எனது இராஜஸ்தான் சுவிசேஷப் பயண நினைவுகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆங்கில கிறிஸ்தவ பத்திரிக்கையில் இராஜஸ்தானில் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், அங்கு சுவிசேஷத்தை அறிவிக்கத் தேவன் தமது மக்களைத் தாபந்தத்தோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார் என்றும், விசேஷமாக வாலிப மக்கள் இந்த தேவ பணியைச் செய்ய முன்வரவேண்டும் என்றும் மிகவும் உருக்கமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை என் உள்ளத்தை ஆழமாகத் தொட்டது. அன்றிலிருந்தே இராஜஸ்தானுக்கு சுவிசேஷத்தை கொண்டு செல்ல வேண்டுமென்ற வாஞ்சையும், தாகமும் என்னிருதயத்தில் வளர ஆரம்பித்தது. அதற்காக ஜெபித்துக்கொண்டே இருந்தேன். ஆண்டுகள் கடந்து சென்று கொண்டிருந்தன. ஆனால், அன்புள்ள இரட்சகர் 31/1/1971 ஆம் தேதியில்தான் அடிமைக்கு அங்கு செல்ல வழி வாசலைத் திறந்து தந்தார். அவருக்கே துதி உண்டாவதாக. ஆமென்.
என் இராஜஸ்தான் பயணத்தை ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே “கர்த்தர் தேவ ஊழியத்தை வெற்றியோடு முடித்துத்தரவும், சாத்தானின் சகல அந்தகார ஆதிக்கங்களையும் கட்டிப்போடவும், அநேகரை இரட்சகரண்டை வழிநடத்த ஒத்தாசையும், கிருபையும் அருளவும்” ஆத்தும பாரத்தோடு உபவாசித்து ஜெபிக்க ஆரம்பித்தேன். நான் பிரயாணம் ஆரம்பித்த அன்று முழுவதும் எவ்வித ஆகாரமும் புசியாதவனாக கோத்தகிரியிலுள்ள விசுவாசிகளின் ஓர் முகமான ஜெபத்தோடு வழி அனுப்பி வைக்கப்பட்டேன். 1/2/71 ஆம் நாட் காலை நான் சென்னை வந்து சேர்ந்தேன். என் சரீரம் ஒரு வார காலமாக போதுமான ஆகாரமின்மையால் விட்டு விடப்பட்டிருந்தமையால் பெலவீனத்தின் மிகுதியால் மிகவும் சோர்புற்றுக் காணப்பட்டபோதினும் ஆவிக்குள்ளாக நான் மிகவும் சந்தோசமான நிலையிலிருந்தேன். சென்னையில் முதலாம் தேதி தங்கிவிட்டு 2-2-1971 ஆம் நாள் சாயங்காலம் 5 மணிக்கு சென்னையிலிருந்து டில்லிக்குப் புறப்படும் “கிராண்ட் டிரங்” எக்ஸ்பிரஸ் ரயிலில் என் வட இந்திய பயணத்தை ஆரம்பித்தேன்.
இந்தியாவில் வெகு வேகமாக ஓடும் ரயில்களில் ஒன்று மேற்குறிப்பிட்ட கிராண்ட்டிரங் எக்ஸ்பிரஸ். சென்னையைத்தாண்டி ரயில் ஆந்திர மாநிலத்தை கடந்து சென்றபோது ஆங்காங்கு பொட்டல் காடுகளிலும், வயல்களிலும் மக்கள் கூடாரமடித்து தரித்திர நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு துயரமடைந்தேன். நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு கிராமங்களையும், பெரிய பட்டணங்களையும், அடர்ந்த காடுகளையும், நீண்டு வியாபித்துக் கிடக்கும் நதிகளையும், வலுமையான காட்டாறுகளையும், பசுமை கொழிக்கும் வயல்வெளிகளையும், மலைகளையும், அவைகளின் ஊடாகக் குடையப்பட்ட நீண்ட மலைச் சுரங்கப்பாதைகளையும் விரைவு ரயில் வண்டி வெகு வேகமாகக் கடந்து சென்றது.
