான் திட்டமாக நினைக்கவில்லை. எல்லா துதி, கனம், மகிமை நம் அன்பின் ஆண்டவர் ஒருவருக்கே உண்டாவதாக. அல்லேலூயா. |