திட்டிவாசல் கோட்டை சேருதல்
கதவு திறக்கப்பட்ட உடனே கிறிஸ்தியான் மெதுவாக காலெடுத்து வைத்து உள்ளே போகப் போனான்: ஆனால் அக்கோட்டைக்குள் இருந்த பட்சதாபன் அவன் கையைப் பிடித்து சட்டென்று உள்ளே இழுத்துக் கொண்டார். இப்படி இழுத்த காரணம் என்ன ஐயா என்று கேட்டான். அதற்கு பட்சாதாபன் சொல்லுகிறார்: அப்பா இந்த கோட்டைக்குச் சற்று அப்பால், வேறொரு பலத்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது; அதற்குப் பெயல்செபூல் என்கிற பெயரை யுடைய ஒருவன் அதிபதியாய் இருக்கிறான். அவனும், அவனுடைய காரியக்காரரும் இவ்வாசலைத் தேடி வரும் பிரயாணிகள் உட் பிரவேசிக்கிறதற்குள்ளாக கொன்றுவிட்டால் நல்லதென்று எண்ணி அம்புகளைப் பிரயோகிப்பார்கள்1 ஆனதனாலேதான் நான் அவ்வளவு ஆத்திரத்தோடு உன்னை இழுத்துக்கொண்டேன் என்று சொன்னார். அதைக் கேட்ட கிறிஸ்தியான் அப்படியா செய்தி, எனக்குச் சந்தோசம் பாதி, சஞ்சலம் பாதியாய் இருக்கிறது என்றான். பட்சதாபன் அவனைப் பார்த்து: இவ்விடம் வர உனக்கு வழிகாட்டினது யார் என்று கேட்டார்.
கிறி: சுவிசேஷகர் என்கிற பேருடைய ஒரு மகாத்துமா இந்த இடத்தைக் காண்பித்து, இந்தக் கதவைத் தட்டச் சொன்னார். உம்மைக் கேட்டால் நான் இனிச் செய்ய வேண்டியது இன்னதென்று சொல்லுவீர் என்றும் அவரே சொன்னார்.
பட்ச: உனக்குமுன் விஸ்தாரமான ஒரு வாசல் திறக்கப் பட்டிருக்கிறது, அதைப் பூட்டிவிட ஒருவராலும் கூடாது, ஆகையால் கலங்காதே அப்பா!
கிறி: என் துன்பமெல்லாம் இன்பமாய் மாறும் காலம் துவங்கிற்று என்றெண்ணுகின்றேன்.
பட்ச: நீ ஒண்டியாய் வந்ததெப்படி?
கிறி: என் அழிவின் நிலைமையை நான் உணர்ந்து கொண்டது போல் என்னுடைய ஊராரில் ஒருவரும் உணரவில்லை, ஆதலால் நான் மாத்திரம் பிரயாணப்பட்டேன்.
பட்ச: நீ புறப்பட்ட செய்தி அவர்களில் யாருக்காவது தெரியுமா?
கிறி: ஆம், தெரியும்: என் மனைவியும், மக்களும் நான் பயணப் பட்டதைக் கண்டு, திரும்பிவிடும்படி கூப்பிட்டார்கள்: வேறு சில அயலாரும் அதிகமாய் வருந்தி அழைத்தார்கள், ஆனால் நான் என் காதுக்குள் விரலை வைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
பட்ச: யாராவது உன்னைப் பின்தொடர்ந்து வந்து நீ திரும்பி விடும்படி பலவந்தம் பண்ணவில்லையா?
கிறி: அப்படியும் நடந்தது; என் ஊரிலுள்ள பிடிவாதன், இணங்குநெஞ்சன் என்ற பேருடைய இரண்டு வாலிபர் பின்னாலே ஓடி வந்து திரும்பும்படி தங்களாலான பிரயத்தனம் எல்லாம் செய்தார்கள். நான் அதற்கு இணங்காததைக் கண்டபோது பிடிவாதன் கண்டபடி திட்டிக்கொண்டு திரும்பிப் போனான்; இணங்குநெஞ்சன் மாத்திரம் என்னோடு பின்னும் கொஞ்ச தூரம் வந்தான்.
பட்ச: அவன் ஏன் உன் கூட வரவில்லை?
