வன சம்பாஷணை
அப்புறம் நான் என் சொப்பனத்தில் பிடிவாதன் திரும்பிய பின்பு, கிறிஸ்தியானும், இணங்குநெஞ்சனும் ஏகமனமாய் வழி நடந்து அந்தப் பெரும் வனத்தைக் கடக்கையில் சம்பாஷித்துக் கொண்டு போகிறதையும் கண்டேன். அவர்கள் பண்ணின சம்பாஷணையாவது:-
கிறி:- தம்பி இணங்கரே சுகமா? என்னோடுகூட நீர் கூடிக் கொண்டதற்காக நான் சந்தோசப்படுகிறேன். பிடிவாதர் இருக்கிறாரே, அவருக்கு வரப்போகிற அழிவின் பயங்கரங்கள் சுத்தமாய்த் தெரிய வில்லை. சரியாய்த் தெரியுமானால் அவர் நம்மோடு வரமாட்டேன் என்று திரும்பிச் சென்றிருக்கமாட்டார் என்றான்.
இணங்கு:- அது மெய், அது நிஜம், அவருக்கு ஒன்றைக் குறித்தும் உணர்ச்சி இல்லை. கிறிஸ்தியானே வாரும், எட்டி நடவும் என்று சொல்லிவிட்டு: ஐயா, நாம் நாடிப்போகும் இடத்து வாழ்வுகளை எல்லாம் எனக்கு விவரமாய்ச் சொல்லி, அதைப் பெற்றுக் கொள்ளும் வகையையும் காட்டும்; இங்கே நம்மிருவரைத் தவிர வேறொருவரும் இல்லையே, சும்மா சொல்லும், ஒன்றையும் மறைத்து வையாதேயும் என்று இணங்கு நெஞ்சன் கேட்டான்.
கிறி:- நான் என் மனதில் உணருகிற மகத்துவங்களை நாவால் விவரிக்கக் கூடவில்லையே, நான் என்ன செய்வேன்; ஆனாலும் நீ அவைகளை அறிய விரும்புகிறபடியால் அதைப் பற்றி இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதை வாசிக்கிறேன் கேள்.
இணங்கு:- உம்முடைய புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற தெல்லாம் உண்மை என்று நம்புகிறீரா?
கிறி:- நம்பச் சந்தேகம் உண்டோ? அவை அனைத்தும் (தீத்து 1 : 3) பொய்யுரையாத தேவனால் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன அல்லவா?
இணங்கு:- அப்படியா? சந்தோஷம்தான்; அந்த வாழ்வுகளைச் சொல்லும் ஐயா!
கிறி:- நாம் குடியேறும்படியாக முடிவில்லாத ஒரு ராஜ்யம் அங்கே இருக்கிறது; அங்கே வாசம் செய்யும்படியான நித்திய ஜீவனும் நமக்குக் கொடுக்கப்படும் (ஏசாயா 45 : 17, யோ 10 : 27, 29)
இணங்கு:- ஆகா நல்லது! அப்புறம் வேறென்ன?
கிறி:- நமக்குச் சூட்டும்படியாக மகிமையின் கிரீடங்களும் அங்கே இருக்கின்றன; நாம் தரித்துக்கொள்ளும்படி அங்கிகளும் இருக்கின்றன. அந்த அங்கிகளைத் தரித்துக் கொண்டால், நாம் உன்னத வானத்தில் வல்லமையாய் பிரகாசிக்கும் சூரியனுடைய ஜோதிமயமாய் விளங்கு வோம். (2 தீமோ 4 : 8, வெளி 22 : 5, மத்தேயு 13 : 43)
இணங்கு:- சந்தோசம், சந்தோசம், பின்னும் வேறென்ன உண்டு?
கிறி:- அங்கே அழுகையும் இராது; துக்கமும் இராது; அந்த நாட்டின் அதிபதி நம்முடைய கண்ணீர் யாவையும் துடைத்துப் போடுவார். (ஏசாயா 25 : 8, வெளி 7 : 16, 21 : 4)
இணங்கு:- அங்குள்ள நமது கூட்டாளிகளைப் பற்றிச் சிலவற்றைச் சொல்லும் ஐயா, நான் கேட்கட்டும்.
கிறி:- அங்கே நாம் கேரூபின்கள் சேராபீன்களோடு இருப்போம் (ஏசா 6 : 2, 1 தெச 4 : 16, வெளி 6 : 11) நமது கண்ணைப் பகட்டும் பல ஜீவன்கள் அங்கே உண்டு. மேலும் அவ்விடத்துக்கு நமக்குமுன்னே போய்ச் சேர்ந்த இலட்சாதி இலட் சமும், கோடானுகோடியுமான ஆத்துமாக்களை நாம் பார்ப்போம். அங்குள்ள எவரும் ஆகாமியர் அல்லர், எல்லாரும் பரிசுத்தமும் நேசமும் உடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தேவ சமூகத்தில் உலாவி, அவருடைய திருமுக தரிசனம் பெற்று நீடூழி காலம் வாழ்கிறார்கள்.
எல்லாவற்றையும் சுருக்கிச் சொன்னால், பொற்கிரீடங்கள் தரித்திலங்கும் மூப்பரையும் (வெளி 4:4) பொற் கின்னரங்களைப் பிடித்திலங்கும் பரிசுத்த கன்னியாஸ்திரீகளையும் நாம் காண்போம். அதுவுமல்லாமல், அந்நாட்டு அதிபதிக்காக (வெளி 1:5) தேசாபிமானம் உடையவர்களாய் இருந்ததின் நிமித்தம் கண்டம் துண்டம் ஆக்கப்பட்டவர்களையும், அக்கினியில் கொழுத்தப்பட்டவர்களையும், மிருகங்களுக்கு இரை யானவர்களையும், சமுத்திரத்தில் அமிழ்த்தப்பட்டவர்களையும் அங்கே பார்ப்போம். (யோவான் 12 : 25) அவர்கள் எல்லாரும் அழிவில்லாமையை ஒரு அங்கியைப் போல தரித்துக் கொண்டு மகத்துவமாய் விளங்குவார்கள். (2 கொரிந்தியர் 5: 2, 3 , 5.)
இணங்கு:- ஆகா! என்னென்ன சந்தோசங்கள் எல்லாம் இருக்கின்றன அப்பா! அதைப்பற்றிக் கேட்பதே மனதைப் பரவசப் படுத்துகிறதே; அனுபவித்தால் என்னமாய் இராது; இதில் நமக்கும் பங்கு அகப்படுமா? எவ்விதமாக அப்பங்கை பெற்றுக் கொள்ளலாம்?
கிறி:- அந்நாட்டு அதிபதியாகிய கர்த்தர் அதைக் குறித்து விபரமாய் இந்தப் புஸ்தகத்தில் காட்டியிருக்கிறார். அதின் மொத்தக் கருத்தைத் திரட்டிச் சொன்னால், நாம் அவை வேண்டும் என்று மெய்யான மனதைக் காட்டினால் அவை அனைத்தையும் அவர் இலவசமாய் நமக்கு அருளுவாராம் (ஏசாயா 55 : 1, 2 யோவான் 6 : 37 வெளி 21:6, 22:17)
இணங்கு:- என் நேச தோழரே, எல்லாம் என் மனதை மகிழச் செய்கின்றன. இனி நாம் கால தாமதம் பண்ணாமல் எட்டி நடந்து போவோம் வாரும்; அடி நடையைவிட்டு துடி நடை நடப்போமாக என்று சொல்லிக் கொண்டு அதுமுதல் விரைவாய் நடந்து போனார்கள்.