எனது இராஜஸ்தான் சுவிசேஷப் பிரயாண நினைவுகள் – 6
நான் எனது தேவ ஊழியங்களை முடித்து இறுதியாக ஜெய்ப்பூர் வந்து சேர்ந்தேன். நான் ஜெய்ப்பூர் வந்ததும் அங்குள்ள அன்பான விசுவாசிகள் தங்கள் தங்கள் வீடுகளுக்கு என்னை அழைத்துச் சென்று மிகவும் அன்போடு உபசரித்தனர். பட்டினி பசியாக கிடந்து வெல்லத்தையும், தண்ணீரையும் குடித்து ஊழியம் செய்து திரும்பிய என்னை வட இந்திய சுவையான ஆகாரங்களால் என் வயிற்றையும் கூட நிரப்ப அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டார்கள். இராஜஸ்தானத்தில் அடிமையின் மூலம் நடைபெற்ற ஊழியங்களின் சகல விபரங்களையும் அவர்கள் கேட்டு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
“இராஜஸ்தானின் கிராமங்களுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல இதுவரை மிகவும் பயத்தோடிருந்த எங்களைத் தேவன் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிலிருந்து உங்களைக் கொண்டு வந்து எங்களை வெட்கப்படுத்திவிட்டார். எங்கள் கண்கள் திறந்துவிட்டன. இனி நாங்கள் நிச்சயம் ராஜஸ்தான் கிராமங்களுக்குச் சென்று தேவனுடைய சுவிசேஷத்தை தைரியமாகக் கூறுவோம்” என்று மிகவும் உணர்ச்சிவசப் பட்டவர்களாக பாஸ்டர் சகோதரன் C.V.ராபர்ட்ஸ் அவர்கள் சொன்னார்கள். விசுவாசிகளிடம் நான் போவதற்கு விடைபெற்றபோது உண்மையில் அவர்கள் கண்கலங்கினார்கள். “நீங்கள் போக வேண்டாம். எங்களோடிருந்து தேவ ஊழியம் செய்யுங்கள்” என்று என்னை மிகவும் வற்புறுத்தினார்கள். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
நான் எனது தென் இந்திய பயணத்தை ஆரம்பிப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் பாஸ்டர் சகோதரன் ராபர்ட்ஸ் அவர்கள் மிகவும் உள்ளமுருகி தேவ அன்பின் பாரத்தோடு எனக்காக ஜெபித்து என்னை ஆசீர்வதித்தார்கள். பின்னர் நான் ஜெய்ப்பூர் ரயில்வே ஜங்ஷனுக்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து ஆக்ரா பட்டணம் செல்லும் எக்ஸ்பிரஸ் நடு இரவில் புறப்படுகின்றது. அந்த வேளை இருந்த கொடிய குளிரிலும் கர்த்தருடைய பிள்ளைகள் மூவர் என்னை வழி அனுப்ப ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். ரயில் புறப்படும் நேரம் வந்தது. என்னை வழி அனுப்பி வைக்க வந்ருந்த மூன்று தேவ பிள்ளைகளும் என்னைத் தங்களுடைய மார்போடணைத்து முத்தமிட்டு அனுப்பினர். கிறிஸ்துவுக்குள்ளான அவர்களின் அன்பு அவ்வளவு பெரியதாக விருந்தது. கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
ரயில் புறப்பட்டதும் என் நீண்டகால ஆவலைப் பூர்த்தி செய்த என் நேச இரட்சகரை முழு இருதயத்தோடும் துதித்தேன். இருளைக் கிழித்துக்கொண்டு ஆக்ரா நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் வர, வர ஒரு வார்த்தை மட்டும் என் காதுகளில் தொனித்துக் கொண்டே இருந்தது. இராஜஸ்தானில் நான் ஊழியம் செய்த நாட்களில் ஒவ்வொரு சுவிசேஷ துண்டுப்பிரதியையும் நான் மக்களுக்குக் கொடுக்கும் சமயங்களில் அவர்கள் என்னைப் பார்த்து கேட்கும் ஒரு கேள்வி அது (மத்லப் கியா ஹை) என்பதாகும். “இந்த தாளின் அர்த்தம் என்ன?” “இந்த காகிதத்தை எதற்காகக் கொடுக்கின்றீர்கள்?” என்பதே அவர்கள் எழுப்பும் வினா!
மத்லப் கியா ஹை: ஆம் இதை வாசிக்கும் தேவப்பிள்ளையே, இராஜஸ்தானின் தேவ ஊழியம் எத்தனை அவசியமானது என்பது உங்களுக்குத் தெரிகின்றதா? நீங்களும் நிச்சயமாக உங்கள் நேசரை, உங்களுக்காகச் சிலுவையைத் தெரிந்து கொண்ட அன்பரை அந்த இராஜஸ்தான் மாநிலத்தில் சென்று அறிவிக்க கர்த்தர் விரும்புகின்றார் என்பதை மறவாது உங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.