கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீ உனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவாயானால் "பயங்கரங்களின் ராஜா" வாகிய சாத்தானுக்கு நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை. இயேசு கிறிஸ்து ஏன் "ராஜாதி ராஜா" என்பதைக் குறித்து நான் உனக்குச் சொல்ல விரும்புகின்றேன். நம்முடைய இரட்சகர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்று நம்முடைய நித்திய ஆறுதலுக்காக வெளிப்படுத்தின விசேஷத்தில் இரண்டு தடவைகள் எழுதப்பட்டிருக்கின்றது. "ஆட்டுக் குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்" (வெளி 17 : 14) "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப் பட்டிருந்தது" (வெளி 19 : 16)
மரண பயத்திலிருந்தும், மரணத்திற்குப் பின்னாலுள்ள பயங்கரங்களிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக அன்பின் ஆண்டவர் மானிடனாகி தனது சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். "ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவரானார், மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்துக்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்" (எபி 2 : 14 - 15)
இங்கிலாந்து தேசத்தின் மாபெரும் சுவிசேஷகரும், பாடலாசிரியருமான வில்லியம் காப்பர் என்பவர் "மரணத்தின் கூர் மழுக்கப்பட்டு அதின் ஆயுதவர்க்கங்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் உறையிடப்பட்டுவிட்டபடியால் மரணத்தை நான் காண்கையில் நடுநடுங்கப்போவதில்லை" என்று கூறினார். மற்றொரு பரிசுத்தவான் கூறுகையில் "கர்த்தராகிய இயேசு இரட்சகர் மரணத்தின் சாம்ராஜ்யத்துக்குள்ளேயே ஊடுருவிச் சென்று அவனது சொந்த மண்ணிலேயே அவனோடு போர் புரிந்து அவனுடைய கிரீடத்தை அவனது சிரசினின்று அடித்து நொறுக்கி, அவனது செங்கோலை முறித்தெறிந்து "மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நானே உன்னை நாசமாக்கியவன்" என்று கூறுகின்றார். ஆம், அந்தக் காரியத்தை இரட்சகர் உனக்காகவே செய்தார். ஆத்துமாவே, மரணத்தைக் கண்டு நீ இனி பயப்படக்கூடாது என்ற காரணத்திற்காக கர்த்தர் அதை உனக்காகவே செய்தார். "பயமானது வேதனையுள்ளது" (1 யோவான் 4 : 18) அந்த மரண பயத்தினின்று உன்னை மீட்பதற்காக இந்த உலகத்தில் வந்து உனக்காக அவர் மரித்தார். அவருடைய மாட்சிமையான நாமம் துதிக்கப்படுவதாக.
அருமை இரட்சகர் மரணத்தையும், அதின் பயங்கரங்களையும் தமது உயிர்த்தெழுந்த வல்லமையின் மூலமாக ஜெயித்துக் கொண்டார். மரணத்தின் இருண்ட சாம்ராஜ்யத்திலிருந்து அவர் ஜெயமெடுத்து வெளி வந்தார். மரணத்தின்மேல் அவர் பெற்ற ஜெயமானது உன்னுடைய சொந்த வெற்றியாகும். அதின் காரணமாக நீ "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (1 கொரி 15 : 57) என்று கூறலாம். இரட்சகரின் உயிர்த்தெழுதலானது மரணத்தையும் அதினுடைய பயங்கரங்கள் அனைத்தையும் விசுவாசிக்காக உரிந்து கொண்டுவிட்டது. தம்முடைய தாசனாம் யோவானுக்கு மரணத்தின் கூர் முறித்த ராஜாதி ராஜாவின் வார்த்தையைக் கேளுங்கள் "பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன், மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவரா யிருக்கிறேன்" (வெளி 1 : 17, 18) லண்டன் பட்டணத்தில் வாழ்ந்த பரிசுத்த பக்தன் பண்டிதர் எஃப்.பி.மையர் என்பவர் மரணத்திற்கேதுவான தனது சுகயீனம் ஒன்றுக்குப் பின்னர் இப்படியாகச் சொன்னார் "சமீபத்தில் நான் எனது சுகயீனத்தின் காரணமாக மரணத்தின் வாசல்கள் வரை சென்று வந்தேன். எனினும், ஒரு பரிசுத்த தேவ பிள்ளை அஞ்சக்கூடிய அளவிற்கு மரணம் ஒன்றுமில்லை. அந்த தேவப் பிள்ளைக்கு மரணம் ஒரு கட்டுக்கதையே (Myth) அல்லாமல் பிறிதொன்றுமில்லை" என்றார். ராஜாதி ராஜா மேற்கண்ட பரிசுத்தவானோடு இருந்த காரணத்தால் மரணம் அவருக்கு எந்த ஒரு பயத்தையும் கொடுக்க முடியாமற் போனதுடன், அவரது பார்வைக்கு அது ஒரு உண்மையற்ற புராணக்கதையாகவே ஆகிவிட்டது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய அடியார்களைப் பார்த்து "என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன், சரீரத்தைக் கொலை செய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்" (லூக்கா 12 : 4) என்று சொன்னார்.
