பிரயாணிகள் மோட்சம் சேருதல்
வாசலண்டை சேரவே அதின் மேலே: “ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்கள் ஆகிறதற்கும் வாசல்கள் வழியாய் நகரத்துக்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்கிற வாசகம் பொன் எழுத்தில் எழுதப்பட்டிருக்கக் கண்டார்கள். (வெளி 22 : 14)
பின்பு நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால் அந்த ஒளிமயரூபிகள் பிரயாணிகள் இருவரையும் நோக்கி: நீங்கள் வாசல் ஓரமாய் வந்து உள்ளே இருக்கிறவர்களைக் கூப்பிடுங்கள் என்றார்கள். அப்படியே கூப்பிட்டார்கள். உடனே ஏனோக்கு, மோசே, எலியா முதலானவர்கள் மேலேயிருந்து எட்டிப் பார்த்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு இந்தப் பிரயாணிகள், இந்த நகரத்தின் எஜமான் மேலுள்ள அன்பால் ஏவப்பட்டு நாசபுரியில் இருந்து வந்திருக்கின் றார்கள் என்று சொல்லப்பட்டது. அதோடு பிரயாணிகள் இருவரும் தங்கள் யாத்திரையின் ஆரம்பித்தில் அவரவர் பெற்றுக்கொண்ட நற்சாட்சி பத்திரங்களையும் 1 அவர்களுக்குக் கொடுத்தார்கள். அந்தப் பத்திரங்கள் ராஜ சமூகத்தில் கொண்டு போகப்பட்டன.
அரசன் அதை வாசித்துப் பார்த்து: அந்த மனிதர் எங்கே? என்று கேட்டார். அதோ வாசலுக்கு வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. உடனே அவர்: “சத்தியத்தை கைக்கொண்டு வருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்” (ஏசாயா 26 : 2) என்று திருவாய் மலர்ந்தருளினார்.
அப்பொழுது நான் என் சொப்பனத்தில் அவர்கள் இருவரும் வாசலுக்குள் பிரவேசித்ததைக் கண்டேன். இதோ அவர்கள் பிரவேசிக்கும்போதே மறுரூபமடைந்து பொன்மயமான அங்கியால் உடுத்தப்பட்டார்கள். சுரமண்டங்களைப் பிடித்தவர்களும் கிரீடம் தரித்தவர்களுமான எண்ணிறந்த பேர் அவர்களைச் சந்திக்க வந்து அவர்கள் தங்களோடு கூடி ஸ்துதிக்கும்படி சுரமண்டலங்களைக் கொடுத்து அவர்களைக் கனப்படுத்தும்படியாக கிரீடமும் சூட்டி னார்கள். அந்த நிமிஷமே பரமண்டலத்து மணிகள் எல்லாம் தங்கள் நாதங்களை மறுபடியும் அடித்து முழக்கவும் “உங்கள் எஜமானுடைய சந்தோசத்துக்குள் பிரவேசியுங்கள்” (மத்தேயு 25 : 23) என்கிற சத்தம் தொனிக்கவும் என் சொப்பனத்திலே கேட்டேன். மேலும் அந்தப் பிரயாணிகள் இருவரும் “சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவருக்கும், ஆட்டுக் குட்டியான வருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக” (வெளி 5 : 13, 14) என்று சொல்லி உரத்த சத்தமாய் பாடுகிறதையும் நான் கேட்டேன்.
அவர்கள் பிரவேசிக்கும்படியாக வாசல்கள் திறக்கப்பட்ட சமயத்தில் அவர்களுக்குப் பின்னாலே எட்டிப் பார்த்தேன். இதோ அந்த நகரம் ஜோதிமயமாய் விளங்கிற்று. அதின் வீதிகள் முதலாய் பொன் தளம் போடப்பட்டதாய் இருந்தன. அதின் வழியாய்ச்சிரசில் கிரீடம் அணிந்தவர்களாயும், சங்கீதம் பாடும்படியாக கையில் குருத்தோலைகளையும், பொன் சுரமண்டலங்களையும் பிடித்தவர்களாயும் அங்கும் இங்கும் உலாவித்திரிகிற ஆயிரமாயிரம் பேரையும் நான் கண்டேன்.
செட்டைகளுள்ள பேர்கள் பலரையும் நான் அங்கே கண்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர் முகமாய் நின்று ஓய்வில்லாமல் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று சொல்லிப் பாடினார்கள். இதின்பின் அந்த வாசல் அடைக்கப் பட்டது. அந்த மகத்துவங்களைக் கண்டு நானும் அங்கே போயி ருந்தேன் இல்லையே என்று அதிக ஆவல் கொண்டேன்.
1. நற்சாட்சி பத்திரங்கள் என்பது, இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தையும் அதோடு பின்தொடருகிற பரிசுத்தமாக்கப்படுதலையும் குறிக்கிறது.