பிரயாணிகள் முகஸ்துதியை சந்தித்தல்
அதின்பின்பு அவர்கள் இருவரும் வழிநடந்து போனார்கள். அறிவீனனும் அவர்களைப் பின்தொடர்ந்தான். தாங்கள் நடக்கிற ராஜ பாதையைப்போல் நேராய் போகிற ஒரு கிளைப்பாதையின் 1 துவக்கமட்டும் அவர்கள் போனார்கள். அப்புறம் இரண்டில் எதின் வழியாய் நடக்கலாம் என்று அவர்களுக்கு தெரியாமற் போயிற்று. ஏனெனில் இரண்டும் ஒன்றுபோல் நேர்வழியாய்க் காணப்பட்டன. ஆதலால் என்ன செய்யலாம் என்று சற்று நேரம் அவ்விடத்திலே நின்று ஆலோசித்தார்கள். வழியின் மயக்கத்தையிட்டு அவர்கள் ஆலோசித்துக் கொண்டு நிற்கவே, கன்னங்கறேர் என்ற மேனியின் மேல் ஒளிமயமான உடுப்பைத் தரித்திருந்த ஒருவன் வந்து, நீங்கள் இங்கே நின்று கொண்டிருக்கிற காரணம் ஏது? என்று கேட்டான். அதற்கு அவர்கள்: நாங்கள் உச்சிதபட்டணத்திற்குப் பிரயாணம் போகிறோம், இந்த இரண்டு வழிகளில் எதின் வழியாக நடக்கலாம் என்று தெரியாமல் திகைத்து நிற்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு முகஸ்துதி: அப்படியானால் என் பின்னே வாருங்கள், 2 நானும் அங்கேதான் போகிறேன் என்று சொன்னான். நல்லது வருகிறோம் என்று அவன் பின்னாலே போனார்கள். போகப்போக அந்த வழி அவர்கள் நாடிப்போகும் பட்டணத்துக்கு தூர விலகி விலகிக் கடைசியாக எதிர்த்திசையாகவே நடத்திக்கொண்டு போயிற்று. அவர்கள் பின்னும் அவனை விடாமல் அவன் பின்னே சென்றார்கள். அவர்கள் ஆகா! வழி தப்பியே போனோம் என்று அறிந்து கொள்ளுகிறதற்கு முன்னதாகவே அவன் அவர்களை ஒரு வலைக்குட் படுத்திவிட்டான். இருவரும் வலையில் அகப்பட்டுக் கொண்டு என்ன செய்யலாம் என்று தெரியாமல் ஒருவரையொருவர் திருக திருகப் பார்த்தார்கள். அந்த க்ஷணமே தங்கள் வழிகாட்டியின் மேல் இருந்த ஒளிமயமான உடுப்பு தானாக அவிழ்ந்துவிட அதினுடைய சுய கரிய ரூபம் வெளிப்பட்டது. உடனே தாங்கள் இருக்கிற இடம் இன்ன தென்று கண்டார்கள். அவர்கள் தங்கள் சாமர்த்தியத் தால் அவ் விடத்தை விட்டு வெளியேறக் கூடாதிருந்ததால், அழுது, அங்க லாய்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் வலைக்குள் கிடந்தார்கள்.
கிறி: அப்போது கிறிஸ்தியான் தன் கூட்டாளியைப் பார்த்துச் சொல்லுகிறான்: நானே மோசத்துக்குள் அகப்பட்டுக் கொண்டதை இப்போது அறிகிறேன். அந்த இடையர் முகஸ்துதிக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லையா? “பிறனுக்கு முகஸ்துதி செய்கிறவன் அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்” (நீதிமொழிகள் 29 : 5) என்று ஒரு ஞானவான் சொல்லிய வாசகம் சத்தியம் என்று நாமே கண்டு கொண்டோம் என்றான்.
திடநம்: அதற்கு திடநம்பிக்கை மறுமொழியாக சொல்லுகிறான்: அண்ணா! அவர்கள் வழியின் விவரங்களைக் காட்டும் ஒரு சீட்டையும் தந்தார்களே, அதைப் படித்துப் பார்க்கவும் மறந்துபோய் இப்படி அவதிக்குள் அகப்பட்டுக்கொண்டோம். இந்த விஷயத்தில் தாவீது என்பவர் நம்மைவிடப் புத்திசாலியாய் இருக்கிறார். ஏனெனில் அவர்: “மனுஷரின் செய்கைகளைக்குறித்து நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்” (சங்கீதம் 17 : 4) என்று சொன்னார் என்றான்.
இவ்வண்ணமாக அவர்கள் பலவாறாகச் சொல்லி வலைக்குள் ளேயே புலம்பிக்கொண்டு கிடந்தார்கள். கடைசியாக ஜோதிமயமான 3 ஒரு ஆள், மெல்லிய மணிக்கயிறுகள் தொங்கும் ஒரு சவுக்கும் கையுமாய் புறப்பட்டு வருகிறதைக் கண்டார்கள். அவர் கிட்ட வந்தவுடனே அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்? இவ்விடத்தில் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள், நாங்கள் சீயோனுக்குப் போகும் பிரயாணிகளாய் இருக்கிறோம். வந்த வழியில் ஒளிமய உடை தரித்த ஒரு கருப்பன் எங்களை இப்படி வழிவிலகச் செய்துவிட்டான். நானும் அங்கே போகிறவன்தான், என் பிறகாலே வாருங்கள்என்று எங்களை ஏமாற்றி இப்படி வலைக்குள் மாட்டிவிட்டான் என்றார்கள். அதற்கு சவுக்குப் பிடித்து வந்தவர் சொல்லுகிறார்: அவன்தான் ஒளியின் வேஷம் தரித்த முகஸ்துதி என்று அழைக்கப்படுகிற ஒரு கள்ள அப்போஸ்தலன் (தானியேல் 12 : 32 2 கொரிந்தியர் 11 : 13, 14) என்று சொல்லி வலையை அறுத்து அவ்விருவரையும் வெளியே வரவிட்டார். அப்புறம் என் பிறகாலே வாருங்கள் என்று கூட்டிக் கொண்டு போய் அவர்கள் ராஜ பாதையில் இருந்து பிரிந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்தார்.