தேவனுடைய சுவிசேஷத்தை மிகுந்த வாஞ்சையுடன் பிரசிங்கித்த காரணத்திற்காக ஸ்பெயின் தேசத்தில் ஒரு சுவிசேஷகர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியவராக இருந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தில் கம்மியூனிஸ்ட் கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த கம்மியூனிஸ்ட் கைதிகள் மிகவும் வெறுப்பும் கோபமுமடைந்து தங்களைச் சிறை வைத்தவர்களை சாபமிட்டு அவர்களிருந்த சிறைக்கூட சுவர்களிலே அசுத்தமும், அருவருப்புமான வார்த்தைகளை எழுதினார்கள். அங்கே சிறை வைக்கப்பட்டிருந்த நமது தேவ மனிதர் "சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம், ஆத்துமாவையும், சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று எழுதிவிட்டு அதற்குக் கீழாக "தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என்று எழுதினார். அவர் எழுதிய வார்த்தைகள் அந்த சிறைக்கூட அறையிலிருந்தோரின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தது. அந்த தேவ மனிதர் தன்னோடிருந்தவர்களில் ஒருவரை இரட்சகர் இயேசுவண்டை வழிநடத்திய ஆனந்த மகிழ்ச்சியைப் பெற்றார். எப்படியெனில், அவர் ஆண்டவருக்குள் வழிநடத்திய மனிதர் ஒரு பள்ளி ஆசிரியராவார். ஒரு நாள் அந்த மனந்திரும்பிய ஆசிரியர் நமது தேவ ஊழியரைப் பார்த்து "நான் இன்றைய தினம் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்படப் போகின்றேன். எனது பெயர் சுட்டுக் கொல்லப்படப் போகும் பெயர் பட்டியலில் உள்ளது. நீங்கள் சுவரில் எழுதின வார்த்தைகளைக் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். அவைகள் என்னை மிகுந்த மகிழ்ச்சியோடு என் மரணத்தைச் சந்திக்க வகைசெய்திருக்கின்றது. ஒருக்கால் நீங்கள் அந்த வரிகளை எழுதியிராதபட்சத்தில் நான் மிகுந்த அலறலோடும், அங்கலாய்ப்போடும், கொடும் வியாகுலத்தோடும் எனது மரணத்தைச் சந்திக்க வேண்டியதாக இருந்திருக்கும். ஆனால், இப்பொழுது நான் என் ஆண்டவரை மகிழ்ச்சியோடு சந்தித்து என்றும் அவரோடிருக்கப் போகின்றேன்" என்று சொன்னார். அவர் சொன்னபடியே மிகுந்த மகிழ்ச்சியோடு எந்த ஒரு பயமுமில்லாமல் அந்த நாளில் தனது மரணத்தை அவர் சந்தித்தார்.
