நித்தியமே, ஐயோ நித்தியமே! முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே!
நித்தியம் (Eternity) முடிவற்றது. மகா நீண்டது. நித்தியத்தைக் குறித்து கூப்பர் (C.A.Cooper) என்ற பரிசுத்தவான் தன்னுடைய செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருப்பதை நான் இங்கு எழுத விரும்புகின்றேன்.
வாழ்க்கையானது, தனது முடிவற்ற நீண்ட காலக்கோட்டில் மகா குறுகியதொரு நாளாக மாத்திரம் இருக்கின்றது. துரிதமாக வாழ்வின் சூரியன் அஸ்தமித்து நித்தியத்தின் அதிகாலை உதயமாகும். முடிவற்ற நித்தியம் எல்லா ஆத்துமாக்களிலும் இருக்கின்றது. அந்த ஆத்துமா இரட்சிப்பைப் பெற்றிருந்தாலும், பெற்றிராவிட்டாலும் நித்தியம் அதிலுண்டு. “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கின்றார், உலகத்தையும் (நித்தியத்தையும் Eternity) அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்………………………………” (பிரசங்கி 3 : 11 ) மரணம் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி கொடுக்க முடியாது. இகலோக மானிட வாழ்வுக்கு அது முடிவு உண்டாக்கலாம். ஆனால் அதற்கப்பாலுள்ள வாழ்வின் முடிவற்ற தொடர்ச்சியை அதினால் இடைமறிக்க இயலாது.
பிரேதப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருக்கும் மலரால் அலங்கரிக்கப்பட்ட உன் ஜீவனற்ற சரீரத்திற்கு முன்பாக குருவானவர் ஒரு நாள் நின்று கொண்டு “மண்ணுக்கு மண்ணாகவும், சாம்பலுக்குச் சாம்பலாகவும், புழுதிக்குப் புழுதியாகவும் இந்த சரீரத்தை ஒப்புக் கொடுக்கின்றேன்” என்று கூறும்பொழுது “உண்மையான உன்னை” (Real you) குருவானவர் கூறவில்லை. அவர் சொன்னது எல்லாம் சாவாமையின் ஜீவனைப் பூலோகத்திலிருந்த நாட்களில் தன்னகத்தே பாதுகாத்து வைத்துக் கொண்டிருந்த களிமண்ணான உனது சரீரத்தைத்தான் கூறினார்.
” நீ ” ஒருக்காலும் சாகப் போவதில்லை. கோடைகால இரவு காலங்களில் மாத்திரம் கண் சிமிட்டி ஒளி வீசி நடனம் பண்ணிப் பிறகு மறைந்து அழியும் வெறும் மின்மினி பூச்சி அல்ல நீ. வானலோகப் பிதாவின் வீட்டில் நித்திய காலமாக ஜொலித்து இலங்கப்போகும் மாட்சிமை நட்சத்திரம் நீ.
மனிதன் ஏதோ தெருவைச் சுத்தம் பண்ணும் தோட்டிக்காகவும், அடுப்படி வேலைக்கான ஒரு சமையற்காரனுக்காகவும், ஒரு பணிப் பெண்ணுக்காகவும் கர்த்தரால் படைக்கப்பட்டவர்கள் அல்ல. சர்வ வல்ல தேவனாகிய தம்மை மனிதன் கண்டு உணர்ந்து அனுபவித்து ஆனந்தித்துக் களிக்கவே அவன் படைக்கப்பட்டிருக்கின்றான். Man’s chief end is to glorify God and enjoy him forever “மானிட வாழ்வின் பிரதான நோக்கம் தேவனை மகிமைப்படுத்துவதும் அவரில் ஆனந்தித்து களிகூருவதுமே”.
மானிட வாழ்வின் நிகழ்ச்சிகளும், சம்பவங்களும், அதின் நீண்ட ஆயுசு நாட்கள் என்று நாம் ஜம்பம் பேசிக் கொள்ளும் காலங்கள் அனைத்தும் முடிவில்லாத நீண்ட நித்தியத்தின் கண்ணோட்டத்தில் யாரோ ஒருவர் சொன்னது போல ” நாம் சிசுவாக இருந்தபோது நாம் ஊஞ்சல் ஆடிய நமது சின்னத் தொட்டில் பலகை நமது பளிங்குக் கல் கல்லறையில் ஏற்படுத்திய சின்னஞ்சிறிய சிராய்ப்புகளேயன்றிப் பிறிதொன்றுமில்லை.