பின்பு அவர்: நீங்கள் நேற்று இரவு எங்கே தங்கியிருந்தீர்கள்? என்று கேட்டார். ஆனந்தமலை இடையர் குடியில் தங்கியிருந்தோம் என்றார்கள். வழியின் விபரங்களை குறித்து எழுதிய ஒரு சீட்டை அவர்கள் உங்களுக்குத் தரவில்லையா? என்று கேட்டார். “தந்தார்கள்” என்று அவர்கள் சொன்னார்கள். நீங்கள் அந்த இரு வழியின் துவக்கத்தில் நின்று ஆலோசிக்கும்போது அந்த சீட்டை எடுத்து வாசித்துப் பார்க்கவில்லையா? என்று கேட்டார். “இல்லை” என்றார்கள். “ஏன் வாசிக்கவில்லை?” என்று கேட்டார். “மறந்து போனோம்” என்றார்கள். முகஸ்துதிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இடையர் உங்களுக்குச் சொல்லவில்லையா? என்று கேட்டார். ஆம், சொன்னார்கள், ஆனால் இப்படி வயிற்றுப் பிள்ளை வழுகி விழுகிறாற்போல் பேசுகிற இவன் நம்மை ஏமாற்றுவானா என்று நாங்கள் எண்ணிவிட்டோம் என்றார்கள். (ரோமர் 16 : 17, 18)
அப்புறம் அவர் அவர்கள் இருவரையும் படுக்க வைத்து, அவர்கள் படுத்த பின்பு இனி அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய நல் வழியைப் போதிக்கும்படி (உபாகமம் 26 : 2) தமது மணிக்கயிற்றுச் சவுக்கால் அவர்களை தண்டிக்கிறதை நான் என் சொப்பனத்தில் கண்டேன். அவர் சவுக்கை வீசி அடிக்க அடிக்க “நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாய் இருந்து மனந்திரும்பு” (2 நாளாகமம் 6 : 26 வெளி 3 : 19) என்று சொல்லிக் கொண்டே அடித்தார். நன்கு அடித்த பின்பு, இனிமேல் இடையர் சொன்ன போதனைகளை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வழியிலே நடவுங்கள் என்று சொன்னார். அவர்கள் அவர் செய்த உபகாரங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்தி ராஜ பாதை வழியாக மெதுவாக நடந்து:
வாருங்கள், வாருங்கள்
வந்தெங்களைக் கேளுங்கள்,
பாருங்கள், பாருங்கள்
பட்ட பாட்டைப் பாருங்கள்:
வழிதப்பிப் போவோருக்கு வரும் வாழ்வைப் பாருங்கள் – வாருங்கள்.
உத்தம பக்தியை
தள்ளும் பிரயாணிகள்
இச்சக மூர்த்தியால்
ஏமாந்து போய்க் கண்ணியில்;
சிக்குண்டு அலறுவார், தேவனே துணைசெய்வார் – வாருங்கள்.
தேவன் துணை நின்று
தெத்தறுத்து விட்டாலும்,
ஏகனே! திரும்பவும்
ஏங்க, ஏங்க அடிப்பார்;
எச்சரிப்பாய் நடக்க, எச்சரிக்கையாய் இரு – வாருங்கள்
என்று பாடிக்கொண்டே போனார்கள்.
1. இருவழிகள்: கிறிஸ்தவர்கள் தாங்கள் நடந்துகொள்ள வேண்டிய வகையைப்பற்றி சிலதரம் ஒன்றும் அறியாமல் கலங்கிப்போகிறார்கள். அவர்கள் வேதத்தை ஆராயாமலும், ஜெபம் செய்யாமலும், தாங்களே மனதில் சும்மா ஆலோசித்து, மற்றவர்களுடைய ஆலோசனையையும் கேட்டு நடந்தால் அவர்கள் தப்பான வழிகளில் விழுந்துவிடலாம்.
2. முகஸ்துதியைப் பின்பற்றுதல்: அவரவர் தங்களுடைய நற்கிரியையின் மூலமாய் இரட்சிப்பைப் பெறலாம் என்ற போதனைக்கு இணங்கிக்கொள்ளுகிறதைக் குறிக்கிறது. இப்படி இணங்கிப்போகிறவர்கள் சத்திய வழியை விட்டுப் பிரிந்து கள்ளப்போதனையாகிய வலைக்குள் அகப்படுகிறார்கள்.
3. ஜோதிமயரூபி: இது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. விசுவாசிகள் வழிவிலகிப்போகையில் அவர் கனத்த பாவ உணர்வோடு அவர்களைச் சந்திக்கப் பின்தொடர்ந்து, அவர்கள் தங்கள் வழிகளின் பொல்லாப்பைக் காணச் செய்து, மனந்திரும்புதலுக்கு வழிநடத்தி, கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கும்படி திரும்பவும் அவர்களைக் கொண்டு வருகிறார்.