ஒரு கப்பலானது தனது நங்கூரத்தைத் தளர்த்திக் கொண்டு பாய்விரித்து அடுத்த துறைமுகத்தை நாடிச் செல்ல அனுகூலமாக அமைக்கப்பட்டிருக்கும் கடலிலுள்ள ஒரு கப்பல் மேடையைப் போலக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரணத்தை தம்முடைய பரிசுத்த அடியாருக்கும், இரட்சிக்கப்பட்ட பாவிக்கும் ஒரு அழகான மேடையாக அமைத்துக் கொடுத்திருக்கின்றார். அந்த மகா பெரிய அப்போஸ்தலனான பரிசுத்த பவுல் அடிகளார் மரணத்தைக் குறித்துப் பேசுகையில் நங்கூரத்தைப் பெயர்த்துக் கொண்டு பாய்விரித்துச் செல்லுவதையே குறிப்பிட்டார். "நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்தது" (2 தீமோ 4 : 6) என்ற அவருடைய வார்த்தைகள் அப்பட்டமாக அந்தக் காரியத்தையேதான் வெளிப்படுத்துவதாக உள்ளது. அவருடைய வார்த்தையின் பொருள் "நங்கூரத்தைப் பெயர்த்தல்" "கப்பலை மேடையோடு கட்டியிருக்கும் கயிறுகளை தளர்த்துதல்" "அடுத்த துறைமுகம் செல்லக் கப்பலுக்கு வழி கோலுவது" என்பதாகும். அப்போஸ்தலனுக்கு அவர் நாடிச் செல்லும் துறைமுகம் மோட்சமாகும். அவருக்கு மட்டுமல்ல, இரட்சிக்கப்பட்ட எந்த ஒரு பாவிக்கும் அந்த ஆத்துமா பயணிக்கும் துறைமுகம் மோட்சமேதான். "தேகத்தைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவுடனே கூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்" (பிலி 1 : 23) என்ற வசனத்தில் அப்போஸ்தலன் தனது நங்கூரங்களைத் தளர்த்திக் கொண்டு தன்னுடைய இரட்சகர் இயேசுவினிடத்திற்கும், மோட்சத்திற்கும் பிரயாணப்பட தனக்குள்ள மட்டற்ற ஆவலை வெளிப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். இந்தப் பிரசங்கத்தை வாசிக்கும் நண்பரே, ராஜாதி ராஜாவாகிய கிறிஸ்து இரட்சகர் தம்மில் விசுவாசம் வைத்துள்ள மக்களுக்காக தம்முடைய சிலுவை மரணத்தின் மூலமாக நிறைவேற்றி முடித்துள்ள இரட்சண்யத்தை என்னவென்று சொல்லுவது!
மீட்கப்பட்ட பாவிக்கு மரணம் என்பது ஒரு யாத்திரையாகும். பாவ அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து அந்த எபிரேயர்கள் எப்படி பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்திற்கு யாத்திரை போனார்களே அதே யாத்திரைதான் ஒரு மெய்க்கிறிஸ்தவனின் மரணமாகும். அப்போஸ்தலனாகிய பேதுரு அந்த உண்மையை உங்களுக்கு அறிவித்து மரணத்துக்கு அவர் அந்தப் பெயரைத்தான் கொடுக்கின்றார். மரணமாகிய பயங்கரங்களின் ராஜாவை அவர் சந்திக்க நெருங்குகையில் தான் ராஜாதி ராஜாவாம் இரட்சகர் இயேசுவில் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கின்றார். "நான் என் கூடாரத்தை விட்டுப் போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்திருக்கிறேன்" என்றார் அவர்.
சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்திலுள்ள ஜாண் பிராங்ளின் என்ற தேவ பக்தியுள்ள ஆராய்ச்சியாளரும் அவரது சக தோழர்களும் தொலை தூரமான துருவப் பிராந்தியத்தில் செத்து மடிந்து போனார்கள். அவர்களைத் தேடிச்சென்ற ஒரு ஆராய்ச்சிக் குழு அவர்களைக் குறித்த சில நினைவுப் பொருட்களைக் கொண்டு வந்தது. அவைகளில் ஜாண் பிராங்ளின் என்பவர் வைத்திருந்த ஒரு அருமையான புத்தகத்தின் உட்பகுதியின் முதல் தாளாகும். அந்த புத்தகம் என் வசமும் உள்ளது. அந்த தாளில் ஒரு சம்பாஷணை இடம் பெற்றுள்ளது. அது இதுவேதான்:-
"நீங்கள் மரணத்தைச் சந்திக்க பயப்படுகின்றீர்களா?"
"இல்லையே"
"மரணத்தின் பின்னர் சம்பவிக்கக் கூடிய நிச்சயமற்ற காரியங்களைக் குறித்த எண்ணம் உங்களுக்கு பயத்தை உண்டுபண்ணவில்லையா?"
