ஆண்ட்ரு போனர் சிறந்த ஜெப வீரனாக இருந்தார். தம்முடைய திருச்சபையின் குருத்துவ ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் அவர் தமது கடிதங்கள் ஒன்றில் "பிரசங்கிப்பதைவிட ஜெபிப்பதே இந்த நாட்களில் அத்தியந்த அவசியம் என்பதை நான் அதிகமாக உணருகின்றேன். நாளுக்கு நாள் போராட்டத்தையும் பரிந்து மன்றாடுதலையும் அடிப்படையாகக் கொண்டு ஓர் முகத்தோடு நான் ஜெபிப்பதால் பிரசிங்கிப்பதை விட ஜெபிப்பதே என் மாம்சத்திற்கு கடினமானதாகக் காணப்படுகின்றது" என்று எழுதினார்.
ஆண்டுகள் கடந்து செல்லச் செல்ல அவருடைய ஒவ்வொரு நாளின் முக்கியமான பணி அவருடைய ஜெபமாகவே இருந்தது. பின் வந்த நாட்களில் அவருடைய கடிதத் தொடர்புகள் மற்றும் அவரைச் சந்திக்க வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற தடங்கல்கள் அவருக்கு ஏற்பட்ட போதிலும் தினமும் 2 முழுமையான மணி நேரங்களை தன்னுடைய அன்பின் ஆண்டவரோடு தனி ஜெபத்திலும் வேத வசன தியானத்திலும் செலவிடாமல் அவர் வெளியே செல்லுவதில்லை. அது அவருடைய பரிசுத்த ஜீவியத்தின் சட்ட ஒழுங்காக இருந்தது. ஓய்வு நாட்களின் மாலை வேளைகள் எல்லாம் அவருடைய ஜெப வேளைகளாக இருந்தன. ஆண்ட்ரு போனரின் படிப்பு அறையின் உள்ளே அமைந்திருந்த கணப்பு அடுப்பின் மரச் சட்டத்தில் "எவன் ஒருவன் உண்மையாகவே ஜெபித்தானோ அவன் தனது படிப்பில் பாதியை படித்து முடித்தாயிற்று" என்று எழுதப்பட்ட வாசகம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
அவருடைய நாட் குறிப்பு புத்தகத்தில் அவருடைய ஜெப வேளைகளை குறித்து அவர் எழுதி வைத்திருந்த வாசகங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. சிலவற்றைக் கவனியுங்கள்:-
புதன் 26 ஆம் நாள்:- நான் மிகவும் குறைவான நேரம் தேவனோடு இன்று தனித்திருந்தமைக்காக பெரிதும் மனம் கலங்குகின்றேன். நான் என் ஜீவியத்தில் பயனுள்ள விதத்தில் இருந்த சந்தர்ப்பங்களுக்காக சந்தோசம் கொள்ளாமல் தேவனை விசுவாசத்தோடு பற்றிப்பிடித்து அவரை என் விசுவாசக் கண்களால் கண்டு களிகூர்ந்த ஜெப மணி நேரங்கள் நிரம்பிய என் நாட்களுக்காக ஆனந்தம் கொள்ளுகின்றேன்.
சனிக்கிழமை முதலாம் நாள்:- "நேற்றையத் தினத்தை முற்றுமாக எனது தனி ஜெபத்திற்காக நான் அப்பால் ஒதுக்கி வைத்து ஜெபித்தேன். ஓ, நான் அதிகமாக ஜெபியாதிருப்பது எத்தனை மடமையான முட்டாள்தனம்"
மார்ச் மாதம் 22 ஆம் நாள்:- "டன்சினான் ஊர் காட்டுப் பகுதியை நான் நினைவுகூறுகின்றேன். ஆ, ஒரு நாள் நான் அந்தக் காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது ஜெபிக்க வேண்டுமென்ற மிகுந்த உள்ளுணர்வு எனக்குள் உண்டாயிற்று. உடனே நான் அந்தக் காட்டிலுள்ள புல் மைதானத்தில் முழங்கால் ஊன்றினேன். என் தலைக்கு மேலாக நீல நிற வானம் வியாபித்துக் கிடந்தது. நட்சத்திரங்கள் வானில் கண் சிமிட்டிக் கொண்டிருந்த இரவு நேரம் அது. அப்பொழுது நான் என் உள்ளம் திறந்து இவ்விதமாக ஜெபித்தேன். "ஓ, என் அனந்த ஞான சொரூபியே, என் தலைக்கு மேலாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரக் கூட்டங்களின் ஓடு பாதையை உம்மால் மாற்றி அமைப்பது கடினம் அல்லவே! அதைப் போல அந்தக் குறிப்பிட்ட கிறிஸ்தவ குடும்பத்தின் (இந்தக் குடும்பத்தின் இரட்சிப்புக்காக ஆண்ட்ரு போனர் ஜெபித்து வந்து கொண்டிருந்தார்) உலக ஆடம்பரப் போக்கையும் மாற்றி அவர்களை உம் வழிப்படுத்துவது உமக்கு ஒன்றும் பெரிய காரியம் அல்லவே" என்று ஜெபித்தேன். அந்த என் தாழ்மையான ஜெபத்தை தேவரீர் அங்கீகரித்தீர்.