நித்தியம் (Eternity) எவ்வளவு நீளமானது என்று நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? வானிலுள்ள நட்சத்திரங்களை எல்லாம் எண்ணித் தொகையிட்டுக் கொள்ளுங்கள். எல்லா நட்சத்திரங்கள் என்று நான் கூறும்பொழுது வான மண்டலத்தின் பால்வெளி வீதியிலுள்ள Milky way galaxy கோடானு கோடி நட்சத்திரக் கொத்துக்களையும் சேர்த்துத்தான் சொல்லுகின்றேன். அந்த எண்ணிக்கைக்கு அடங்காத பெருந்தொகையான நட்சத்திரங்கள் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு நட்சத்திரத்துக்கு 100 ஆண்டுகள் என்ற வீதத்தில் அனைத்து நட்சத்திரங்களையும் பெருக்கித் தொகை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக உலகத்திலுள்ள மாபெரும் சமுத்திரங்கள், கடல்கள், பிரமாண்டமான ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்தின் தண்ணீரையும் துளிகளாக (Drops) மாற்றுங்கள். ஒரு துளித் தண்ணீருக்கு 1000 வருடங்கள் என்ற வீதத்தில் அனைத்துத் துளி தண்ணீர்களையும் பெருக்கி அதின் மாபெரும் எண்ணிக்கையையும் ஒரு பக்கம் வையுங்கள். இறுதியாக இந்த உலகத்திலுள்ள எல்லாப் புல்வெளிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். புல்வெளிகளின் தனித்தனி புற்கள் அனைத்தையும் எண்ணித் தொகையிடுவதுடன் ஒவ்வொரு புல்லுக்கும் எத்தனை இதழ்கள் (Blades) இருக்கின்றன என்றும் கணக்கிட வேண்டும். புல்லின் ஒரு இதழுக்குப் 1000000 (பத்து இலட்சம்) வருடங்கள் என்ற வீதத்தில் அனைத்துப் புற்களின் இதழ்களையும் பெருக்கி அதின் பிரமாண்டமான எண்ணிக்கையை ஒரு புறம் வையுங்கள். இப்பொழுது மேற்கண்ட மூன்று தொகைகளையும் ஒன்றாகக் கூட்டுங்கள். அந்தப் பிரமிக்கத்தக்கதான மகா நீண்ட எண்ணிக்கையின் ஆண்டுகள் எல்லாம் ஒவ்வொன்றாகக் கழிந்து பூஜ்யத்தில் வரும்பொழுது நித்தியம் அப்பொழுதுதான் ஆரம்பித்து ஒரே ஒரு நாள் ஆகியிருக்கும்.
ஆ, நித்தியத்தின் ஆழத்தைக் கண்டவர் யார்? வாசிப்போனே, யுகாயுங்களாக, ஊழி ஊழி காலங்களாக, நீண்டு வியாபித்துக் கிடக்கும் முடிவே இல்லாத நித்தியத்தைச் சந்திக்க நீ ஆயத்தமாயிருக்கின்றாயா? அநேக மக்கள் உலகில் வளமுடன் வாழத்தயாராகின்றார்கள். இன்னும் பலர் தங்கள் மரண சாசனங்களை எழுதி வைத்துவிட்டு மரிப்பதற்கும் ஆயத்தமாகின்றார்கள். ஆனால், ஐயகோ, நீண்ட நித்திய பேரின்ப வாழ்வுக்கு அவர்கள் ஒருக்காலும் ஆயத்தமாவதில்லை. எத்தனை கொடுந் துயரம்! எத்தனை கண்ணீரின் காரியம்! எத்தனை ஈடு செய்ய முடியாத இழப்பு!
நாம், ஆண்டவர் இயேசுவில் பெற்ற நம்முடைய இரட்சிப்பின் நிச்சயமானது முடிவே இல்லாத நீண்ட நித்தியத்தை மோட்ச இன்ப நாட்டில் நம்முடைய நேச கர்த்தாவுடன் கண்ணீர் கவலையின்றி, பாடு நோவின்றி, சாவு துக்கமின்றி நித்தமும் மோட்சானந்த பாக்கியங்களில் மூழ்கித்திளைத்து வாழ நமக்கு வகை செய்கின்றது. முடிவில்லாத நீண்ட நித்தியத்தை அன்பின் கண்மணி இயேசு அப்பாவின் திருமுகப் பிரசன்னத்தின் ஒளியில் வாழ நீங்கள் உங்களை முற்றுமாக ஆயத்தம் செய்து கொண்டீர்களா? இல்லையெனில், உடன்தானே “குமாரன் கோபம் கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு அவரை முத்தம் செய்யுங்கள்” ஆச்சரிய அற்புதமாக முடிவில்லாத நித்தியத்துக்கு இந்தப் பக்கத்தில்தான் நீங்கள் இப்பொழுது இருந்து கொண்டிருக்கின்றீர்கள். பொன்னான காலத்தை எந்த ஒரு நிலையிலும் கை நழுவ விட்டுவிடாதீர்கள். இதுவே அனுக்கிரக காலம், இன்றே இரட்சண்ய நாள்.