"நீ பயப்படாதே" என்று தேவன் என்னிடம் சொல்லியிருக்கின்றார். அதினால் நான் எதற்கும் பயப்படமாட்டேன்.
ஜாண் பிராங்ளின் என்ற அந்த ஆராய்ச்சியாளர் மரணமாகிய "பயங்கர ராஜாவை" தைரியமாக சந்தித்தார், காரணம் அவர் ஆண்டவராகிய இயேசுவை தனது சொந்த இரட்சகராக தனது வாழ்வில் ஏற்றுக் கொண்டிருந்தார். அவரிடமிருந்த அந்தப் புத்தகத்தின் முதல் தாள் மற்றும் அவரது சில பொருட்களும் இப்பொழுது கிரீன்விச் என்ற பட்டணத்திலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.
கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பாக சீனா தேசத்தில் ஜாண் ஸ்டாம் மற்றும் பெற்றி சாம் என்ற இரண்டு இளம் மிஷனரிகள் இரத்தசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். சாத்தானுடைய கையாட்களால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டோ அல்லது வாளால் வெட்டியோ அல்லது பிச்சுவா கத்தியால் குத்தியோ கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர். எந்த விதமாக அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அதில் ஜாண் ஸ்டாம் என்பவர் தனக்கு வரும் மரணம் எந்தவிதத்தில் வந்தாலும் தான் அஞ்சப்போவதில்லை என்று தனது வீட்டினருக்கு கடிதம் எழுதி அதில் ஒரு பாடலையும் இணைத்திருந்தார். அந்தப் பாடலில் அவரது உள்ளத்தின் உணர்வுகள் அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தது. மனந்திரும்பாத ஆத்துமாவே, கர்த்தரை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு மனிதன் "பயங்கர ராஜாவை" சந்திக்க அஞ்சவேமாட்டான். காரணம் அவன் "ராஜாதி ராஜாவை" தனது உள்ளத்தில் வைத்திருக்கின்றான். ஜாண் ஸ்டாம் எழுதி அனுப்பிய பாடலை கவனி:-
பயப்படவேண்டும், எதைக்கண்டு பயம்?
இரட்சா பெருமானின் பொன் முகம் நோக்க பயமா?
பாடு நோவிலிருந்து பூரண கிருபையைக் காண பயமா?
கல்வாரி மேட்டிலிருந்து மகிமை பிரகாசிக்கின்றது,
அதைக் காணவா பயம்?
பயப்பட வேண்டும், எதைக் கண்டு பயம்?
ஒரு ஒளி வீச்சு, ஒரு இடி முழக்கம், ஒரு பிளக்கப்பட்ட விலா?
மாமகிமை நிரம்பிய பரலோகக் காட்சி,
பயப்பட வேண்டும் அந்த விண்ணின் வாழ்வை காணவா பயம் வேண்டும்?
நம் அருமை இரட்சகர், இரட்சிக்கப்பட்ட விசுவாசிக்காக சரீரத்தில் நேரிடும் மரணத்தின் பெயரையே மாற்றிவிட்டார். ஆண்டவரும், புதிய ஏற்பாட்டில் அவரது எழுத்தர்களும் மரணத்தை "தூக்கம்" என்றே அழைக்கின்றனர். மரணம் என்ற அந்த இரகசியத்தை தேவனற்ற அஞ்ஞானிகள் ஒன்றுமில்லாத சூன்யமாகப் பார்க்கும்போது இரட்கர் இயேசு அதை ஒரு தொடர்ச்சியான பேரின்ப வாழ்வாகவும், நித்திய இளைப்பாறுதலாகவும் காண்கின்றார். மரணம் என்ற நம்பிக்கையற்ற முடிவானவார்த்தையை உயிர்த்தெழுதல் என்ற மாட்சிமையான விடிவெள்ளி நட்சத்திரம் அதினுடைய அடிமரத்தின் ஆழமான வேர்ப்பகுதிக்குள் பிரவேசித்து மரணத்தை கிருபை நிறைந்ததாகவும், ஆனந்த நம்பிக்கைiயாகவும் மாற்றிவிட்டது. அஞ்ஞானிகளின் புதை குழிகளில் அவர்கள் அதற்கு இட்ட பெயரின்படி அங்கே நம்பிக்கையோ, இளைப்பாறுதலோ கிடையாது. அஞ்ஞானிகளுக்கு அவர்களின் புதை குழி என்பது ஒரு இடுகாடு அல்லது ஒரு ஞாபகச் சின்னம் அல்லது விரும்பத்தகாத ஒரு மறைவான இடம் அல்லது ஏதோ ஒன்று போனதற்காக அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நினைவிடம் அல்லது ஒரு கூட்டம் புறாக்கள் தனித்தனியே மண்சட்டிகளில் வாழ்கின்ற புறாக்கூடாக இருக்கின்றது. ஆனால் மனந்திரும்பிய விசுவாசிக்கு மரணம் என்பது ஒரு நித்திரை, அது ஒரு நித்திய இளைப்பாறுதல், அது ஒரு அஸ்தமனமில்லாத புதிய எருசலேமின் ஆனந்த வாழ்வு.