கிறி: நாங்கள் இருவரும் ஒன்றாய்க்கூடி நம்பிக்கையிழவு இருக்கிறதே, அதுமட்டும் வந்தோம். வந்த நாங்கள் தொப்பென்று அந்த உளையில் விழுந்துவிட்டோம். அதினாலே, இணங்குநெஞ்சன் மனமுறி வடைந்து அப்புறம் ஒரு அடி தூரம் வரமாட்டேன்; அந்த நேர்த்தியான தேசத்தை நீயே போய்ச் சுதந்தரித்துக் கொள்; எனக்கு வேண்டாம் அப்பா என்று சொல்லிவிட்டு அங்கிருந்தே ஊரை நோக்கி ஓட்டம் எடுத்தான்.
அவன் தன் வழியாய்ப் போனான், நான் என் வழியாய் நடந்தேன். அவன் பிடிவாதனைத் தொடர்ந்தான், நான் திட்டிவாசலை நோக்கி வந்தேன்.
பட்ச: ஐயோ இணங்கு நெஞ்சனுக்கு மேலோகத்து மகிமைகள் அவ்வளவு சொற்பமாய் காணப்பட்டதாக்கும், அதைப் பெற்றுக் கொள்ளும்படி அற்ப சொற்ப துன்பங்களை சகிக்கப் பிரியமில்லை யாக்கும் என்று பட்சதாபன் சொன்னார்.
கிறி: நான் இணங்குநெஞ்சன் காரியத்தை உள்ளபடிசொன்னேனே; என் காரியத்தை உள்ளபடி சொல்ல வேண்டுமானால் அவனிலும் நான் யோக்கியன் அல்ல என்றே வெளியாகும்; அவன் ஊரை நாடியல்லோ ஓடினான்; நானோ மாமிசத்துக்கேதுவான வார்த்தைகளைப் பேசின லோக ஞானி என்கிற ஒரு பாதகன் பேச்சைக் கேட்டு நேர் வழியை விட்டுப் பிரிந்து, மரண பாதை வழியாய்ப் போனேன்.
பட்ச: ஆகா, உன்னையும் கெடுக்கப்பார்த்தானா? நியாயப் பிரமாணிக்கனண்டை போ, பாரம் இறங்கிப் போம் என்று சொன் னானோ? அவர்கள் இருவரும் பலத்த மோசக்காரர், அவன் பேச்சைக் கேட்டாயோ?
கிறி: ஆம், மனப்பூர்வமாய்க் கேட்டு நியாயபிரமாணிக்கன் வீடு சேரும்படி வெகு தூரம் நடந்து போனேன்; அவ்வீட்டோரத்தில் இருக்கிற மலையடிவாரத்தில் போன போது அது என் மேல் விழுகிறாப் போல் இருந்ததால் பயந்து அக்கம் பக்கம் விலகாமல் அதிலேயே நின்று விட்டேன்.
பட்ச: அம்மலை அநேகம் பேரைக் கொன்றதுண்டு; இன்னும் அது அநேகரைக் கொல்லும்; நீ அதினால் நசுக்கப்பட்டுப் போகாமல் தப்பிப் பிழைத்தது பெரிய காரியம்.
கிறி: நான் அந்த மலைக்குள் இருக்கையில் எப்படி இருந்தேனோ நிச்சயமாய் எனக்கே தெரியவில்லை. நல்ல வேளையில் சுவிசேஷகன் வந்தார்; அவர் வராவிட்டால் என் பாடு நாசம்தான். அவர் வந்தது தேவனுடைய பெரிய இரக்கம் என்று உணருகிறேன். உள்ளபடி அந்த மலையினால் நசுக்கப்பட்டு மரணம் அடைய வேண்டிய இந்தப் பெரும் பாவி, இங்கே உயிர் தப்பி வந்து என் ஆண்டவனோடு இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு சிலாக்கியத்தை எனக்கு கிடைக்கப் பண்ணின தேவ தயவை நான் என்ன சொல்ல!
பட்ச: இவ்விடம் வருகிறவர்கள் முந்தின காலங்களில் எவ்வளவு பஞ்சமாபாதகராய் இருந்தாலும் சரி, அதையிட்டு நாங்கள் தடை செய்கிறதில்லை.
எந்த முகாந்திரத்தையிட்டானாலும் அவர்கள் தள்ளிவிடப் படமாட்டார்கள். (யோவான் 6 : 37) ஆதலால் நல்ல கிறிஸ்தியானே, சற்று தூரம் என்னோடுகூட வா! நீ இனி நடக்க வேண்டிய வழியை நான் உனக்குப் போதிப்பேன். முன்னே எட்டிப்பார்! இந்த இடுக்கமான வழி உனக்கு தெரிகிறதா?2 உன் வழி அதுதான். அது முற்பிதாக்கள், தீர்க்கத்தரிசிகள், இயேசு கிறிஸ்து, பரிசுத்த அப்போஸ்தலர் முதலியவர்கள் நடந்து போனதால் படிந்த பாதையாய் இருக்கிறது. அது நூலைப்போல நேரானது; நீ நடந்துபோக வேண்டிய வழி அதுதான்.