இரண்டு இரவும், ஒரு பகலும் சென்னை, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் மாநிலங்களின் ஊடாக ஓடிக் கடந்து 4-2-71 ஆம் தேதி காலை சுமார் 8 மணிக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள ஆக்ரா பட்டணத்தை வண்டி வந்தடைந்தது. அங்கே நான் இறங்கிக் கொண்டேன். ஆக்ராவிலிருந்து இராஜஸ்தானத்தின் தலைநகரப் பட்டணமாகிய ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயில் இரவு 8 மணிக்கு மட்டும் செல்லுகின்றபடியால் அன்றைய பகல் முழுவதையும் ஆக்ராப் பட்டணத்தில் செலவழிக்கவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.
ஆக்ரா பட்டணத்தில் நடைபெற்ற சிறியதோர் ஆச்சரிய தேவ ஊழியம்
என் விலையேறப்பெற்ற நேரங்களை வீணாக்காமல் இங்கும் சுவிசேஷ வேலையைச் செய்தேன். இங்குள்ள ஜாஷஹான் பூங்காவில், தன் தேர்வுகளுக்காகத் தனித்துப் படித்துக்கொண்டிருந்த ஒரு பட்டாதாரி மாணவனைச் சந்தித்து, இரட்சகர் இயேசுவில் நான் கண்டடைந்த இரட்சிப்பின் சந்தோசம், சமாதானத்தைப் பற்றிக்கூறி அவனையும் இரட்சகர் இயேசுவை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினேன். கிறிஸ்தவ மார்க்கத்தைப் பற்றி அவன் தெரிந்து கொண்டிருந்த தெல்லாம் ஒரு சிலுவை கோடுதான். ஒரு சிலுவைப் படத்தை அவன் பூமியில் வரைந்து இதன் கருத்து என்னவென்று என்னிடம் கேட்டான். “அந்தச் சிலுவைதான் தெய்வத்தின் மெய் அன்பின் பிரதிபிம்பம். நானும், நீயும் நமது பாவங்களுக்காகச் சாக வேண்டிய இடத்தில் இயேசு இரட்சகர் தமது பரிசுத்த இரத்தம் சிந்தி மாண்டு என்னையும், உன்னையும் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார். உனக்கு அநேக தேவர்கள், தேவிகள் உண்டென்று எனக்குத் தெரியும். ஆனால், உன்னை பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்க உனக்காக இரத்தஞ்சிந்தி மாண்ட ஒரு அன்புத் தேவதையை நீ சுட்டிக்காண்பிக்க இயலாது. அப்படி அவர்களில் ஒருவரும் உனக்காக மரிக்கவுமில்லை, ஜீவனைக் கொடுக்கவுமில்லை” என்றேன்.
மாயமான உலக வாழ்க்கையைப்பற்றியும், அது சீக்கிரமாகய்ப் பறந்து மறையுமென்றும் நான் அவனுக்குக் கூறிக்கொண்டிருந்த வேளையில் ஒரு செத்த மனிதனின் பிரேதத்தை மயானத்திற்குச் சுமந்து கொண்டு செல்லும் ஒரு கூட்டம் மக்களின் துயரக்காட்சி எங்களுக்கு மிகவும் அருகில் வந்து கொண்டிருந்தது. அதையும் நான் அவனுக்குச் சுட்டிக்காண்பித்து இரட்சகரை ஏற்றுக்கொள்ள தாமதிக்கும்போது உண்டாகும் பயங்கரமான விளைவுகளையும் நான் அவனுக்கு விளக்கிக் காண்பித்தேன். அவன் உள்ளத்தில் கர்த்தர் பேசினார். அவன் உள்ளம் உருகிற்று. “இந்த மகத்தான சத்தியங்களை இதுவரை எவரும் எனக்குக் கூறவில்லையே” என்று அவன் என்னிடம் சொன்னான். அன்பின் இரட்சகர் இயேசுவை அவன் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளப்போவதாக அவன் என்னிடம் சொன்னான். என் உள்ளம் மகிழ்ந்தது. அந்த நல்ல வாலிபனின் பெயர் ஹரி ஓம் மித்தல் என்பதாகும். எங்கள் சம்பாஷணை நீண்ட நேரம் நீடித்தது. கர்த்தருடைய ஆவியானவர் அவனுடைய உள்ளத்தில் தொடர்ந்து கிரியை நடப்பிக்கும்படி அவருடைய கிருபையின் வழிநடத்துதலுக்கு அவனை ஒப்புவித்துவிட்டு அவனது மேல் விலாசத்தைப் பெற்றுக்கொண்டு மாலை மயங்கும் நேரம் ஆக்ரா ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன்.