வாசிக்கும் ஆத்துமாவே, ஆண்டவராகிய இயேசு இரட்சகரை நீ உனது சொந்த தகப்பனாக வும் ராஜாதி ராஜாவாகவும் ஏற்று அவருடைய பிள்ளையாக நீ இருக்கும் பட்சத்தில் மாம்ச மரணமாகிய "பயங்கரங்களின் ராஜாவை" நீ சந்திப்பதற்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. பூர்வ நாட்களில் தமது தாசன் யோபுவுக்கு கிருபையுள்ளவராக இருந்தது போல உனக்கும் கிருபையுள்ளவராக இருந்து "அவர் அவனுக்கு இரங்கி, அவன் படு குழியில் இறங்காதபடிக்கு நீர் அவனை இரட்சியும், மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்" (யோபு 33 : 24) என்ற கர்த்தருடைய வார்த்தை சொல்லுவது போல அந்த மீட்கும் பொருள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே.
நான் எனது தேவச் செய்தியை நான் உங்களுக்கு முன்பாக வைத்த எனது இரண்டு பிரசங்க தலையங்க குறிப்புகளை அதாவது "பயங்கர ராஜா" (யோபு 18 : 14) "ராஜாதி ராஜா" (வெளி 19 : 16) என்பவைகளை உங்களுக்கு பூரணமாக விளக்கிக் காண்பிக்கும் ஒரு உண்மைச் சம்பவத்துடன் முடிக்க விரும்புகின்றேன். அந்தச் சம்பவத்தை அமெரிக்க தேசத்தின் மாபெரும் சுவிசஷகர் டி.எல். மூடி என்பவர் அநேக ஆண்டுகாலத்திற்கு முன்னர் லண்டன் பட்டணத்தில் நடந்த தனது சுவிசேஷக்கூட்டம் ஒன்றில் கூறினார். அந்தச் சம்பவம் இதுவேதான்:-
பிரெஞ்சு தேசத்தில் ஒரு கனவான் இருந்தார். அவர் இராக்காலங்களில் தூங்க இயலாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். மனிதனின் வியாதிகளின் மூலக்கூறுகளை கண்டறிந்து அதினைக் கூறும் ஃபோப்ஸ் வின்ஸ்லோ என்ற பிரபலமான மருத்துவ வல்லுனர் லண்டன் பட்டணத்தில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரிடத்தில் வைத்திய சிகிட்சை பெறுவதற்காக பிரான்ஸ் தேசத்தின் சக்கரவர்த்தி 3 ஆம் நெப்போலியனிடத்தில் அறிமுக கடிதங்களை வாங்கிக் கொண்டு வந்து அவற்றை மருத்துவர் ஃபோப்ஸ் வின்ஸ்லோ என்பவரிடத்தில் கொடுத்தார். அந்தக் கடிதங்களை வாங்கி வாசித்துவிட்டு அந்த புகழ்பெற்ற மருத்துவர் தன்னண்டை வந்த அந்த மனிதரிடம் "உங்களுக்குள்ள நோய் என்ன ?" என்று கேட்டார்.
அதற்கு அந்த பிரெஞ்சு கனவான் "என்னால் இராக்காலங்களில் தூங்கவே முடிவதில்லை. கடந்த 2 வருட காலமாக நான் எனது கண்களுக்கு ஒரு துளிதானும் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இதற்கு ஒரு பரிகாரம் நான் கண்டுபிடிக்காதபட்சத்தில் நான் ஒரு பைத்தியக்காரனாகிவிடுவேன் என்றார்.