கிறி: புதுப் பிரயாணிகள் எவனாவது வழி தப்பிப் போகும்படியான பக்க வழிகளாவது, குறுக்குவழிகளாவது அதிலிருந்து பிரியுமோ?
பட்ச: அப்படிப்பட்ட பல சுவர்கள் வலப்பக்கமும், இடப் பக்கமும் இருக்கும், ஆனால் அவை ஒவ்வொன்றும் கோணலும், விசாலமுமாயிருக்கும். உன் வழியை நீ லேசாய் கண்டு கொள்ளலாம்; அது பக்கவழிகளிலும் குறுக்கு வழிகளிலும் இடுக்கமும் நெருக்கமாய் இருக்கும் என்றார். (மத்தேயு 7 : 14)
பின்பு நான் என் சொப்பனத்திலே கண்டதாவது, கிறிஸ்தியான் அவரை நோக்கி: நீர் என் முதுகின் மேல் இருக்கும் சுமையிலிருந்து என்னை விடுதலையாக்க மாட்டீரா? என்று கேட்டான். ஏனெனில் இதுவரையும் அவன் தன் சுமையிலிருந்து விடுதலையாகவும் இல்லை, அவன்தானே அதை இறக்கிப்போட்டுவிட சக்தி இருந்ததும் இல்லை.
அதற்கு அவர்: அப்பா உன் பாரச் சுமையைப்பற்றியா கவலைப் படுகிறாய்? உன் சுமை ஓரிடத்தில் போன உடனே தானாய் விழுந்து போம். அந்த இடத்திற்குப் போகும் வரையும் நீ பொறுமையோடு அதை சுமந்து கொண்டு திரிய வேண்டியதுதான் என்று சொன்னார்.
அப்புறம் கிறிஸ்தியான் தன் அரையின் கச்சைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டு பயணம் புறப்பட ஆயத்தப்பட்டான்.
அப்பொழுது அவர்: கிறிஸ்தியானே, நீ புறப்படுகிறாயே, கொஞ்ச தூரத்தில் நீ முதலாவது வியாக்கினி என்று பேர் விளங்கிய ஒரு முனிவர் வீட்டில் சேருவாய்;3 அங்கே போன உடனே வாசலைத் தட்டு,4 அவர் உனக்கு அநேக மகத்துவமானவைகளைக் காட்டுவார் என்று சொல்லி, கைகுலுக்கி, போய் வா அப்பா, போய் வா, தேவன் உன் பயணத்தை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லி அனுப்பினார்.
1. பெயல்செபூலின் அம்புகள் என்பது, சாத்தான் பொல்லாத நினைவுகளை மனுஷருடைய உள்ளத்தில் எழுப்பிவிட்டு, அவர்களைக் கிறிஸ்துவினிடம் வரவிடாமல் அதைரியப்படுத்தித் தடுப்பதைக் குறிக்கிறது.
2. இடுக்கமான வழி: இது பரிசுத்தமான ஜீவனத்தைக் குறிக்கிறது. பாவ வழி விரிவானதும், கோணலுமாய் இருக்கிறது. அதின் வழியாய் நடக்க மனுஷர் பெரும்பாலும் விரும்புகிறார்கள்.
3. வியாக்கியானி என்பது, சத்தியவேதத்தின் மூலமாய் பரிசுத்த ஆவியானவர் பாவிக்கு உணர்த்தும் போதனைகளுக்கும், தேவ ஊழியக்காரருக்கும், ஜெபம், தியானம், ஞானாப்பியாசங்களுக்கு குறிப்பாய் இருக்கிறது. நமக்குப் போதிக்கும்படியாக சத்திய ஆவியானவரை அனுப்புவேன் என்று இயேசு தமது சீஷருக்கு வாக்குத்தத்தம் செய்தார். யேவான் 16 : 13, 14.
4. கேட்கிறதினால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவார் (லூக்கா 11 : 13) திரும்பத் திரும்பத் தட்டுதல் என்பது கனிவோடு ஜெபிப்பதைக் குறிக்கிறது.