வியாழன் 29 ஆம் நாள்:- "இந்த நாளின் மாலை 3 மணி நேரங்களை நான் தேவனோடு ஜெபத்தில் செலவிட்டேன். அதைத் தொடர்ந்து மீதியான மணி நேரங்களை உபவாச ஜெபத்தில் கழித்தேன். இவ்விதமான உபவாச ஜெபம் தேவனுடைய சமூகத்தினின்று என் பார்வையை திருப்பச் செய்யும் என்னுடைய உலகப்பிரகாரமான சிந்தையை முற்றுமாக சிறைப்பிடித்து நிர்மூலமாக்க எனக்கு உதவி செய்ததற்காக கர்த்தரைத் துதிக்கின்றேன்"
நவம்பர் 10 ஆம் நாள்:- "ஆண்டவரோடுள்ள எனது தனிப்பட்ட அன்பின் உறவில் நான் மிகவும் குறைவுபட்டு காணப்படுவதை என்னளவில் அதிகமாக உணருகின்றேன். என் ஆண்டவரை இனிமேல் நான் இன்னும் அதிகமாக நேசிப்பேன் என்று இன்று அதிகாலை பொருத்தனை செய்து கொண்டேன். ஆவிக்குரிய புத்தகங்களை வாசித்தல், பிரசங்கங்கள் செய்தல் போன்றவற்றால் உண்டாகும் சந்தோசத்தைவிட தேவனோடு ஜெபத்தில் தனித்திருப்பதில் கிடைக்கக்கூடிய பரலோக சந்தோசத்தை மாத்திரமே நான் இனி அதிகமாக வாஞ்சிப்பேன்"
செவ்வாய் 18 ஆம் நாள்:- "இன்று அதிகாலை நான் கண் விழித்து வெளியே உற்று நோக்கினேன். அப்பொழுது காலை சுமார் 4 மணி. எனது ஜன்னலுக்கு நேராக மேலே விடிவெள்ளி நட்சத்திரம் பால் போன்ற தெளிந்த ஆகாயத்தில் தனித்து வெட்டிப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடியின் ஒரு பகுதி காலை நேரத்தின் மூடு பனியால் மங்கலாகவும் அடுத்த பகுதி நல்ல தெளிவாகவும் இருந்தது. அந்த தெளிவான ஜன்னல் பகுதி வழியாக விடிவெள்ளி நட்சத்திரத்தை நான் துலாம்பரமாகக் காண முடிந்தது. "நான் பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாக இருக்கிறேன்" (வெளி 22 : 16) என்ற இரட்சா பெருமானின் வார்த்தை என் நினைவுக்கு வந்தது. கிறிஸ்துவே எனக்கு எல்லாவற்றிலும் எல்லாமாக பொழுது விடியுமட்டும் இந்த உலகத்தில் எனக்கு இருக்கின்றார். நான் எழுந்து ஜெபித்த பின்னர் அப்படியே தூங்கிவிட்டேன். நான் கண் விழித்துப் பார்த்தபோது காலைச் சூரியன் என் ஜன்னல் கண்ணாடிகளில் பிரகாசித்து என் அறை முழுவதையும் தன் ஒளியால் நிரப்பிக் கொண்டிருந்தது. சரீர உயிர்த்தெழுதல் இப்படித்தானே இருக்கும் என்று நான் எனக்குள் பூரிப்புடன் எண்ணிக் கொண்டேன்"
ஆண்ட்ரு போனர் தம்முடைய ஞாயிறு ஆராதனைகளுக்காக தம்முடைய பிரசங்கங்களை தேவ சமூகத்தில் ஆயத்தம் செய்வதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார். வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களும் அவர் தம்மைச் சந்திக்க மக்களை அனுமதிப்பதே இல்லை. மிக மிக ஆத்திர அவசரமான காரியங்களாக இருந்தால் அன்றி அவர் எவரையும் தம்முடைய அறைக்குள் மேற் குறிப்பிட்ட தினங்களில் வரவொட்டார். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ஆண்ட்ரு போனர் தம்முடைய பிரசங்கத்தை தேவனுடைய பாதபடிகளில் மிகுந்த ஜெபத்தோடு ஆயத்தம் செய்தார். அந்த நாட்களில் அவரைப் பார்த்தால் தேவனுடைய முழுமையான பிரசன்னத்துக்குள் மூழ்கி தம்மையே மறந்த நிலையில் பரலோகத்தை நோக்குபவரைப் போலக் காணப்பட்டார். ஏதோ ஒன்றை இழந்தவனைப் போல அவர் தம்முடைய பரம எஜமானரின் சேவையில் பிரசங்கங்களுக்கான குறிப்புகளை தயாரிப்பதில் மிகுந்த அங்கலாய்ப்புடன் காணப்படுவார். மோட்சப் பிரயாணப் புத்தகத்தில் "தனது கரத்தில் வேத புத்தகத்தை ஏந்தியவனாக, உலகம் தனது முதுகுக்கு பின்னால் இருப்பதாகவும், அவனது கண்கள் பரலோகத்தை நோக்கிய நிலையில் இருக்கும் மனிதனை" நாம் காண்பது போல ஆண்ட்ரு போனரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் காணப்படுவார். மற்ற வாராந்திர நாட்களில் மக்கள் அவரைச் சந்தித்து ஆவிக்குரிய ஆலோசனைகள் மற்றும் ஜெப உதவிகளை கேட்டுச் சென்றவண்ணமாகவே இருப்பார்கள். அதின் காரணமாக அவருக்கு நேரத்திற்கு நேரம் ஆகாரம் அருந்தக்கூட நேரம் இருப்பதில்லை. எனினும் அவர் தமது பிரசங்கங்களை தகுந்த விதத்தில் தேவ சமூகத்தில் ஆயத்தம் செய்யாமல் பிரசங்க பீடம் ஏறினதே கிடையாது. வாராந்திர நாட்களிலும் அவர் பல கூட்டங்களில் பேசுவது உண்டு. தன்னை அடிக்கடி சந்திக்க வரும் மக்களுக்கு பதில் கூறிக் கொண்டு அதற்கு மத்தியில் தனது வாராந்திர கூட்டங்களுக்கெல்லாம் எப்படி செய்திகள் ஆயத்தம் செய்வார் என்பது மிகவும் ஆச்சரியமான காரியமாகும். "தேவன் உனக்கு கற்பிக்கும் காரியங்களை மற்றவர்களுக்கு நீ போதிக்கும் முன்னர் முதலில் நீயே அதை உன் அளவில் அப்பியாசித்துக் கொள்" என்று அவர் கூறுவார்.
அவருடைய சரீர கட்டமைப்பு மிகவும் கம்பீரமாக அப்பழுக்கற்ற விதத்தில் இருந்தது. அவருடைய மனமானது அமர்ந்த தண்ணீர் தடாகம் போன்று தெளிந்த நிலையில் சலனமற்றதாகக் காணப்பட்டது. தேவன் தனக்கு ஒவ்வொரு நாள் இரவும் அருளும் மிக இன்பமான தூக்கத்திற்காக அவர் தம்முடைய ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தவராக இருந்தார். அவருடைய படிப்பு அறையின் பொருட்கள் எல்லாம் வெகு நேர்த்தியாக அதினதின் இடத்தில் பாங்குற வைக்கப்பட்டிருக்கும். ஒரு புத்தகமோ அல்லது ஒரு காகிதமோ அதின் இடத்தைவிட்டு விலகி இருப்பதைக்கூட அவர் காண சகிக்க மாட்டார். "ஒழுங்கற்ற நிலை ஒழுங்கற்ற கிறிஸ்தவத்தையே குறிப்பதாகும்" என்று அவர் கூறுவார். அவருடைய மேஜையில் அவருடைய வேதாகமம் மாத்திரமே இருக்கும். அவருடைய எபிரேய மொழி வேதாகமமும், கிரேக்க மொழி புதிய ஏற்பாடும் சின்ன மேஜையில் இருக்கும். அந்த மேஜை கனல் அடுப்பின் அருகில் இருக்கும். ஆண்ட்ரு போனரின் கண் பார்வை சற்று குறையும் வரை அவர் தனது தகப்பனாரின் மிகுந்த பழமையான வேதாகமத்தையே பயன்படுத்தி வந்தார். அவர் அதை பெரும் பொக்கிஷம் போல தம்முடன் வைத்துக் காத்துக் கொண்டிருந்தார். அந்த வேதாகமத்தின் உள் பக்க முகப்பு அட்டையில் கீழ்க்கண்டவாறு அவர் எழுதி வைத்திருந்தார்:-
தாட்கள் நிரம்பிய மாட்சிமையான புத்தகம் பாராய்
வழி, சத்தியம், ஜீவன், இயேசு ஒருவரே என்று
அது கூறுவதை கேளாய்.