அதைக்கேட்ட அந்த மருத்துவர் அந்த மனிதரை தனியே அழைத்துச் சென்று அவரிடம் சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.
"உங்களால் ஏன் தூங்க முடிவதில்லை?"
"அதை நான் உங்களிடம் சொல்ல முடியாத நிலையிலிருக்கின்றேன்" என்று அந்த மனிதர் கூறினார்.
"நீங்கள் உங்கள் செல்வத்தை இழந்துவிட்டீர்களா?" என்று டாக்டர் கேட்டார்.
"இல்லை"
"உங்களுடைய ஆப்த நண்பர்கள் உங்களைக் கைவிட்டுவிட்டனரா?"
"இல்லை"
"உங்களுடைய மதிப்பையும், பேர் புகழையும் இழந்துவிட்டீர்களா?"
"இல்லை"
"அப்படியானால் ஏன் உங்களால் தூங்க முடிவதில்லை?" என்றார் அந்த மருத்துவ நிபுணன்.
அந்த கனவான் எதையும் சொல்ல முடியால் அமைதியாக இருந்தார். ஃபோப்ஸ் வின்ஸ்லோ அவரிடத்தில் நீங்கள் எனக்கு உங்கள் காரியத்தை சொல்லாமல் அமைதியாக இருந்தால் நான் உங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்ய இயலாது என்று கூறிவிட்டார்.
அதற்கப்பால் அந்த பிரெஞ்சு கனவான் இறுதியாக அந்த மருத்துவ வல்லுனரிடம் "நித்தியம், அதை நான் எங்கே செலவிடுவேன்?" என்ற கேள்வி இரவுக்கு இரவும், இரா முழுவதும் என் காதுகளில் தொனித்த வண்ணமாக இருக்கின்றது. அதுவே என்னைத் தூங்கவொட்டாமல் கலங்கப்பண்ணிக் கொண்டிருக்கின்றது . என்னால் தூங்க முடிவதில்லை என்று விடை பகர்ந்தார்.
அதைக்கேட்ட மருத்துவர் வின்ஸ்லோ "நீங்கள் தவறான மருத்துவரிடம் உங்கள் நோய்க்காக வந்துவிட்டீர்கள். நான் உங்களுக்கு எதுவுமே செய்ய இயலாது" என்று கூறினார். அதைக் கேட்ட அந்த கனவான் "என்ன, நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியாதா?" என்று கேட்டார்.
"முடியாதுதான், இருப்பினும் உங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு வைத்தியரை நான் உங்களுக்கு காண்பிக்க முடியும்" என்று சொல்லிவிட்டு தனது வேதாகமத்தை எடுத்து வந்து "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்" (ஏசாயா 53 : 5, 6) என்ற தேவ வார்த்தைகளை அவருக்கு வாசித்து காண்பித்தார். இப்பொழுது டாக்டர் வின்ஸ்லோ அந்த மனிதரின் ஆத்துமாவின் வைத்தியரானார்.
ஆரம்பத்தில் அந்த தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டதும் அந்த பிரஞ்சு கனவான் ஆண்டவர் இயேசுவையும், வேதாகமத்தையும் பரிகாசம் பண்ணினார். ஆனால் மருத்துவர் ஃபோப்ஸ் வின்ஸ்லோ தனது நிலையில் உறுதியாக இருந்து இரட்சகர் இயேசு ஒருவரே அவரது அத்தியந்த தேவை என்பதை அந்த மனிதருக்கு உணர்த்திக் காண்பித்து ஆண்டவரைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வைத்து மிகுந்த தேவ சமாதானத்தோடு அவரை அனுப்பி வைத்தார். அதற்கப்பால் அந்த கனவான் மரணமாகிய "பயங்கரங்களின் ராஜா" வுக்குப் பயப்படாமல் "ராஜாதி ராஜா" இயேசு கிறிஸ்து ஒருவருக்கே பயப்படலானார். இப்பொழுது அவர் ஒவ்வொரு இரவும் மிகுந்த தேவ சமாதானத்தோடு ஒரு குழந்தையைப்போல தூங்கலானார். "அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்" (2 தீமோ 1 : 10)
(Dr.ARTHUR PETRIE) |