கருத்தோடும் பயத்தோடும் நீ அதை வாசித்து
கவனமாகத் தேடிவிட்டால் அங்கு
இயேசுவையே கண்டிடுவாய்"!
ஆண்ட்ரு போனரின் படிப்பு அறையில் "நீரோ மாறாதவராயிருக்கிறீர்" என்ற வேத வசன வாக்கு அட்டை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அது அவருக்கு பிடித்தமான அவரே அச்சிட்ட தேவ வார்த்தையாகும். ஒரு சமயம் ஒரு கிறிஸ்தவ அம்மையார் வாழ்வின் பிரச்சினைகளால் மிகவும் மனம் சோர்ந்து உள்ளத்தின் குமுறல்களோடு அவரைச் சந்தித்து ஆறுதல் பெறுவதற்காக அவரை நாடி வந்தார்கள். அந்த அம்மையார் ஆண்ட்ரு போனருடைய முகத்தைப் பார்த்ததும் சந்தோஷித்து மனம் மகிழ்ந்த நிலையில் "நீங்கள் எனக்கு இப்பொழுது எதுவும் சொல்லத் தேவையில்லை. எனக்குத் தேவையானதை நானே கண்டு கொண்டேன்" என்று கூறினார்கள். "அதோ பாருங்கள், நீங்கள் சுவரில் மாட்டி வைத்திருக்கும் "நீரோ மாறாதவராயிருக்கிறீர்" என்ற தேவ வசனம் எனக்குத் தேவையான அனைத்து ஆறுதல்களையும், அரவணைப்பையும் தந்துவிட்டது" என்று சொன்னார்கள்.
அவருடைய அறையின் கனல் அடுப்பு அலமாரியில் புகழ்பெற்ற தேவ பக்தன் சாமுவேல் ரூத்தர்போர்ட் என்பவருடைய பிரசங்க பீடத்தின் ஒரு மரத் துண்டு வைக்கப்பட்டிருந்தது. அதை அவர் ஒரு அரிய பொக்கிஷமாக வைத்திருந்தார். இந்த உலகத்தை விட்டுக் கடந்து சென்ற தேவ பக்தர்களின் கல்லறைகளைப் பார்ப்பது, அவர்கள் பயன்படுத்தின பொருட்களைக் காண்பது, அவர்கள் வாழ்ந்த பண்டைய காலத்து வீடுகளுக்குச் சென்று வருவது எல்லாம் ஆண்ட்ரு போனருக்கு மிகுந்த விருப்பமாகும். 1881 ஆம் ஆண்டு கோடை காலம் அமெரிக்கா சென்றிருந்த போது அவர் அமெரிக்கா தேசத்தின் சிறந்த பரிசுத்தவான்களான யோனத்தான் எட்வர்ட்ஸ் மற்றும் டேவிட் பிரைய்னார்ட் என்பவர்களுடைய கல்லறைகளைப் பார்த்துவிட்டு தம்முடைய மகளுக்கு கீழ்க்கண்டவாறு கடிதம் எழுதினார்:-
"கடந்த சனிக்கிழமை நார்த்தம்டன் பட்டணத்துக்குச் சென்று யோனத்தான் எட்வர்ட்ஸ் என்ற மாபெரும் தேவ மனிதரின் கல்லறையைக் காணச் சென்றிருந்தேன். ஆ, நான் அதைக் காண எத்தனையாக வாஞ்சை கொண்டிருந்தேன் என்று நீ நினைக்கின்றாய்? அவருடைய வீட்டிற்கு முன்னால் உள்ள இரண்டு பழைய எல்ம் மரங்களுக்குக் கீழாக நான் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். எனக்குள்ளிருந்த ஆவலால் நான் அந்த மரங்களில் ஒன்றில் சற்று உயரம் ஏறியும் விட்டேன். அந்த மரங்களின் பட்டையில் கொஞ்சம் ஞாபகத்திற்காக நான் எடுத்துக் கொண்டு வருகின்றேன்"
|